சனி, மார்ச் 15, 2014

நல்லநட்பு வேண்டும்

அல்லாஹ்வின் திருபெயரால் ....
எல்லாப் புகழும் ,புகழ்ச்சியும் அல்லாஹ்  ஒருவனுக்கே உரித்தாக !!

அண்ணலார் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் அனைத்து விஷயங்களையும் [இம்மைக்கும், மறுமைக்கும் ] சொல்லி ,செய்து விட்டார்கள் . இது இல்லை, அது இல்லை என்று எந்த ஒரு பேச்சுக்கும் இடம் இல்லை . நாம் சத்திய பாதையில் இருக்கிறோம் .


அண்ணலார் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நல்ல நட்புக்கும் , தீய நட்புக்கும் எவ்வளவு அழகாக , அற்புதமாக உதாரணம் காட்டுகிறார்கள் ..
நட்பு என்பது எங்கும் , எப்பொழுதும், எதிலும் , எந்த நேரமும் , ஏற்படலாம் . அந்த நட்பு எப்படிப் பட்ட நட்பாக இருக்க வேண்டும் என்பதுதான் ரொம்ப அவசியம் . நட்ப்பினால் விளையும் நன்மைகள் உண்டு , தீமைகளும் உண்டு . அந்த நட்பு நமக்கு எப்படி அமைய வேண்டும் என்பதை நாம் தாம் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

நல்லவர்களோடு கொள்ளும் நட்பிற்கும் , கெட்டவர்களோடு கொள்ளும் நட்பிற்கும் உதாரணம், [நறுமணம் விற்பனை செய்யும் ] அத்தர் வியாபாரிக்கும், [இரும்புப் பட்டறையில் வேலை செய்யும்] கொல்லனுக்கும் உள்ளதாகும். அத்தர் வியாபாரி உங்களுக்கு நறுமணம் கமழும்  வாடையைத் தருவார். அல்லது நீங்களே அவரிடம் அத்தர் வாங்கவும் செய்யலாம்  . கொல்லன், ஒன்று உங்கள் ஆடையில் [நெருப்பு பொறிபட்டு]  எரித்து விடுவான் ,, அல்லது துருத்தியிலிருந்து  வரும் புகையின் துர்நாற்றம் உங்கள் மீது படும்  .

ஆதாரம்.. புகாரீ , முஸ்லிம்]

இதை விட நமக்கு வேற என்ன உதாரணம் தேவை ? இந்த சிறிய உதாரணத்தில் நிறைய  விளக்கங்கள் இருக்கிறது . தீய நட்பினால் ஏற்படும் தீமைகள் சொல்லிமாளாது  . கல்லூரிக்கு போகும் இஸ்லாமிய ஆண்களும் சரி , பெண்களும் சரி இந்த ஹதீஸ்ஸை  மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளவும் .

நட்பிற்கும் பாசத்திற்கும் அளவுவேண்டும்.

எதை எடுத்துக் கொண்டாலும் அதற்கு ஒரு அளவுகோல் உண்டு. உணவும் சரி, உடையும் சரி, பணமும் சரி , பாசமும் சரி , நட்பும் சரி, எதற்கும் ஒரு எல்லை உண்டு. மீறினால்  ஆபத்தில்தான் முடியும். அளவுகோல் இல்லாத எந்த எல்லையும் இல்லாத  பாசமும், நேசமும் உண்டு. அதுதாம் , நம்மை  படைத்த ரப்பாகியஅல்லாஹு  மீதும்   , அவனுடைய தூதர் அண்ணல் நபி [ஸல்] அவர்கள் மீதும் மட்டும்தான்   உயிரை விடவும் நாம்  அதிக பிரியம் வைக்க வேண்டும் .

நண்பரோடு பாசம் ஓர் அளவோடு வைத்துக் கொள்ளுங்கள் ,, ஏனெனில் [அவரைக் கொண்டு சில சமயங்களில்] அவரோடு கெடுதியும் வரக் கூடும். [இதே போன்று ] விரோதியுடனும் விரோதத்தை ஓர் அளவோடு வைத்துக் கொள்ளுங்கள்,, ஏனெனில் , அவருடனுள்ள விரோதம் நட்பாகவும் மாறிவிடலாம்.
ஆதாரம்.. திர்மிதி]

இன்று நமக்குள் நேசமும், பாசமும் குறைந்துக் கொண்டே வருகிறது . காரணம் நிறைய  சொல்லலாம் ...... அன்பு ஏற்பட ஒரு அழகான வழிமுறையை , அண்ணல் நபி [ஸல்] அவர்கள் சஹாபாக்களுக்கு சொன்னார்கள் ........ அது என்ன என்று பார்ப்போம்..

எவன் வசம் எனது உயிர் இருக்கிறதோ , அவன் மீது சத்தியமாக ,[ அல்லாஹ்வின் மீது]  விசுவாசங் கொள்ளாத வரை நீங்கள் சுவர்க்கம் புக மாட்டீர்கள்,, உங்களிடையே அன்பு  ஏற்படாதவரை நீங்கள் விசுவாசங் கொள்ள மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒரு [நுட்பமான] விஷயத்தை அறிவிக்கட்டுமா? ஒருவருக் கொருவர்  ஸலாம்  சொல்லிக் கொள்ளுங்கள் ,, உங்களிடையே அன்பு பெருகிவிடும்.
ஆதாரம்.. முஸ்லிம் , அபூதாவூத், திர்மிதி]

இன்று நமக்குள் ஸலாம் சொல்வது வழக்கத்தில் இல்லாத ஒன்றாகி விட்டது  . தொழுகையாளிகள் மட்டும்  அவர்கள்குள் ஸலாம் கூறிக் கொள்வார்கள் . இது மட்டும் வழக்கமாக இருக்கிறது. நமக்கு அறிந்தவர்கள் , அல்லது அறியாதவர்கள் யாராகிலும் இருந்தாலும் நாம் உடனே ஸலாம்  சொல்ல வேண்டும். யார் ஸலாம்  சொல்வதை முந்திக் கொள்கிறார்களோ அவர்கள்தான் சிறந்தவர்கள் என்று ஒரு நபிமொழி இருக்கிறது. வீட்டுக்குள் நுளைவாதாக இருந்தாலும் முதலில் ஸலாம் சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் நுழைய வேண்டும். இது நபிவழி !

அல்லாஹ் நம் அனைவரையும் நபிவழியின் படி வாழச் செய்வானாக ........
அல்லாஹ்வின் நல்லடியார்களின் கூட்டத்தில் நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக..
ஆமீன்........
அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!