திங்கள், ஆகஸ்ட் 03, 2015

இஸ்லாம் கூறும் நீதிபதிகள்

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்..
இன்று பரவலாக பேசப்படும் செய்திகளில் ஒன்றுதான் ''நீதி'' அந்த நீதி இந்தியாவில் குழி தோண்டி புதைத்துவிட்டார்கள் . பணக்காரர்களுக்கு ஒரு நீதி!  நடுத்தரவாதிகளுக்கு ஒரு நீதி! ஏழைகளுக்கு ஒரு நீதி! முஸ்லிம்களுக்கு எப்பொழுதும் இந்தியாவில் அநீதிகள் தான் இழைக்கப்பட்டு வருகிறது. அப்பாவி முஸ்லிம்களை காவல்துரைகள் பிடித்துக் கொண்டு போய் , அவர்களை சித்திரவதை செய்து கொன்றுவிடுவார்கள் அல்லது அவர்களை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பார்கள். இதுதான் இப்பொழுது நடந்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் செத்துவிட்ட நீதியை யார் உயிர்ப்பிப்பது ..? இன்ஷாஅல்லாஹ் இஸ்லாம் சட்டம் வந்தால் நிச்சயமாக இந்தியாவில் நீதி மீண்டும் உயிர்ப்பிக்கும் என்பதில் ஒரு துளிக் கூட ஐயம் இல்லை.


அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறிய ஒரு ஹதீஸின் கருத்து..

இருவருக்கும் மத்தியில் தீர்ப்பு வழங்கும் நீதிபதி அவர் கோபமாக இருக்கும் நிலையில் தீர்ப்பு வழங்க வேண்டாம்.
நூல்.. புகாரீ]

மனித சமுதாயத்துக்கிடையில் எழும் பிரச்சனைகள், தகராறுகளை விசாரித்து அவர்களுக்கு நீதி வழங்க நீதிபதிகளை ஏற்படுத்தும் முறை ஆதிகாலம் தொடுத்த ஒன்றுதான்.
ஆனால் நீதிபதிகள் தனியார் குருக்கீட்டாலோ, பண ஆசையினாலோ வேலியே  பயிரை மேய நடந்து கொள்வது சமீபகால சாபக் கேடாகும்.

மனசாட்சிக்குப் பயந்து, அநீதி இழைக்கப்பட்டுவோரின் அக்கினிப் பார்வைக்கு அஞ்சி, சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி எரிந்து நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் அவருக்கும் ஒரே நீதிதான் என்ற வகையில் நீதிப்பரிபாலனம் செய்து கொண்டிருந்த நீதிக்காலம் மலையேறிப் போய்விட்டது. நீதி குழிதோண்டிப் புதைக்கப்படுவதால், அநீதி குன்றின் மீதேறி நின்று கை கொட்டிச்சிரிகின்றது. அநீதி பெருகப் பெருகப் நாட்டில் குழப்பங்களும், கலகங்களும் மின்னல் வேகத்தில் வெடித்துச் சிதறிவருகின்றன . இஸ்லாம் சொல்லித்தரும் முறையில் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்தால், பழைய பொற்காலத்தைக் கண்முன் காணலாம்.

முதலில், நீதிபதி ஆசனத்தில் அமர்பவர், இயற்கையிலேயே இறைவனை அஞ்சி நடப்பவராக, சமய சந்தர்ப்பத்துக்கு மாறாதவராக , சிறந்த பக்திமானாக இருக்கவேண்டும்.

நபிகளாரைவிட சிறந்த பஞ்சாயத்து இல்லை எனலாம். ஆனால் அவர்களைப் பார்த்து  அல்லாஹ் கூறுமிடத்து..
''நபியே! நீங்கள் மக்களுக்கு தீர்ப்பு வழங்கினால் நீதமுடன் தீர்ப்பு வழங்குங்கள்!'' என எச்சரிக்கின்றான்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் உண்மை நீதிபதிகளுக்கு அடையாளம் கூறுகின்றான். நபி தாவூது [அலை] நபி சுலைமான் [அலை] அவர்களிடம் வந்த ஒரு  வழக்கையும், அதற்கு அவர்கள் வழங்கிய தீர்ப்பையும் கூறிவிட்டு, நீதிபதிகளிடம் இருக்கவேண்டிய மூன்று அம்சங்களை உபதேசமாக அல்லாஹ் கூறுகின்றான். இதை கல்விக்கடல் இமாம் ஹசன் பசரீ [ரஹ் ] அவர்கள் , திருக்குர்ஆனிலிருந்து நமக்கு பகுத்துத் தருகின்றார்கள்.

1. நீதி வழங்க கையூட்டும் எதுவும் வாங்கக் கூடாது! என்பதாகும்.
கையூட்டும் வாங்கிக் கொண்டு நீதி வழங்கினால் நீதி சேர வேண்டியவருக்கு சேராது என்பது அனைவருக்கும் அறிந்த பேருண்மையாகும். அவர்கள் கையூட்டும் வாங்காதிருக்க வழி , நீதிபதிகள் தன்னிறைவு கொள்ளுமளவு வாழ்க்கைப்படி அளிக்க வேண்டும். அதற்கு மேலும் அவர்கள் வாங்கினால், அவர்களை உடனடியாக எந்த இரக்கமும் காட்டாமல் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

2. மக்களை அஞ்சாமல் மாபெரும் வல்லோனாகிய அல்லாஹ்வை மட்டும் அஞ்ச வேண்டும் என்பதாகும்.
நீதிபதிகள் தீர்ப்பு வாசிக்கும் பொழுது அந்த நீதிதேவன் கவனித்துக் கொண்டிருக்கின்றான். அதில் அநீதி இருக்குமானால், அல்லாஹ் தங்களுக்கு தண்டனை வழங்கிவிடுவான்  என்ற அச்சம் இருக்கவேண்டும். சத்தியத்தை வாசிக்கும் பொழுது  , அதன் விளைவாக எவ்வளவு பெரிய தீங்கு விளையும் என்றிருந்தாலும், அச்சத்தியத்துக்கு ஒரு போதும் துணைபோகக் கூடாது. மனிதர்களை அஞ்சி தீர்ப்பு வழங்குவது நியாயத்தர்ப்பு மக்களின் வயிற்றிலடிப்பதாகும். நீதிபதிகள் நீதியை நிலை நாட்டுவதனால், அவர்களுக்கு கெட்ட ஆபத்துகள் ஏற்படும் என்றால் அவர்களுக்கு தக்க பாதுகாப்புத்தருவது அரசின் கடமை.

3. அற்ப ஆசைகளுக்கு அடி பணியக்கூடாது என்பதாகும்.
ஏனென்றால் , வேண்டாத ஆசைகள் வளர வளரத்தானே அதை நிறைவேற்றிக் கொள்ள தீய வழிகளைக் கையாள நேரிடும். பண முதலைகளின்  பண மூட்டையைக் கண்டதும் பல்லிளிக்க நேரிடும்? எனவே அளவு கடந்த ஆசை நீதிபதிகளுக்கு கூடாது.

நீதிபதிகள் தம்மிடம் வழக்காடுபவர்களை தமது குடும்பத்தவராக மதிக்க வேண்டும். தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் எந்தவொரு தீர்ப்பை விரும்புவார்களோ அதையே மற்றவருக்கும் விரும்புதல் வேண்டும்.

மறுமையில் அல்லாஹ்வின் நிழலில் இன்பமடைவோரில், ''தமக்கும் வழங்கும் தீர்ப்பு போன்றே மற்றவருக்கும் வழங்கும் நீதிபதிகள் இருப்பர் '' என்று நபி பெருமானார் [ஸல்] நவின்றுள்ளார்கள்.

பொதுவாக நீதி வழங்குவோருக்கு ஆட்சியிலிருப்போரின் நெருக்கடிகளும், மிரட்டல்களும் இருந்து வருவது தொடர்கதையாகும். ஆட்சியாளர்கள், நினைத்ததை சாதிக்க தப்பை மறைக்க, ஊழல் அம்பலம் ஏறாமளிருக்க நீதிபதிகளை கருவிகளாக பயன்படுத்திக் கொள்வது உண்டு. ஆனால் நீதிபரிபாலனம் புரிவோர் அவர்களுக்கு சிறிதேனும் அசைந்து கொடுக்க
கூடாது.

இன்று நடந்துக் கொண்டிருக்கின்ற இந்துத்துவ ஆட்சியை நடுத்தர மக்களாகிய அன்பு சகோதரரர்கள் இந்துக்கள்  புரிந்துக் கொள்ள வேண்டும் ! முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கக் கூடிய சதிகளுக்கு, சூழ்ச்சிகளுக்கு நீங்கள் குரல் கொடுக்க வேண்டும்! உங்களுக்கும் ஒருநாள் இதுப் போன்று நடக்கக் கூடும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். இந்துக்களும் , முஸ்லிம்களும் என்றும் எப்போதும்  ஒற்றுமையாக வாழ விரும்புகிறார்கள் . அவர்கள் எல்லோரும் சகோதரர்களே!

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!