செவ்வாய், டிசம்பர் 16, 2014

உன்னால் முடியும் தம்பி!

அல்லாஹ்வின் திருபெயரால்...........

''நீர் முடிவெடுத்து விட்டால் , இறைவன் மீது பொறுப்பு சாட்டுவீராக!''
அல்குர் ஆன் 31..159]


வாழ்வில் ஒரு மனிதன் முன்னேறுவதற்கு தன்னம்பிக்கை அவசியமானதாகும். 'நம்மால் எப்படி முடியும் ? '  என்ற தாழ்வு மனப்பான்மை கொண்டோர் , வாழ்வில் முன்னேறாமலே போய் விடுவதையும், 'நம்மால் ஆகாதது என்ன? என்ற தன்னம்பிக்கை கொண்டோர், லட்சியத்தை அடைந்து விடுவதையும் நாம் காணுகிறோம். தன்னம்பிக்கையால் உயர்ந்து எத்தனையோ தொழிலதிபர்களையும், வியாபாரச் சக்கரவர்த்திகளையும், பட்டதாரிகளையும், தலைவர்களையும், உலகம் கண்டுள்ளது, கண்டும் வருகிறது.



'அதோ ! அந்த டாக்டரைப் போன்று நீயும் டாக்டராக ஆக வேண்டும். உன்னால் முடியாது எது? என்று தன் குழந்தைக்கு தன்னம்பிக்கையை ஊட்டிய பெற்றோர், பிற்காலத்தில் தாம் எண்ணியது போன்றே மகனை டாக்டராகக் கண்டு மனம் பூரித்திருக்கிரார்கள்.

'நீ கலெக்டராக ஆக வேண்டும் . நீ இன்ஜினியராக மாற வேண்டும்' என்றெல்லாம் கூறி பல தரப்பட்ட மக்கள், தங்கள் சந்ததிகளுக்கு ஆர்வமூட்டி தன்னம்பிக்கையை ஊட்டி வருவதை நாம் அன்றாடம் காணுகிறோம்.

இறை நம்பிக்கையை பிரதானமாகக் கூறும் இஸ்லாம் , தன்னம்பிக்கைக்கு முரணான கொள்கையைக் கொண்டதல்ல.

தன்னம்பிக்கை பற்றி திருக்குர் ஆன் கூறுவதைக் கேளுங்கள்.

''உங்களில் தன்னம்பிக்கை மிக்க இருபது நபர்கள் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்ளலாம். நூறு நபர்கள் இருந்தால், ஆயிரம் எதிரிகளை வெற்றி கொள்ளலாம்.''      [அல்குர் ஆன் -8.65]

இதுபோன்ற பல திருவசனங்கள் தன்னம்பிக்கையின் வலிமையை எடுத்தோதுகின்றன . ஆனால், இஸ்லாம் கூறும் தன்னம்பிக்கையை பிறர் கூறும் தன்னம்பிக்கையுடன் ஒப்பிட்டு நோக்கினால், இஸ்லாம் காட்டும் தன்னம்பிக்கையிலிருந்து மற்றவர்கள் கூறும் தன்னம்பிக்கை ஒரு மாற்றுக் குறைந்திருப்பதைக் கண்டு கொள்ளலாம்.

இஸ்லாம் தன்னம்பிக்கையுடன்  , இறை நம்பிக்கையையும் இணைத்து ஊட்டுகிறது.
தன்மீது மட்டும்  ஒருவன் நம்பிக்கை வைத்து காரியத்தில் இறங்கும்போது, எப்போதாவது தனது பலகீனம் வெளிப்படத் துவங்கிவிடும். அப்போது அவனையும் அறியாமல்  அவனுள் ஒளிந்திருக்கும் தாழ்வு மனப்பான்மை வெளிப்பட்டு காரியம் தடைப்படக் கூடும். மேலும் திறமை வெளிப்படாமல் மறைந்திருந்த திறமைசாலிகளுக்கு மட்டுமே தன்னம்பிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது.

இயற்கையிலேயே திறமை குறைவு உள்ளவர்கள் தன்னம்பிக்கையால் உயர்ந்தது கிடையாது.  ஆனால் தன்னம்பிக்கையுடன் இறை நம்பிக்கையும் சேருமென்றால்  ,முழுமையான பலம் கிட்டும். இறைதுணை இருக்கிறது என்ற எண்ணம் தனக்குள் பலகீனம்  இருப்பதையே கண்டு கொள்ளச் செய்யாது.

தன்னால் செய்ய  இயலாதச் செயலைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஒருவனுக்கு ஏற்படும்போது, அவன் தன்னையுமறியாமல் தனது இறைவனைக் கூவி அழைப்பதைக் காணலாம். அந்த அழைப்பு அவனுக்கு அசாத்திய திறமையைத் தேடித் தந்து விடுகிறது  .

நம்மைப் படைத்த இறைவனை நாம் வழிப்படுகிறோம் . அவனுடைய துணை நமக்கு இருக்குபோது , நம்மால் ஏன் முடியாது என்ற நம்பிக்கை, வெறுமனமே தன் மீது மட்டும் நம்பிக்கை வைப்பதை விட , பன்மடங்கு உறுதி மிக்கதாகும். தன்னம்பிக்கையால் செய்ய இயலாத செயல்பாட்டையும் தன் [இறை] நம்பிக்கை செய்து காட்டுகிறது.

எனவேதான், சாதனை படைப்பதற்கு இஸ்லாம் தன்னம்பிக்கையுடன் இறை நம்பிக்கையையும் வலியுறுத்துகிறது . அதற்கு நபிகள் நாயகம் [ஸல்\ அவர்கள் சிறந்த சான்றாகத் திகழ்கிறார்கள். அவர்கள் தனது போதனையைத் துவக்கிய காலகட்டத்தில் அவர்களை உலகே எதிர்த்தது. அவர்கள் தனிமனிதராக இருந்த அந்த  எதிர்ப்புகளை சமாளித்து வெற்றிவாகை சூடினார்கள். உலகில் தோன்றிய எவரும் செய்திராத , செய்ய முடியாத சாதனை படைத்தார்கள்.

வெறும் தன்னம்பிக்கை மட்டுமே கொண்ட எவருமே , எட்டாத அளவு பெருமானார் [ஸல்] அவர்கள் சாதனை படைத்ததற்கு, அவர்களின் இறை நம்பிக்கை கலந்த தன்னம்பிக்கையே காரணமாகும். இதை அவர்களின் சரித்திரத்தில் பல பக்கங்கள் மெய்பிக்கின்றன.
இன்ஷாஅல்லாஹ் இன்னும் மலரும் ....................
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தொடர்ச்சியில் அவசியம் அதையும் படித்து பயன் பெறுங்கள் , மற்றவர்களுக்கும்  ஷேர் செய்யுங்கள் . அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக ! 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!