செவ்வாய், ஏப்ரல் 28, 2015

அல்லாஹ் மன்னிக்க விரும்பாதவர்களின் நிலை ...?

சுவனத்தில் மாளிகைகள் எப்படி இருக்கும்?
அல்லாஹ் மன்னிக்கும் கூட்டத்தில் நம் அனைவரையும்
ஆக்குவானாக !!!
அல்லாஹ்வின் திருபெயரால்.............
அல்லாஹ் மன்னிக்க விரும்பாதவர்களின் நிலை எவ்வாறு இருக்கும்?

'நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்'. (அல்குர்ஆன் 78:17,18)

அந்த நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் யாரை மன்னிக்க விரும்பவில்லையோ அவர்களின் நிலை அந்நாளில் எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.


மீஸான்

மனிதர்களின் நன்மைகளும் தீமைகளும் அந்நாளில் எடைபோடப்படும். அதற்காக ஒரு தராசு நிறுவப்படும் என்பதை திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன.

நன்மைகளையும் தீமைகளையும் எவ்வாறு எடைபோடப்படும்? அவை தராசில் நிறுத்துப் பார்க்கப்படும் பொருட்களல்லவே என்று மறுமையை நம்பாதோர் கேலி பேசலாம். நவீன காலத்துக்கு முன் வாழ்ந்தவர்கள் இவ்வாறு கேட்டால் அதில் ஓரளவாவது நியாயமிருக்கும். நவீன காலத்தில் வாழ்வோர் இவ்வாறு கேட்க முடியாது.
வெப்பம், குளிர் ஆகியவை இன்று எடை போடப்படுகின்றன. அவற்றை எடைபோட்டுப் பார்க்கத்தக்க கருவிகளை மனிதன் உருவாக்கியுள்ளான். காற்று எடை போடப்படுகின்றது. காற்றின் வேகம் எடை போடப்படுகின்றது. நிலநடுக்கம் எடை போடப்படுகின்றது. திரவப் பொருட்களின் அடர்த்தி எடை போடப்படுகின்றது. இன்னும் எடை போட இயலாது என்று முன்னோர்கள் நம்பிய அனேக விஷயங்கள் இன்று எடை போடப்படுகின்றன. சாதாரண மனிதனுக்கே இத்தகைய கருவிகளை உருவாக்கி இவற்றை எடைபோட இயலும் என்றால் சர்வ சக்தி படைத்த இறைவன் நன்மைகளையும் தீமைகளையும் எடை போடக்கூடிய கருவியை உருவாக்குவான் என்பதில் ஐயம் கொள்ள முடியாது.

எல்லாம் அறிந்த இறைவன் நன்மை தீமைகளை எடை போட்டுத்தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று அவசியமில்லையே என்று விதண்டாவாதம் பேசுவோரும் நம்மில் உள்ளனர்.

ஒரு பொருளின் எடை ஒரு கிலோ என்று ஒரு வியாபாரி அறிந்திருக்கிறான். அதில் அவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். அப்பொருளை விற்கும் போது மீண்டும் ஒருமுறை வாங்குபவன் முன்னிலையில் எடை போடுகிறான். இவ்வாறு மீண்டும் எடை போடுவது அப்பொருளின் எடையை அறிந்து கொள்வதற்காக அன்று. வாங்குபவன் முழுதிருப்தியுடன் இதைப் பெற்றுச் செல்ல வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும்.

ஒவ்வொருவரின் நன்மை தீமைகளின் எடை எவ்வளவு என்பது வல்ல இறைவனுக்கு எடை போடப்படும் முன்பே நன்றாகத் தெரியும். தனக்கு கடுகளவுகூட அநீதி இழைக்கப்பட வில்லை என்று மனிதன் நம்ப வேண்டுமானால் அவன் அறிந்து வைத்திருக்கும் முறையில் அதை நிரூபித்துக் காட்ட வேண்டும். தான் வழங்கும் நீதியில் நியாயத்தீர்ப்பில் கடுகளவு கூட மனிதனுக்குச் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே அவ்வாறு எடை போடுகிறான் என்பதை விதண்டாவாதம் புரிவோர் அறிந்து கொள்ள வேண்டும்.

நன்மை தீமைகள் எடை போடப்படும் போது மூன்று விதமான நிலையை மனிதர்கள் அடைவார்கள். சிலரது தீமையை ஒரு தட்டிலும் நன்மையை மறுதட்டிலும் வைக்கப்படும் போது நன்மையின் தட்டு ஓரளவு கீழிறங்கும். மற்றும் சிலரது தீமையை ஒரு தட்டிலும் நன்மையை மற்றொரு தட்டிலும் வைக்கும் போது தீமையின் தட்டு ஓரளவு கீழிறங்கும். இன்னும் சிலரது தீமைகள் ஒரு தட்டிலும் நன்மைகள் மறுதட்டிலும் வைக்கப்பட்டால் தீமையின் தட்டு கடுகளவும் உயராது, நன்மையின் தட்டு கடுகளவும் தாழாது. அந்த விபரங்களைத் திருக்குர்ஆனிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம்.

'அன்றைய தினம் எடை போடுதல் உறுதியான ஒன்று. அந்நாளில் எவர்களுடைய எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்' (அல்குர்ஆன் 7:8)

'மேலும் நாம் கியாமத் நாளில் மிகவும் துல்லியமான தராசுகளை நிறுவுவோம். எனவே எந்த ஒர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. மேலும் கடுகளவு எடையிருப்பினும் அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். (அவ்வாறு கணக்கெடுக்க) நாமே போதும். (எவர் துணையும் தேவையில்லை)' (அல்குர்ஆன் 21:47)

23:102, 101:6, 101:8 ஆகிய வசனங்களிலும் அந்த விபரம் கூறப்பட்டுள்ளது. ஓரளவு நன்மையும் பெருமளவு தீமையும், பெருமளவு நன்மையும் சிறிதளவு தீமையும் செய்த இரண்டு சாரார்களின் நிலை இவை.

இரண்டு வகையான குற்றங்கள் செய்தவர்கள் எவ்வளவு தான் நன்மைகளைச் செய்திருந்தாலும் அவர்களுடைய அக்குற்றங்களின் கனத்தால் அவர்களின் நன்மைகளுக்கு எந்த எடையுமில்லாமல் போகும் நூலளவு கூட அவர்களின் நன்மைகளுக்கு எடையிராது.

அகில உலகையும் படைத்துப் பரிபாலித்துக் காத்து வரும் இரட்சகனாம் அல்லாஹ்வின் வல்லமையை உணராமல் அல்லாஹ்வின் வல்லமைகளை அவனது பண்புகளை அவற்றில் ஏதேனும் ஒன்றை மனிதர்களுக்கோ, மற்றவர்களுக்கோ வழங்குவது முதல் குற்றம்.

அல்லாஹ் என்று யாரும் கிடையாது, மறுமை என்று ஏதுமில்லை என்று நாத்திகம் பேசுவது இரண்டாவது குற்றம்.

பெரியார்கள் மகான்கள் அவ்லியாக்கள் அன்பியாக்கள் ஆகியோரை வழிப்பட்டவர்களும், கல்லை, மண்ணை, மரத்தை, காற்றை, கதிரவனை, நெருப்பை இன்னபிற பொருட்களை வணங்கியோரும், கடவுளையே மறுத்தோரும் எவ்வளவு தான் நன்மைகள் செய்தாலும் அதற்கு எந்த எடையும் மறுமையில் இராது. இதையும் திருக்குர்ஆனிலிருந்தே நாம் அறியலாம்.

இந்த நிராகரிப்பாளர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இத்தகைய காபிர்களுக்காக நரகத்தையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். தம் செயல்களில் மிகப்;பெரும் நட்டமடைந்தோர் யாரென உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும் அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தனர். எனவே அவர்களின் செயல்கள் அழிந்துவிடும். கியாமத் நாளில் அவர்களுக்காக எந்த ஒரு எடையையும் நாம் ஏற்படுத்த மாட்டோம். (அல்குர்ஆன் 18:102-105)

5:5, 6:88, 2:217, 3:32, 5:53, 7:147, 9:17, 9:69, 39:65, 33:19, 47:9, 47:28, 47:32 ஆகிய வசனங்களில் இணை வைப்போர் மற்றும் நாத்திகர்களின் நல்லறங்கள் பாழாகிவிடும் என்று இறைவன் கூறுகிறான். இத்தகையோரின் செயல்கள் இவ்வுலகிலேயே அழிந்து விடுவதால் தான் மறுமையில் அதற்கு எந்த எடையும் இருப்பதில்லை.

கடுகளவு நன்மைக்கான எடைகூட கிடைக்கப் பெறாமல் நிரந்தர நரகில் அத்தகையோர் வீழ்வார்கள்.

முஸ்லிம்கள் எனத் தம்மைக் கூறிக்கொண்டு தர்காக்களுக்குச் சென்று பிரார்த்திப்பவர்கள், அதில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஸஜ்தாச் செய்தவர்கள், அவர்களுக்காக நேர்ச்சை செய்தவர்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டும். அத்தகையோர் தொழுகை, நோன்பு, இன்னபிற வணக்கங்களை நிறைவாகச் செய்தால் கூட இவர்களின் உள்ளத்தில் உள்ள இணைவைத்தல் அந்த வணக்கங்களை எடையற்றதாக ஆக்கி விடும்.

தங்களின் எந்த வணக்கத்திற்கும் எந்தப் பயனுமில்லாது போவதை விட துர்பாக்கியம் என்ன இருக்க முடியும்?

மறுமையை நம்பும் மக்கள் தமது அமல்கள் வீணாகக் கூடாது என்று எதிர்பார்க்கும் மக்கள் உடனடியாக தர்கா வழிபாட்டிலிருந்து விலகித் திருந்த வேண்டும்.

நன்மை தீமைகள் எடை போட்டது மட்டுமின்றி அதற்கான ரசீதுகளும் உரியவர்களுக்கு வழங்கப்படும். அந்த நேரத்திலும் இத்தகையோர் பரிதாபமான நிலையைத் தான் அடைவார்கள்
 வாழ்க வளமுடம்
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக...
அல்லாஹ்  மன்னிக்க விரும்பாதவர்களின் நிலை ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!