சனி, ஜனவரி 25, 2014

வெட்கம் ஈமானின் ஒரு பகுதி!




அல்லாஹ்வின் திருபெயரால் ...
வெட்கம் என்பது இஸ்லாம் கூறும் ஓர் அருங்குணம் . அது ஈமானின் ஒரு பகுதி , மேலும் அது முஸ்லிம்களின் கலாச்சாரம் ஆகும். அது மானக்கேடானவற்றை அழிக்கும், ஆகுமானவற்றை  செய்யத் தூண்டும் ஒரு விசேஷ குணம் ஆகும்.

வெட்கத்தை ஆடையாக அணிந்தவரிடம் மக்கள் குறை காணவும் , குறைகூறவும்  முடியாது . மனித வாழ்க்கைக்கு அது உயிர் மூச்சாக  அமைகிறது. அதனால் மனித உள்ளம்  வாழ்கிறது , வெட்கத் துடிப்பு  இருக்கும் வரை  உள்ளம் வாழும் . அது நின்றுவிட்டால் , மனித உள்ளமும் , உயிரும் செத்து விடும் .

வெட்கமுள்ளவன் மனிதனாக வாழ்வான் . மனித மிருகமாக மாறமாட்டான் . நல்லவனாக வாழ்வான் . கெட்டவனாக மாட்டான் . பாவி வெட்கப்பட மாட்டான் . வெட்கம் என்பது ஓர் அருங்குணம் , அதன் அளவுகோல்  நன்மையை செய்யும்படி தூண்டும் ..

மனிதன் அல்லாஹ்வை கண்டு வெட்கப்படும்போது தன்சொல் , செயல், உள்ளதிலிருபவற்றை அல்லாஹ் நன்கறிவான்  என நினைத்து ஆகுமானவற்றை செய்கிறான் . அனாச்சாரங்களை விடுகிறான்.

"நபி (ஸல்) அவர்கள் ஓர் அன்சாரித் தோழர் அருகே நடந்து செல்கையில் அவர் தன் சகோதரருக்கு வெட்கத்தால் வரும் விளைவுகள் பற்றி நினைவு கூறினார் . உடனே நபி (ஸல்) அவர்கள் வெட்கபடுவதின்  மீது அவரை விட்டுவிடுவீராக! அவ்வாறு தடுப்பதையும் தவிர்ந்திருப்பீராக! ஏனெனில் வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும்  என கூறினார்கள் .
நூல்: புகாரீ ; முஸ்லிம்)

ஹஜ்ரத் இம்ரான் பின் ஹூசைன் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது :
"வெட்கப்படுவது அது நல்லதையே கொண்டுவரும் என நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ, முஸ்லிம்)

ஹஜ்ரத் அபூசயீத் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிப்பது:
"ஒரு குமரிப் பெண் , முன் அறிமுகமில்லாத தன் கணவனுடன் தனிமையிலிருக்கும் போது அவள் அடையும் வெட்கத்தை விட நபி (ஸல்) அவர்கள் அதிகம் வெட்கமடைவார்கள் . ஏதேனும் வெருக்கத்தக்கவற்றை கண்டால் வெட்கத்தால் பேசமாட்டார்கள் . எனினும் அவர்களின் முகம் மாறிவிடும். நபி (ஸல்) அவர்கள் வெறுப்பதை அவர்களின் முகத்தை கண்டு தெரிந்து கொள்வோம்".
நூல்: புகாரீ, முஸ்லிம்)

ஹஜ்ரத் இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
 "உனக்கு வெட்கம் வரவில்லையானால்  நீ நினைத்ததை செய்வாய் " என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்:புகாரீ)

இன்று அப்படிதான் இருக்கிறது சில முஸ்லிம்களின் நிலைமை . சில இஸ்லாமிய பெண்கள் வெட்கத்தை விட்டு , அந்நிய ஆணுடன் காதல் செய்கிறார்கள் . இருவரும் ஒன்றாக ஊரைச் சுற்றுகிறார்கள் . வெட்கம் இல்லாதனால் இவர்கள் விரும்பிய செயல்கள் செய்து வருகிறார்கள்.

பெண்கள் மார்க்க விடயத்தை அறிந்து கொள்வதற்கு , வெட்கம் இருக்க கூடாது என்பதற்கு கீழ் காணும் ஹதீஸ்கள் சான்று:

ஹஜ்ரத் உம்மு சுலைம் (ரலி) என்ற அன்சாரிப் பெண்மணி  நபி (ஸல்) அவர்களிடம் வந்து , "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உண்மை கூற வெட்கப்படமாட்டான் . ஒரு பெண் கனவு கண்டால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா ? எனக் கேட்க " ஆம் ! அவள் தண்ணீரைக் கண்டால் " என நபி (ஸல்) அவர்கள் பதிலுரைத்தார்கள் . ஹஜ்ரத் உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு மார்க்க சமந்தமான விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள வெட்கம் தடையாக அமையவில்லை .

பெண்களுக்கும் ஸ்கலிதம்(இந்திரியம்) ஏற்படும் , இரவில் ஓர் பெண் கனவு கண்டால் ; அவள் ஆடையில் ஈரம் கண்டால் . அவள் கட்டாயமாக குளிக்க வேண்டும் .

அறிமுக வெட்கம் :
முன் அறிமுகம் இல்லாத தம்பதியர்  மணமுடித்து பிறகு , தனிமையில் சந்திக்கும் வேளையில் அடையும் வெட்கம்.

இன்று அப்படியா இருக்கிறது . நிச்சயம் ஆனா பிறகே இருவரும் மணிகணக்கில் செல்  போன் மூலமாக பேசுகிறார்கள் வெட்கத்தை விட்டு . இது மார்க்கத்துக்கு புறம்பான செயல் . நிச்சயம் தான் ஆகிரிகிரது , இன்னும் திருமணம் ஆகவில்லை எப்படி இருவரும் கணவன் மனைவி போன்று உரையாட முடியும் ? அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் ? அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!

அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!