ஞாயிறு, மே 03, 2015

நபிகள் நாயகத்தின் போதனைகள்!


நபிகள் நாயகத்தின் போதனைகள்!

 நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், இறைவனால் தூதராக அறிவிக்கப்பட்டதும்,
“”நமது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே! நான் அவனுடைய தூதனாக
இருக்கிறேன்,” என்றார்கள். இதைக் கேட்ட மெக்காவாசிகள் அவரைத்
துன்புறுத்தினர். 53 வயது வரை அவர்கள் இந்தக் கொடுமையை அனுபவித்தார்கள்.
இதன் காரணமாக மெக்காவில் இருந்து 450கி.மீ., தூரத்தில் உள்ள மெதீனாவுக்கு
அவர்கள் குடிபெயர வேண்டியதாயிற்று. மெதீனாவில் நாயகம்(ஸல்) அவர்களை
ஆதரித்த மக்களின் எண்ணிக்கை பெருகியது. இதன்பிறகு பலயுத்தங்களை செய்து,

மெக்கா நகர மக்களையும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளச் செய்தார்கள். நாயகம்(ஸல்)
அவர்கள் மிகுந்த பணிவுடையவர்கள். பிறரது துன்பத்தை நீக்குவதில் அக்கறை
காட்டினார்கள். கி.பி.632 ரபியுல் அவ்வல் மாதம் 12ம்தேதி இவ்வுலகைத்
துறந்தார்கள். அவர்கள் பிறந்ததும் மறைந்ததும் ஒரே நாளில் என்பது
குறிப்பிடத்தக்க விஷயம். இந்த நாளையே, “மிலாடி நபி’ என்னும் பெயரில்
கொண்டாடுகிறார்கள்.
இதனிடையே  முன்னரே குறிப்பிட்டமாதிரி அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த
முஹம்மத் (ஸல்) அவர்கள் நற்குணங்களை முழுமைபடுத்தவே அனுப்பப்பட்டார்கள்.
நற்குணங்களின் முழு வடிவமாகத் திகழ்ந்த அவர்கள், மனித நேயத்தையும்,
பண்பாட்டையும், உயரிய ஒழுக் விழுமியங்களையுமே உலகிற்கு போதித்தார்கள்.
அவர்கள் போதனைகளுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல் தான் போதித்தவைகளை
முதலில் செயல்படுத்துபவர்களாக அவர்களே திகழ்ந்தார்கள்.

இதற்கு சான்றாக அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுமாறு தூதருக்கு
பணிக்கின்றான்: (நபியே! இன்னும்) ‘மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன்
அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்.’ என்றும்
கூறுவீராக. ‘அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்)
முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்’ (என்றும்
நீர் கூறுவீராக). (39: 11,12).
அல்லாஹ்வை அஞ்சுபவர்களில், பயப்படுபவர்களில் முதன்மையானவராகவே
அல்லாஹ்வின் தூதர் வாழ்ந்தார்கள். அன்னாரது போதனைகளுக்கும்,
வாழ்க்கைக்கும் மத்தியில் எந்த ஒரு முரண்பாடும் இருக்கவில்லை.மனித குல
மேம்பாட்டிற்கும், உயர்விற்கும் அவர்கள் வழங்கிய உயரிய போதனைகளிலிருந்து
சில துளிகளை மாத்திரம் இங்கு தருகின்றோம்.
அல்லாஹ்வின் முன்னிலையில் நீ சிறந்தவனாக மாறி விடு!:
‘நிச்சயமாக உங்களில் மிகச் சிறந்தவர் நற்குணமுடையவரே’ என நபிகள் நாயகம்
(ஸல்) அவாகள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)
அவர்கள், (புஹாரி).
நன்மைகளின் முழு வடிவமாக உன்னை மாற்றிக்கொள்:
நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) அறிவிக்கின்றார்: ‘நான் அல்லாஹ்வின் தூதரிடம்
எது நன்மை? எது தீமை? என கேட்டேன்.அதற்கு அன்னார்: நன்மை என்பது
நற்குணங்களாகும். தீமை என்பது உனது உள்ளத்தை உறுத்துவதும், அச்செயலை
மக்கள் பார்த்துவிடக்கூடாது என்று வெறுக்கின்றாயே அதுவாகும்’ என
பதிலளித்தார்கள். (முஸ்லிம்).
உனது நன்மையின் தட்டை கனமாக்க மிக எளிதான வழி?:
‘நற்குணத்தை விட (நன்மையின்) தராசில் கனமானது வேறு எதுவுமில்லை. உயரிய
நற்குணங்களை உடையவர் அவரது நற்குணங்களின் மூலம் நோன்பாளியின்,
தொழுகையாளியின் அந்தஸ்தை அடைந்துவிடுகின்றார்’ என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி), திர்மிதி).
உபரியான வணக்கங்களில் ஈடுபட்டவரின் அந்தஸ்தை நீ பெற வேண்டுமா?:
‘நிச்சயமாக ஒரு இறை நம்பிக்கையாளன் தனது நற்குணங்களின் மூலம் பகல்
முழுவதும் நோன்பு நோற்ற, இரவு முழுவதும் நின்று வணங்கியவரின் அந்தஸ்தை
பெறுகிறார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:
ஆயிஷா (ரலி) அவர்கள், அபூதாவுத்).
நாளை மறுமையில் எமது உயிரை விட மேலான அல்லாஹ்வின் தூதருடன் நீ இருக்க
விரும்புகின்றாயா?:
‘உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவர், மறுமை நாளில் எனக்கு
மிகவும் நெறுக்கமானவர் உயர்ந்த நற்பண்புகளை உடையவரே’ என நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள்,
திர்மிதி).

இன்றிலிருந்து ஒரு உண்மை முஸ்லிமாக உன்னை மாற்றிக்கொள்:
‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் பிற மனிதர்கள் ஈடேற்றம்
பெற்றிருக்கின்றார்களோ அவரே உண்மையான முஸ்லிமாவார். பிறருடைய
செல்வங்களுக்கும், இரத்தத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில்
பிறர் அச்சமற்று வாழ்பவரே உண்மையான இறை நம்பிக்கையாளராவார்’ என நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நஸாஈ).
நீ ஒரு உண்மையான இறை நம்பிக்கையாளனாக வேண்டுமா?:
‘தான் விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பாத வரையில் உங்களில் ஒருவர்
உண்மையான இறை விசுவாசியாக முடியாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டார்கள் (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி).
அல்லாஹ் விரும்பும் மென்மையை அனைத்திலும் தெரிவு செய்:
‘நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன், அவன் அனைத்து காரியங்களிலும் மென்மையே
விரும்புகின்றான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி, முஸ்லிம்).
கோபம் ஷைத்தானின் சூழ்ச்சியில் நின்றும் உள்ளது என்பதை அறிந்து
விழிப்புடன் செயல்படு:
‘ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என
கேட்டுக் கொண்ட போது, கோபம் கொள்ளாதீர்! என போதனை செய்தார்கள். திரும்ப
திரும்ப அவர் உபதேசம் செய்யுமாறு கேட்டுக் கொண்ட போது கோபம் கொள்ளாதீர்
என்பதையே போதனை செய்து கொண்டிருந்தார்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி), புஹாரி).
வெட்கம் என்ற உயர்ந்த பண்பை உனது அணிகலனாக்கு:
‘வெட்கம் நன்மையைத் தவிர வேறெதையும் கொண்டு வர மாட்டாது’ என நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன்
(ரலி), புஹாரி, முஸ்லிம்). ‘நம்பிக்கைக்கு (ஈமானுக்கு) எழுபது கிளைகள்
உள்ளன: அதில் மிக உயர்ந்தது லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை) என்பதாகும், அதில் மிக தாழ்ந்தது
பாதையில் மக்களுக்குத் தொல்லை தறுபவைகளை அகற்றுவதாகும், வெட்கமும்
நம்பிக்கையின் ஒரு கிளையாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி).
பிற மக்களுடன் எளிதாக நடந்து கொள்:
‘மக்களுடன் எளிதாக நடந்துகொள்ளுங்கள், மக்களுக்கு சிறமப்படுத்தாதீர்கள்.
மக்களுக்கு நன்மாராயங் கூறுங்கள், அவர்களை வெறுண்டோடச் செய்யாதீர்கள்’ என
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
அவர்கள், புஹாரி, முஸ்லிம்).
பேசும் ஒவ்வொரு நல்ல வார்த்தைக்கும் தர்மத்தின் கூலி இருக்கின்றது என்பதை
மறந்து விடாதே:
‘நீங்கள் பேசும் நல்ல வார்த்தைகளும் தர்மமாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முத்தஃபகுன்
அலைஹி).
இஸ்லாத்தின் மிகச் சிறந்த செயலுக்கு நீ சொந்தக்காரனாகி விடு:
‘ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து இஸ்லாத்தில் மிகச் சிறந்தது எது?
என்று கேட்டபோது வறியோருக்கு உணவளிப்பதும், அறிந்தவர்கள்,
அறியாதவர்களுக்கு ஸலாம் சொல்வது (அமைதியை பிரார்த்திப்பது)மாகும்’ என
பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள்,
புஹாரி).
அன்பை உனது முகவரியாக்கு!:
‘மனிதர்களுக்கு அன்பு காடடாதவருக்கு அல்லாஹ் அன்பு காட்டமாட்டான்’ என
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், முஸ்லிம்).
‘எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக நீஙகள்
நம்பிக்கை கொள்ளாத வரை சுவர்கம் நுழைய முடியாது, நீங்கள் ஒருவரை ஒருவர்
நேசிக்காத வரை நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டீர்கள், உங்கள் மத்தியில்
நேசம் உண்டகிவிடுகின்ற ஒரு செயலை அறிவித்து தரட்டுமா? உங்களுக்கு
மத்தியில் அதிகம் அதிகம் ஸலாம் சொல்லுங்கள் (நேசம் உண்டாகி விடும்)’ என
நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அவர்கள், முஸ்லிம்).
‘இரு முஸ்லிம்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் (அன்புடன்) கை குளுக்கிக்
கொள்வார்களானால், அவர்கள் இருவரும் பிரிந்து செல்வதற்கு முன் அந்த
இருவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்’ என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: பராஃ (ரலி) அவர்கள், அபூதாவூத்).
மலர்ந்த முகத்திற்கும் அல்லாஹ்விடம் நன்மை இருக்கின்றது என்பதை மறந்து விடாதே:
‘உங்களது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பது உற்பட எந்த ஒரு நன்மையான
காரியத்தையும் அற்பமாகக் கருதாதீர்கள்'; என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), முஸ்லிம்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!