புதன், பிப்ரவரி 26, 2014

இடுக்கண் களைவதாம் நட்பு

அல்லாஹ்வின் திருபெயரால் ....
அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ் ]
வாழ்வியல் சிந்தனைகள் !!

காலம் கெட்டு  போய்விட்டது . எங்கு  நோக்கினும் சுயநலம் நிறைந்தவர்கள் . யாரையும் நம்ப முடிவதில்லை . தூய நட்பு தொலைந்து போய்விட்டது . '' அடிகடி நாம் கேட்கும் இந்த வார்த்தைகளை அன்றொரு நாள் இறைநேசர் ஜூனைதுல் பஹ்தாதி  [ரஹ் ] அவர்களிடம் ஒருவர் சொல்லி நொந்து கொண்டார். மனம் நொடிந்து பேசிய வரை அருகே அழைத்து அமரவைத்துப் பேசலானார்கள் . ''நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை . இன்று தன்னலம் தலை விரித்தாடுகிறது. 'உலகம் ஒரு குடும்பம் என்கிறது இஸ்லாம் '. மிஷ்காத் -ஹதீஸ் எண் 4998] 'முஸ்லிம்கள் அனைவரும்  சகோதரர்கள் '-என்கிறது அல்குர் ஆன் [49-10] ''முஃமின்கள் ஒரு சுவற்றில்  சீராக அடுக்கப்பட்ட செங்கற்களைப் போன்றவர்கள் ' - என்றார்கள் அண்ணல் நபி [ஸல்] அவர்கள்.


அண்டையார்  முதல் அயலார் வரை சமூக வாழ்வில், உறவுகளில், உண்மையாய் வாழ  வலியுறுத்துகின்றன . மார்க்கச் சட்டங்கள், இன்று எல்லாம் போய்  , மனித உறவுகள்  எல்லாமே , அவனிடம் உள்ள பொருளாதாரத்தை மையப்படுத்தியே நடைபெறுகிறது '' என்றெல்லாம் பேசிவிட்டு ஜூனைதுல் பஹ்தாதி [ரஹ் ] கேட்டார்கள்.  ''நண்பர்களே கிடைப்பதில்லை என்றால் ... சுகதுக்கங்களையும் மனத்தின்  இரணங்களையும்  தேற்றிக் கொள்ளவும் , பரிமாறி ஆறுதல் கொள்ளவும்  நல்ல நண்பர்களே இல்லை என்றாய் ! நீ யோசித்துச் சொல் . நீ முதலில் அப்படி நடந்து கொள்கிறாயா ? எத்தனை  பேரின் மனக்கவலைகளுக்கு  நீ மருந்தாக  இருக்கிறாய் ...? நீ முதலில் ஒரு நல்ல நண்பனாய் இரு , உனக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் ''.

என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள் . நாம் நல்ல நண்பர்களாய் நம்மை மாற்றிக் கொள்ளாதவரை நல்ல நட்பும்  தூய தோழமையும் சாத்தியமே இல்லை . நல்ல நட்புக்கும்  , அழகிய சேர்க்கைக்கும் நபி [ஸல்] அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்களை  விட சிறந்த முன்னுதாரணம் உலகில் இருக்க முடியாது.

''தீய நண்பனுடன் இருப்பதை விட தனிமை மேலானது . தனிமையிலிருப்பதை  விட நல்ல நண்பனோடிருப்பது  மேலானது'' - என நட்புக்கு இலக்கணம் சொல்வார்கள் நபி[ஸல்] அவர்கள்.

நண்பருக்காக  உயிரையும் விடுதல் என்று இன்று சொல் வழக்கில் மட்டுமே நிலைத்திருக்கும் சொல்லை நடைமுறையில்  காட்டியவர்கள் நாயகத் தோழர்கள். மக்கா வாழ்வின்  ஆரம்ப நாட்களில் , எதிரிகளால் அண்ணலாரும் ஹஜ்ரத் அபூபக்கர் [ரலி] அவர்களும் தாக்கப்பட்டபோது , அபூபக்கர் [ரலி] கடுமையாய் தாக்குண்டு, காயமுற்று , மயங்கிச் சரிந்து , விழிப்புற்ற பின் ஹஜ்ரத் அபூபக்கர் [ரலி] கேட்ட முதல் கேள்வி ''நாயகத்திற்கு என்னவானது ? என்பதுதான் .

''நான் இரவு நேரத்தில் இறந்து விட்டால் நாயகம் [ஸல்] அவர்களை இரவோடு இரவாக அழைக்காதீர்கள்  . ஏனெனில் அண்ணலார் வரும்போது இரவில் எதிரிகள்  தாக்கக் கூடும் '' - என்று தன் மரணப் படுக்கையில் தன்  குடும்பத்தாரிடம் கூறினார்கள் ஹஜ்ரத் தல்ஹா இப்னு பர்ராஉ  [ரலி] அவர்கள். எதிரிகளின் அம்புகளிருந்தும் வாட்களிலிருந்தும்  பெருமானாரைக் காக்க தங்களின் உடல்களைக்  கேடயமாக்கி உயிர் துரன்வர்கல் ஏராளமான நபித் தோழர்கள்.

பசியோடிருந்த நபி [ஸல்] அவர்களுக்கு தானும் பசியோடிருக்கும் போது , தொலைவிலிருந்து  பால் கொண்டு வந்து , நாயகத்தை குடிக்க வைத்து விட்டு ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக்  [ரலி] அவர்கள் சொன்ன வார்த்தை ''அண்ணல் குடித்தார்கள் . என் வயிறு நிரம்பியது ''- என்பதுதான் . இவை போன்ற ஆயிரமாயிரம் நிகழ்வுகள் நபித் தோழர்களின்  தோழமைக்கு  சாட்சிகள் . நபி[ஸல்] அவர்களும்  நற் செயல்களைப் பாராட்டி ஊக்குவிக்கவும் செய்தார்கள் . அவர்களின்  சிறுசிறு தவறுகளையும் சுட்டிக்காட்டவும் செய்தார்கள். அவர்களின் வாழ்வு-தாழ்வின்  எல்லா அம்சங்களிலும் பங்கேற்கவும் செய்தார்கள். ஒரு நல்ல நண்பன்-தன்  நண்பனின் நிறைகளைப் பாராட்டவும் வேண்டும் . குறைகளை சுட்டவும் வேண்டும்.

''பிலாலே! உமது பாத அடிகளை சுவனத்தில் பார்த்தேன் '' .
புஹாரி ]

''நீங்கள் என்ன அமல் செய்கிறீர்கள் ? மலக்குகளிடமெல்லாம் பிரபலமாக இருக்கிறீரே ?'' என ஹஜ்ரத் அபூதர் [ரலி] அவர்களைப் பரவசப்படுத்தினார்கள் .
அபூதாவூது ]

''உமரே! உம்மைக் கண்டு ஷைத்தான் விரண்டோடுகிறான் '' , என்று சொல்லி அவரின்  இறையச்சம் குறித்து சிலாகித்தார்கள்.
[புஹாரி  ]

''அபூபக்கரை நாளை மறுமையில் சுவனத்தின் எல்லா வாயில்களும் அழைக்கும் '' எனக் கூறி சுவன முன்னறிவிப்புச் செய்தார்கள் .
[புஹாரி ]

''அல்லாஹ்  உங்களின் பெயரையே கூறி உங்களை ஓதச் சொல்லி என்னை கேட்கச் சொன்னான்  ''- என ஹஜ்ரத் உபை இப்னு காஃபின் ஓதுதலை ஊக்குவித்தார்கள்.
புஹாரி ]

இன்ஷாஅல்லாஹ் இன்னும் மலரும் நட்பும் வளரும் ......................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!