ஞாயிறு, மார்ச் 23, 2014

பாக்கியம் தரும் பாவமன்னிப்பு

அல்லாஹ்வின் திருபெயரால்.....
எல்லாப் புகழும், புகழ்ச்சியும் அல்லாஹ்  ஒருவனுக்கே உரித்தாக!

''விசுவாசிகளே ! நீங்கள் கலப்பற்ற மனதுடன் [பாவத்திலிருந்து விலகி] அல்லாஹ்வின்பால் திரும்புங்கள்''
அல்குர் ஆன் ..66..8]


அடியார்கள் பாவமன்னிப்பு கோருவதை அல்லாஹ்   விரும்புகிறான் . அப்படி இருக்க நாம் இன்னும் ஏன் தாமதிக்க வேண்டும்? மரணம் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் , அது எப்போ வரும் , எப்படி வரும் , எந்த நிலையில் வரும், எந்த இடத்தில் வரும் என்று யாராலும் கணித்துச் சொல்ல முடியாத ஒரு விஷயம் தான் இந்த மரணம் . அதற்குள் நாம் அல்லாஹ்விடம் தௌபா செய்வது ரொம்ப நல்லது . நம்முடைய அனைத்துப் பாவங்களும் இந்த உலகத்திலேயே அல்லாஹ்  மன்னித்து விட வேண்டும் . அவனைச் சந்திக்கும்போது பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக  நாம் இருக்க வேண்டும் ! நாம் பரிசுத்தப்பட்டவர்களாக ஆக வேண்டும்! இன்ஷாஅல்லாஹ் இன்றே நாங்களும் , நீங்களும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவோம்  ! மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுவோம்  !

மனித இனம் பாவம் புரியும் தன்மை கொண்டது என்பது இறை நியதி . மனித இனத்தின் முதல் அத்தியாயம் பாவா ஆதம் [அலை] அவர்களின் தொடக்கமே பாவத்தைக் கொண்டுதான் முன்னுரை வரையப்பட்டுள்ளது.

பாவம் என்பது தவிர்த்து கொள்ள வேண்டிய ஒன்று! ஆனால் நாம் புரிகிற பாவங்களுக்கு தௌபா  செய்து விடும்போது மற்றொரு வகையில் அது நமக்கு பலனாக ஆகிவிடுகிறது.

பாவா ஆதம் [அலை]அவர்கள் தன்  பாவத்திற்காக வருந்தி தௌபா செய்ததால் உலக மாந்தர்களை அவர்களின் சந்ததிகளாக அல்லாஹ்  ஆக்கிவைத்தான். தௌபா என்ற பாவ மன்னிப்பு  செய்வதிலும் பல நிபந்தனைகளுக்கு உட்பட்ட தௌபாவை  அல்லாஹ் எளிதாக ஏற்று கிருபை செய்கிறான். எதிர்பாராத வெற்றியையும் தருகிறான்.

ஹஜ்ரத் மூஸா [அலை] அவர்கள் ஒரு கிப்தியை கொன்று விட்டு வேறொரு நாட்டிற்கு ஓடிவிட்டார்கள். ஃ பிர் அவ்னின் படைகள் அவரை கொல்வதற்காக துரத்தினார்கள். இந்நிலையில் ஹஜ்ரத் மூஸா [அலை] அவர்கள் அல்லாஹ்விடம் தௌபா செய்தார்கள்! அதன் காரணத்தினால் அவர்கள் தப்பி ஓடிய ஊரிலேயே அவர்கள் நிக்காஹ் செய்து கொண்டு வாழ்வதற்கு நல்ல ஏற்பாடு  செய்யப்பட்டது!

''நான் உங்களுக்கு பயந்து ஓடி விட்டேன் . அல்லாஹ் எனக்கு நீதத்தையும் ஞானத்தையும் தந்தான்  நபியாக ஆக்கினான் ' என மூஸா கூறினார்கள். ஹஜ்ரத் மூஸா  [அலை] அவர்கள் தம் மனைவியோடு சொந்த ஊருக்கு திரும்புகிறபோது நபிப் பட்டம் கொடுக்கப்பட்டது!

ஹஜ்ரத் யூசுப் நபி [அலை] அவர்கள் சிறையிலிருந்து தம்மை விடுவிக்குமாறு நாட்டு அரசனிடம் சிபாரிசு செய்ய வேண்டும்!  என ஒரு கைதியிடம் தூது சொல்லி விட்டமைக்காக மேலும்  ஹஜ்ரத் யூசுப் நபிக்கு இருபது வருடங்கள் சிறைத் தண்டனையை அல்லாஹ்  நீடிக்க செய்தான் . ஹஜ்ரத் யூசுப் [அலை] அவர்கள் அல்லாஹ்  அல்லாதவற்றிடம் உதவி தேடிய பாவத்திற்காக தௌபா பாவமன்னிப்புகோரி முறையிட்டதால் ஹஜ்ரத் யூசுப் [அலை] அவர்களை அல்லாஹ்  விடுதலை வழங்கியதோடு அந்த நாட்டின் ஆட்சி பொறுப்பேற்கும் மன்னனாகவும் ஆக்கினான்.

நாம் செய்த குற்றங்களை எண்ணி வருந்தி தௌபா செய்து விட்டால் அல்லாஹ்வின்  அருள் மாறிமாறி நம்மை வந்தடைந்து கொண்டேயிருக்கும்.

''உங்கள் இறைவனோ உங்கள் பாவங்களை விட்டுப் போக்கி [மன்னித்து ]ச் சுவனபதிகளிலும் உங்களை  புகுத்திடுவான்.
-அல்குர் ஆன் .. 66..8]

''ஆதம் நபியின் மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்கள் தான்! அந்த தவறில் இருந்து மீண்டு தௌபா  பாவ மன்னிப்பு தேடுகிறவர்களே மிகச் சிறந்தவர். என நபி [ஸல்] அவர்கள் கூறியுள்ளார்கள்.

பாவத்திலிருந்து தௌபா செய்யக்கூடியவன் . பாவமே இல்லாதவனைப் போன்று ஆகிவிடுகிறான் என ரசூல் [ஸல்] கூறினார்கள் .
அறிவிப்பாளர் ..-இப்னு மஸ்ஊத் [ரலி]
ஆதாரம்.. இப்னு மாஜா
மிஷ்காத்..- 206]

ஒரு மனிதன் செய்த பாவத்தின் காரணமாக அவனுக்கு இரணம் தடை செய்யப்படுகின்றது என ரசூல் [ஸல்] கூறினார்கள் .
அறிவிப்பாளர்.- ஸவ்பான் [ரலி]
ஆதாரம்..=இப்னு மாஜா
மிஷகாத் ..419]

அல்லாஹ் மிக அறிந்தவன் ....   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!