மீஸான் தராசை கணப்படுத்துவது நற்குணமே! |
இஸ்லாம் நாளுக்கு நாள் நன்கு வளர்ந்து வந்த நேரம் அது. அவ்வேளை '' ஏமன் தேசத்திற்கு இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதற்காக உங்களில் யார் தயார்? '' என விந்தை நபி வினவியபோது, அச்சபையில் வீற்றிருந்த அபூபக்கர் [ரலி] அவர்கள், '' நான் தயார்'' என்று முன்வந்தபோது, ஏனோ தெரியவில்லை, மாநபி [ஸல்] அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள்.
அச்சபையில் அதே கேள்வி மீண்டும் வளம் வந்தபோது , ''இதோ .. நான் தயார்'' என்றார் ஒருவர். அவர்தான் மஆது இப்னு ஜபல் [ரலி] அவர்கள். அப்போது அண்ணலார் அவரை நோக்கிச் சொன்னார்கள், '' உண்மையிலேயே இச்சேவைக்கு நீர் மிகவும் தகுதியாவர்தான்! '' என்று. ஒரு சில நாட்களில் அவர் புறப்படத் தயாரானவுடன் மதீனாவின் ஊர் எல்லைக்கு உத்தம நபி [ஸல்] அவர்கள் வந்து வழியனுப்பி .வைத்தார்கள் . அந்த கடைசி நிமிடங்களில் அண்ணலார் அவருக்குச் சொன்ன அந்த ஆறு உபதேசங்கள் எந்த தேசத்தவருக்கும் வெகு எளிதாக கடைபிடிக்கும் படியான ஒன்றித்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
''மஆதே ! ஒரு பாசமிகு நேசன் சொல்வதைப் போல் சொல்கிறேன்! வெகு கவனமாக அவற்றை நீ செவியேற்று செயல்படுத்து!
எப்போதும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்!
எப்போதும் நல்ல செயல்களையே செய்!
எப்போதும் மிக மென்மையாகவே பேசு!
எப்போதும் முழு உண்மையையே உரை!
எப்போதும் அமானிதத்தை பாதுகாத்திடு!
எப்போதும் எளிய வழியையே கடைபிடி!
நூல்- உஸ்துள்ஙாபா - பாகம் பக்கம் 210]
மேற்கண்ட அந்த ஆறு அரும்பண்புகளும் இன்றைக்கு நம் ஒவ்வொருவருக்கும் அதிஅவசியமான ஒன்றாக இருக்கிறதன்றோ!
குறிப்பாக பெண்களாகிய அவை கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்றே. ஏனெனில் ஒரு பெண் சீர் பெறும்போது ஒரு முழுக் குடும்பமே சீர் பெறுகிறது.ஒரு சீரழியும்போது மொத்தக் குடும்பமே சீரழிந்து போய் விடுகிறதல்லவா. அதனால்தான் சொல்கிறோம். ஒரு பெண்ணுக்கு இவ்வாறு குணங்களும் அவசியம் என்று.
இறையச்சம், நற்செயல், மென்பேச்சு , மெய்வார்த்தை , அமானிதம், எளியவை என இவை யாவும் மனிதனை புனிதப் பண்புகள் . நற்பெயர் பெற்றவர்தான் நல்லதொரு இறைவிசுவாசி'' என நபிகளார் நவின்றிருப்பதும் இங்கு இணைத்துப் பார்க்கதக்கதே!
கெட்ட குணங்களை நாளுக்கு நாள் நன்கு வளர்த்துக் கொள்ளத் தெரிகிற நமக்கு நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ளத் தெரியாதா என்ன? நாம் அதற்காக சற்றும் முயற்சி செய்வதில்லை. அவ்வளவுதான் அதைத் தவிர வேறொன்றும் இல்லை .
பிடிவாதம் , விரோதம் , சண்டை, பழிக்குப் பழி , தற்பெருமை, பொறாமை, பொய், புறம், கோள் என்று ஆஹா எத்தனை எத்தனை தீய குணங்கள் பெரும் பட்டியலே தயாரித்து விடலாம். ஆனால் நற்குணம் நற்பண்பு என்று வருகிறபோது வெறும் வெள்ளைப் பேப்பர்களே வெளியே நின்று கைகொட்டிச் சிரிக்கின்றன .
முதலில் நமக்கு ''தக்வா '' எனும் இறையச்சம் வரத் தொடங்கிவிட்டால் போதும், அடுத்தடுத்து நல்ல குணங்கள் நம்மை அறியாமலேயே நமக்கும் நிச்சயம் வளரத் தொடங்கிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை.
கடந்து போன ரமலான் நமக்கு கொடுத்து விட்டுச் சென்ற பெருங்கொடையே அந்த ஒரு தக்வா'' தான். நோன்பு கடமையாக்கப் பட்டதற்கு மூலக்காரணமும் அதுவே. ஆனால் நாம் ரமலானில் அல்லாஹ்வுக்கு அனுதினமும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் பயப்பட்ட அளவுக்கு இப்போது பயபடுவதில்லையே ஏன் ..? தக்வா ரமலானில் மட்டும்தானா..? அது ஒரு பயிற்சி மாதம் நமக்கு . அப்பயிற்சியை மீதமுள்ள மாதங்களில் கட்டாயம் நாம் கடைபிடிக்க வேண்டும்.
நோன்பு என்பது வண்ண வண்ண உடைகள் வாங்குவதற்கும், வகைவகையான உணவுகள் உண்ணுவதற்கும் வந்துவிட்டுப் போன மாதமல்ல அது. நாம் நமது தீய குணங்களிருந்து விடுபட்டு, தூய குணங்களை தொடர்ந்து இதயங்களில் இருக்கக் கட்டிப் போட்டு வாழ்ந்து காட்டிய மாதும் அது.
நம்மால் முடியாதது, பிறகு அது யாராலும் முடியாத ஒன்றே! எனவே முடியாதது என்பது நம்முடைய முயலாததே தவிர, வேறு ஒன்றும் அங்கு இல்லவே இல்லை. குணம் சரியானால், மனித குலம் சரியாகும். கூடவே இந்த புனித நிலமும் சரியாகும். இன்றைய அவசியத் தேவையும் அதுதானே ! வாருங்கள்! நற்குணங்களை கடைபிடிப்போம்! துர்குணங்களுக்கு விடை கொடுப்போம்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
நன்றி.. எஸ். என் .ஆர் ஷவ்கத் அலி மஸ்லஹி -ஈரோடு.
நன்றி.. நர்கிஸ் மாத இதழ் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Welcome to your comment!