வியாழன், பிப்ரவரி 27, 2014

இடுக்கண் களைவதாம் நட்பு (தொடர்ச்சி)



அல்லாஹ்வின் திருபெயரால் .....
ஆணும் ,ஆணும்  கொள்வது நட்பு . பெண்ணும் பெண்ணும் கொள்வது நட்பு. ஆணும் பெண்ணும் கூடாது நட்பு ; அப்படி கூடினால் இழப்பது நிச்சயம் கற்பு . ஏனென்றால் ஒரு நபிமொழியின் கருத்து: ஒரு ஆணும் ,பெண்ணும் தனியாக இருந்தால் , மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான். ஷைத்தான் இருந்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்லித்தான் புரிய வைக்கணுமா ?

இன்று பெயரளவில் உதட்டளவிலும் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்.  ஆனால் நம்மை நல்வழிப்படுத்தும் ஒரு நண்பரை நாம் தான் தேர்வு செய்ய வேண்டும்.

அண்ணலார் கூறியதாக ஹஜ்ரத் அபூஹூர்ரைரா (ரலி) அறிவிப்புச் செய்கிறார்கள்: "மனிதன் தன்னுடைய நண்பனின் வழி எதுவோ அதில் தான் இருப்பான் . எனவே நட்பு கொள்ளும் முன் யாரிடம் நட்பு கொள்கிறோம் என்பதில் அவன் கவனம் கொள்ளட்டும் ".
ஆதாரம் :முஸ்னத் அஹ்மத்)

இன்றோ நட்புகலெல்லாம் நடிப்புகளாகவும் , பாசங்கள் பாசாங்குகளாகவும் , மாறிப் போனதைப் பார்க்கிறோம் . எந்த நிலையிலும் நண்பரிடம் இதுவரை கடன் கேட்காதவர் ... தன் உற்ற நண்பரிடம் வேறு வழியின்றி கடன் கேட்டார் . நண்பரும் கொடுத்தனுப்பினார் . பிறகு கடன் கொடுத்தவர் வீட்டிலமர்ந்து  அழுது கொண்டிருந்தார்  ."கொடுத்து விட்டு அழுவதை விட.. கொடுக்காமலே இருந்திருக்கலாமே ...? என வீட்டிலுள்ளோர் சொன்னார்கள்.

அற்புதமான பதில் சொன்னார் அந்தப் பெரியவர் . "இவ்வளவு ஒரு இக்கட்டான பணத்தேவை யுள்ள நிலையில் என் நண்பர் இருப்பதை நானாகவே புரிந்து, அவர் கேட்கும் முன்பே கொடுக்காத நான் என்ன நண்பன் ? என்றார். நல்ல நட்புகள் சிலதே என்றாலும் இன்னும் உலகில் இருந்து கொண்டுதானிருக்கின்றன .

நட்பின் இலக்கணங்கள் அனைத்தையும் கருத்துச் செறிவு மிக்க ஒரே உவமானத்தின் மூலம் விளக்குவார்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்கள்.
"ஒரு முஃமின் மற்றொரு முஃமினுக்கு கண்ணாடி ". இந்த ஒற்றை வரிக்குள் ஒளிந்து கிடக்கும் கருத்துக்கள் பல நாம் கேட்டிருக்கலாம் . அல்லாமா தகீ உஸ்மானி அவர்கள் இதன் விளக்கவுரையில்  எழுதுகிறார்கள் .

*அழகை மட்டுமல்லாது அசிங்கத்தையும் துல்லியமாகக் காட்டும் கண்ணாடி போல நல்ல நண்பன் நிறைகளை மட்டுமல்ல குறைகளையும் சுட்டிக் காட்ட வேண்டும்.
*நல்ல கண்ணாடி வாங்கி வந்து , பொருத்தமான இடத்தில் வைத்துப் பாதுகாப்பது போன்றே நல்ல நண்பனையும் தேர்வு செய்து மதிப்பளித்து அருகிலிருத்திக்  கொள்ள வேண்டும்.
*மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி போல் நண்பனின் குறைகளை பெரிதுபடுத்தாமல்  சுட்டிக் காட்ட வேண்டும்.
*முன்னாள் தோன்றுபவரிடம் மட்டும் அவர் குறைகளைச் சொல்லும் கண்ணாடி குறைகளை அடுத்தவரிடம் சொல்வதில்லை. அது போன்றே , நண்பனிடம் மட்டுமே தனிமையில் குறைகளைக் கூற வேண்டும்.
*அவலட்சனங்களைக் காட்டுவதற்காக கண்ணாடியை யாரும் அடித்து உடைப்பதில்லை  . நம் உடல் குறைகளை கூறும் மருத்துவரை நாம் கோபிப்பதில்லை . அங்கக் குறைபாட்டை கூறும் கண்ணாடியையும் வெறுப்பதில்லை . அதுபோன்றே குணங்களின் குறைகளை வெளிப்படுத்தும் நண்பனையும் கடிந்து கொள்ளவோ கோபப்படவோ கூடாது.
*பலமுறை குறைகளைக் காட்டி அலுத்து விட்டோம் ...போதும்... என கண்ணாடி நிறுத்திக் கொள்வதில்லை . அதுபோலவே சீர்திருத்தப்படாத வரையில் உணமையான நண்பன் குறைகளைச் சொல்வதில் களைப்படைந்து விடகூடாது .

பலமுறை அறிவுறுத்தியும் திருந்தாத மக்கா காஃபிர்கள் திருத்தும்  பணியில் அயராமல் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஈடுபட்ட போது அல்லாஹ்...

"...அவர்களுக்காக உங்களது உயிரையே அழித்துக் கொள்வீர்கள் போலிருக்கிறதே ..."
அல்குர் ஆன்

என்று கூறுமளவு இடைவிடாமல் ஈடுபட்டார்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்கள்.
நல்ல நட்பு வேண்டும் என்பதை  வலியுறுத்தப்படுவது போன்றே கூட நட்பு கொள்லாகாது என்பதயும் ஹதீச்களிடம் வலியுறுத்தப்படுகிறது. பொதுவாகவே பெண்களிடம் நட்பு என்பது தொடங்கும் போது நட்பென்று சொல்லப்பட்டாலும் பின்னாளில் அது கூட நட்பாகவும் காதலாகவும் , காமமாகவும் பரிணாமம் பெற்று விடும் என்பதனாலேயே  அன்னியப் பெண்களிடம் எந்தப் பெயரில் நட்பு ஏற்படுத்திக் கொண்டாலும் அது கூட நட்பு தான் .

ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : "நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
உனது நேசம் பைத்தியமாகவும் வேண்டாம் உனது விரோதம் துன்பத்தின் காரணமாகவும் வேண்டாம் ".

இன்றைய சூழ்நிலையில் நம் பிள்ளைகள் யாரோடு நட்பு கொண்டுள்ளனர் என்பதை கவனிப்பதும் கண்காணிப்பதும் நம் கடமையாகும் .
ஒரு அறிஞ ர் இப்படிச் சொன்னார் -
"உன்னை விடச் சிறந்தவனாய் இல்லாத மனிதனுடன் ஒருபோதும் நட்புறவு கொள்ளாதே".
முற்றும் .
அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!