சனி, ஏப்ரல் 18, 2015

கோள் சொல்லுதல்

அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வோம்!
தீமைகளை விட்டு விலகி இருப்போம்!
நன்மை செய்வோம்! பிறர் நன்மை செய்ய நாம் தூண்டுவோம்!
பிறர் தீமைச் செய்வதை தடுப்போம்! சிறந்த முஸ்லிமாக வாழ்வோம்!
அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறுவோம்!
இன்ஷாஅல்லாஹ் சுவனத்தில் நுழைவோம்!
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்.........
அல்லாஹ் நமக்கு ஒரு அழகான மார்க்கத்தைத் தந்துள்ளான். அண்ணல் நபி [ஸல்] அவர்கள் அழகான வழிமுறைகள் இருக்கிறது. புதிதாதக இஸ்லாத்தைத் தழுவியவர்கள் , அவர்கள் அல்லாஹ்வின்பால் நெருங்கிக் கொண்டு செல்கிறார்கள். பிறப்பினால் முஸ்லிமாகிய நாம் இன்னும் பின்தங்கிதான் இருக்கிறோம். வீணாக நேரத்தைக் கழித்துக் கொண்டும், மற்றவர்களைப் பற்றி புறம் பேசிக் கொண்டும், மார்க்கத்தில் இல்லாத நூதனமான காரியத்தில் ஈடுப்பட்டுக் கொண்டும், ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்துக் கொண்டும் , வீண் விவாதங்களில் ஈடுப்பட்டுக் கொண்டும் நாம் வாழ்க்கையை கழித்துக் கொண்டு இருக்கிறோம்.


இன்று நாம் குழப்பமான காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் . நாளுக்கு நாள் குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நம்மக்குள் தேவையில்லாத குழப்பங்கள், வீண் சண்டைகள் , தர்க்கங்கள் இப்படி இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.

'கோள் சொல்பவன் சுவனம் நுழையமாட்டான் என்றும், மண்ணறையின் வேதனையைவிட்டும் மீட்சி பெறமாட்டான் என்றும், என் உம்மத்தில் மிகத் தீயவன் எவனென்றால் கோள்மூட்டி முஸ்லிம்களிடையே உறவை அருப்பவனாவான்' என்பதாக நபி [ஸல்] அவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும் , நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
'' அடுத்தவரின் இரகசியத்தை ஒட்டுக்கேட்பவனின் காதில் மறுமை நாளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றப்படும்.''

''கோள் மூட்டுவனின் செயல் ஷைத்தானின் செயலை விடவும் தீயதாகும் ''.

ஒரு நிகழ்ச்சி

நபி மூஸா [அலை] அவர்கள் காலத்தில் ஒருமுறை மழை பெய்யாத காரணத்தால் கடும் பஞ்சம் ஏற்பட்டு , மக்கள்  வாடினார்கள் . மழை வேண்டி மூஸா [அலை] அவர்கள் மக்களை எல்லாம் ஒரு திடலுக்கு அழைத்துச் சென்று அல்லாஹ்விடம் துஆ இறைஞ்சினார்கள்.. மழை பெய்யவில்லை. அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஓர் ஒலி வந்தது.  'ஓ ! மூஸாவே! இக்கூட்டத்தில் கோள்  சொல்லுகின்ற ஒரு மனிதன் இருக்கின்றான்! அவனைக் கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்தும்,, உம்முடைய துஆவை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நபி அவர்கள்  அல்லாஹ்விடம்,  'என் இறைவா! கோள் சொல்லும் அம் மனிதன் யார்? என்று எனக்குக் கூறுவாயாக ! என்று முறையிட்டார்கள்.

அல்லாஹ் மூஸா [அலை] அவர்களிடத்தில்  , 'ஓ ! மூஸாவே! நான் உம்மைக் கோள்  சொல்லக்கூடாது என்று கூறுகிறேன் ,, நீர் என்னைப் பார்த்தே கோள் சொல்லச் சொல்கின்றீரா?' எனக் கடிந்து கூறினான்.

அதன்பின் அக்கூட்டத்தில் இருந்த கொள்மூட்டியும் மற்றவர்களும் அல்லாஹ்விடம் அழுதழுது பாவமன்னிப்புக் கோரினார்கள்,, அல்லாஹ் மழையை இறக்கியருளினான்.

இன்னொரு நிகழ்ச்சி

ஓர் அடிமையை ஒருவன் சந்தையில் விலைக்கு வாங்கினான். வாங்கியவனிடம் விற்றவன் சொன்னான்.  ''இவன் மிக நல்லவன் .. எனினும், இவனிடம் கோள் சொல்லும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது!

வாங்கியவன் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை,, வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான். நாட்கள் நகர்ந்தன. கோள் மூட்டியே பழக்கப்பட்டவனல்லவா ? ஒரு நாள் அந்த அடிமை தன் எசமானியிடம்  வந்தான். எசமானியைப்  பார்த்து,  ''அம்மா! உங்கள் கணவர் ஒரு பெண்ணைக் காதலிக்கின்றார்,, அவர் அவளை மறந்து உங்கள் மீது அன்பு கொள்ளவேண்டுமாயின் நான் சொல்லும் வழியைப்  பின்பற்றுங்கள்'' என்று பற்றவைத்தான். அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற வீட்டுக்காரி,  என்ன வழி  அதைக் கூறு என்றாள் . அவன், 'அவர் உணவருந்திவிட்டு இரவு படுக்கைக்கு வருவார். அவர் தூங்கியதும், ஒரு கத்தியை எடுத்து அவர் தாடியின் அடிப்பாகத்தில் சில முடிகளை அறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.  அதன்பின் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகின்றேன்'' என்றான். அவளும் அவன் கூற்றை ஒப்புக்கொண்டாள் . அதன்பின் அவளின் கணவனிடம் வந்தான் . அவனிடம்,  'என் எஜமானே! தங்கள் மனைவி உங்களை கொலை செய்துவிட திட்டமிட்டுள்ளார்' என்றான். அவன் கூறியதைக் கேட்டு அதிர்ந்துபோனான். அடிமை கூறினான்.  'நீங்கள் அவ்வுண்மையை அறியவேண்டுமாயின், இன்றிரவு தெரிந்து கொள்வீர்கள் என்றான்.' எப்படி என்று எஜமான் கேட்டான்.  'தாங்கள் இரவு சாப்பிட்டுவிட்டு, படுக்கைக்குச் சென்று தூங்குவது போல் கண்களை மூடியவாறு படுத்துக்கொள்ளுங்கள்,, பிறகு எல்லாவற்றையும் தெரிந்துகொள்வீர்கள்'' என்று ஓதி விட்டான்.

இரவு வந்தது. வீட்டுக்காரன் உணவருந்திவிட்டுப் படுக்கையில் போய் படுத்துவிட்டான். சிறிது நேரம் கழித்து அவனின் மனைவி கத்தியை மறைத்து கொண்டு படுக்கைக்கு வந்தாள் . கணவனை உற்றுப்பார்த்தாள் ,, அவன் கண்களை மூடிக்கொண்டிருந்தான். தூங்கிவிட்டான் என்று எண்ணியவளாக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவனின் தாடைக்குக் கீழ் கொண்டு சென்றாள் . கணவன் திடீரென எழுந்து அவளின் கையில் இருந்த கத்தியைப் பிடுங்கி அவளைக் குத்தினான்,, அவள் பிணமாகச் சாயிந்தாள் . இச்செய்தி  அறிந்த அவளின் உறவினர்கள் ஓடோடி வந்து அவனைக் குத்திக்கொன்றார்கள். அவனின் உறவினர்களில் சிலரும், இவளின் உறவினர்களில் சிலரும் கொலையுண்டு மாண்டனர்.

இத்தனை கொலைகளுக்கு எது காரணம்? கோள் எனும் கொடுஞ் செயலன்றோ?
அல்லாஹ் இத்தீங்கை விட்டும் நம்மைக் காப்பானாக!
ஈக்கு நஞ்சு அதன் இறகிலும் , பாம்பிற்கு நஞ்சு அதன் பல்லிலும், தேளுக்கு நஞ்சு அதன் கொடுக்கிலும், இருக்கின்றன. ஆனால் கோள் சொல்பவனுக்கு உச்சி தொடுத்து உள்ளங்கால்வரையும் நஞ்சாகும்.
அவைகள் தீண்டினாலும் மருந்துண்டு, கோள் சொல்பவன் தீண்டினால் அதற்கு மருந்து கிடைப்பது அரிதாகும்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!