புதன், பிப்ரவரி 11, 2015

தொழுகை மார்க்கத்தின் தூணாகும்

அல்லாஹ்வின் திருபெயரால்.......

அபூஹுரைரா [ரலி] அவர்கள் கூறினார்கள் .. நபி [ஸல்] அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.. ''உங்களில் ஒருவரது வீட்டு வாசலில் ஆறு ஓடிக்கொண்டிருந்து, அதில் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை அவர் குளிப்பாரானால் அவரது உடலில் ஏதேனும் அழுக்குகள் இருக்குமா? நீங்கள் இதுபற்றி  என்ன நினைக்கிறீர்கள் ? '' என்று கேட்டார்கள். ''எந்த அழுக்கும் [அவர் மீது] இருக்காது'' என நபித்தோழர்கள் கூறினர் . நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. ''அதுதான் ஐந்து நேரத் தொழுகைக்கு உதாரணமாகும். அதைக் கொண்டு அனைத்து பாவங்களையும் அல்லாஹ் அகற்றி விடுகிறான்.''
ஆதாரம்.. புகாரி ]


நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஜாபிர் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. ''ஐந்து நேரத் தொழுகையை தொழுபவர் உங்களில் ஒருவரின் வீட்டு வாசலில் ஓடும் ஆற்றில் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை குளிப்பவரைப் போன்றவராவார்.''
ஆதாரம்.. முஸ்லிம்]

இப்னு மஸ்ஊத் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் .. ஒரு மனிதர் ஒரு பெண்ணை முத்தமிட்டுவிட்டார் . அவர் நபி [ஸல்] அவர்களிடம் அதைக் கூறினார் . அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கிவைத்தான் .

பகலின் இரு முனைகளாகிய  காலை , மாலைகளிலும் இரவின் நிலைகளிலும் நீங்கள் [தவறாது] தொழுது வாருங்கள் ! நிச்சயமாக நன்மைகள்  பாவங்களைப் போக்கிவிடும். [இறைவனை] நினைவு கூர்வோருக்கு இது ஒரு நல்லுபதேசமாகும்.  [அல்குர்ஆன் 11..115]

''அம்மனிதர் [இந்தவசனம் ] எனக்கு மட்டுமா ?'' என்றார் . நபி [ஸல்] அவர்கள் ,  ''எனது உம்மத்தினர் அனைவருக்கும் [பொருந்தும்] '' என்று கூறினார்கள்.
ஆதாரம்.. புகாரி, முஸ்லிம்]

உஸ்மான் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் .. நபி [ஸல்] அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்..  ''எந்தவொரு முஸ்லிம் அவருக்கு ஃ பர்லான தொழுகை கடமையாகும்போது அழகிய முறையில் உளூச் செய்து உள்ளச்சத்துடன் அதன் ருகூவுகளைப் பேணித் தொழுவாரானால் அது பெரும்பாவங்களைத் தவிர அவர் செய்த அனைத்துப்  பாவங்களுக்கும் பரிகாரமாகும் இது எல்லா காலத்திற்கும் உரியதாகும். '' [ஆதாரம்.. முஸ்லிம்] 

தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்புகளை விவரிக்கும் நபிமொழிகளும், சம்பவங்களும், தொழுபவர்கள் அடைந்து கொள்ளும் நன்மைகளும் ஏராளாம். அவை அனைத்தையும் குறிப்பிட இங்கே பக்கங்கள் போதாது.

முடிந்தளவு இறையில்லம் செல்ல வாய்ப்பு கிடைத்தால் முதல் ஜமாஅத்தை  அடைந்துகொள்ள இறையச்சமுடைய முஸ்லிம் பேராவல் கொள்ளவேண்டும்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் ..  ''ஜமாஅத்துடன்  தொழுவது தனித்துத் தொழுவதை விட 27 மடங்கு மேலானதாகும்.'' [புகாரி]

காலை அல்லது மாலை நேரங்களில் மஸ்ஜிதுக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுவத்தில் ஆர்வமுடையவர்களுக்கு நபி [ஸல்] அவர்கள் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறியுள்ளார்கள்.

''எவர் அதிகாலையில் அல்லது  மாலையில் மஸ்ஜிதுக்கு சென்று வருவாரோ அவர் சென்று  , திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில்  வீட்டைக் கட்டுகிறான்'' என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்.. புகாரி, முஸ்லிம்]

அருமை சகோதரார்களே /சகோதரிகளே !! தயவு செய்து தொழுகை விடயத்தில் அலட்ச்சியப்படுதாதீர்கள்  !! தொழுகையை பேணிக் கொள்ளுங்கள். இந்த பாக்கியம் யாருக்கும் கிடைக்கும்.  இந்த வாக்கு அல்லாஹ்வின்  தூதர்  அண்ணல்  நபி [ஸல்] அவர்கள்  சொன்ன அமுதவாக்கு . போடுபோக்காக இருக்கும் பெரும்பாலும்  சகோதரர்கள் இந்த தொழுகை விஷயத்தில் தான்.

இதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன்  தொழுவதில் பேராசை கொண்டிருந்தார்கள். இதுபற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் [ரலி] அவர்கள் கூறினார்கள் .. ''எவருக்கு கியாமத் நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகைகளை  அதற்காக பாங்கு சொல்லப்படும் இடங்களில் பேணிக்கொள்ளட்டும் . அல்லாஹ் உங்கள் நபி [ஸல்]  நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழிமுறையில் உள்ளதாகும்.''

நபி [ஸல்] அவர்கள் மஸ்ஜிதுகளில் ஜமாஅத்துடன்  தொழுகையை நிறைவேற்றுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்கள். நியாயமான காரணமின்றி ஜமாஅத்தை  விடுபவரை வீட்டுடன்  எரித்துவிட கருணைக்கடலான நபி [ஸல்] அவர்கள் விரும்பினார்கள்.

''எவனுடைய கரத்தில் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக ! நான் விறகுகளைக் கொண்டுவர உத்தரவிட்டு , பிறகு தொழுகைக்கான 'அதான் ' சொல்ல ஏவி , பிறகு ஒரு மனிதரை இமாமாக நிற்க உத்தரவிட்டபின் நான் ஜமாஅத் தொழுகைக்கு வராதவர்களிடம் சென்று அவர்களை வீட்டுடன்  சேர்த்து  எரித்திட விரும்புகிறேன்'' என்று கூறினார்கள்.
ஆதாரம்.. புகாரி, முஸ்லிம்]

'அதான் ' சப்தத்தை கேட்டவுடன் நபித்தோழர்கள் மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத்துடன்  தொழுகையை நிறைவேற்ற, அவர்களது இல்லங்கள் வெகுதூரமாக இருந்தது அவர்களுக்கு தடையாக அமையவில்லை. அவர்கள் ஜமாஅத் தொழுகைக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தார்கள். அவர்கள் மஸ்ஜிதுக்குச் செல்லும்போது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இறைவனிடம் நன்மையாகக் கணக்கிடப்படுகிறது என்பதை அறிந்திருந்ததால் மஸ்ஜிதிலிருந்து தங்களது இல்லங்கள் வெகு தொலைவிலிருப்பது குறித்து மகிழ்ச்சியடைந்தார்கள்.

எந்த நியாயமான காரணமின்றி வீட்டில் தனியாக தொழுபவர்களுக்கு இவ்வளவு கடுமையான எச்சரிக்கை என்றால் . அறவே தொழாமல் இருக்கும் நிறைய சகோதரர்களுக்கு  என்ன சொல்வது??

இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொழுகையின் சிறப்பைப் பற்றி அதிகமான ஹதீஸ்கள் உள்ளன. படித்து பலன் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கட்டுரையை எழுதுகிறேன். அல்லாஹ் எனக்கும், உங்களுக்கும் ஐந்து நேரத் தொழுகைகளை ஜமாஅத்துடன்  மரணம் வருவரை தொழக் கூடிய கூட்டத்தில் சேர்ப்பானாக.
இன்ஷாஅல்லாஹ்  இன்னும் மலரும் ...............
அல்லாஹ் மிக்க அறிந்தவன் .
மறுமை சிந்தனை /உண்மையான முஸ்லிம்  இதை கிளிக் செய்யவும்.
http://islam-bdmhaja.blogspot.com/2015/02/true-muslim.html    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!