செவ்வாய், ஜனவரி 12, 2016

சுவனக்கோட்டை யாருக்கு?

அல்லாஹ்வின் திருபெயரால் ................
மன்னிப்பின் விரிந்த எல்லை ..
அல் அஃபுவ்  எனும் திருபெயரைத்தான் பெயராகக் கொண்டிருக்கும் இறைவனது மன்னிப்பு என்பது கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விரிந்த எல்லை கொண்டது. மூஸா [அலை] அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள். யா அல்லாஹ் ! உன்னை வழிபடும்  ஒரு நல்லடியான் உன்னை என் இறைவா! என்று அழைத்தால் நீ அவனுக்கு எவ்வாறு பதிலளிப்பாய்?.. அல்லாஹ்  கூறினான், இதோ வந்துவிட்டேன் என் அடியானே! என்று பதில் கூறுவேன் . மூஸா [அலை] கேட்டார்கள் அவ்வாறெனில் ஒரு பாவி உன்னை அழைத்தால் என்ன பதில் கூறுவாய்? ..அல்லாஹ்  கூறினான், இதோ வந்துவிட்டேன் என் அடியானே! இதோ வந்துவிட்டேன் , வந்துவிட்டேன் , என் அடியானே! என்று பதில் கூறுவேன். வியப்புடன் மூஸா [அலை] கேட்டார்கள். இறைவா! நல்லவனுக்கு ஒரு தடவை மட்டும் பதில் தரும் நீ, பாவிக்கு மட்டும் ஏன்  மூன்று முறை பதில் தருகின்றாய்? அல்லாஹ்  கூறினான், நல்லவன் என்னை அழைக்கும்போது அவன் செய்த நற்செயல்களை நினைத்தவாறு அழைக்கின்றான். ஆனால் பாவி எனது மன்னிப்பையும் கருணையையும் மட்டும் நம்பியல்லவா என்னை அழைக்கின்றான்! [இப்னு கஸீர் ]


இதைவிட மேலாக அல்லாஹ்வுடைய மன்னிப்பின் விரிந்த எல்லை குறித்து ஹதீஸூல் குத்ஸி  இவ்வாறு குறிப்பிடுகின்றது. இறைவா என்னை மன்னித்துவிடு! இறைவா என்னை மன்னித்துவிடு! என்று அதிக பாவங்கள் செய்த ஓர் அடியான் அரற்றும்போது , அவனது சப்தம் அல்லாஹ்வை அடைந்து விடாதவாறு வானவர்கள் தங்கள் இறக்கையால் தடுக்க முற்படுகின்றனர். அப்போது இறைவன் கூறுவான், எனது அடியானின் சப்தத்தைத் தடுக்காதீர்கள். அப்போது வானவர்கள் கூறுவார்கள் . இன்ன.. இன்ன.. தவறுகளை  இவன் செய்திருக்கின்றான் இறைவா! ஆகவே இவன் உனது மன்னிப்பிற்கு தகுதியற்றவன். அதற்கு அல்லாஹ்  கூறுவான் என்னை அஞ்சி என்னிடம் மன்னிப்புக் கேட்பவர்களை நான் விரும்புகின்றேன். உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன். அவனது பாவங்களை நான் மன்னித்துவிட்டேன்.
தைலமீ , இஹ்யா, உலூமித்தீன் ]

இதைவிட இன்னும் விரிவாக அல்லாஹ்வின் மன்னிப்பைக் குறித்து பின்வரும் ஹதீஸ் அறிவிக்கின்றது. அல்லாஹ்  கூறுகின்றான். ஆதத்தின் மகனே! உன்னை எனது கைகளால் படைத்தேன்  . எனது கருணையால் உன்னைப் பராமரித்தேன். நீ எனக்கு மாறு செய்கின்றாய். என்னிடம் நீ திரும்பிவந்தால், உன்னை நான் ஏற்றுக்கொள்வேன். நான் மன்னிப்பாளன், கருணையாளன் என்னைப் போன்று வேறொரு இறைவன் உனக்கு எங்கிருந்து கிடைப்பான்?  உன்னை நான்  நினைவுகூருகின்றேன். என்னை நீ மறந்துவிடுகின்றாய். உன்னைப் பார்த்து நான்  வெட்கப்படுகின்றேன். என்னிடம் நீ வெட்கமில்லாமல் நடந்துகொல்கின்றாய். யார் தட்டி என் வாசல் திறக்காமல் இருந்திருக்கிறதா? யார் கேட்டு நான் கொடுக்காமல் இருந்திருக்கிறேன். நான் என்ன கஞ்சனா? என்னிடம் ஏன்  மன்னிப்பைக் கேட்காமல் இருக்கின்றாய்...? [இப்னு கஸீர் ]

நான்  பெரிதும் மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறேன்  என்பதை என் அடியார்களுக்கு [நபியே] நீர் அறிவித்துவிடும் .
[15..49]

எனும் திருக்குர் ஆன் வசனம் எவ்வளவு நிஜம்!  ஒரு கிராமவாசி நபி [ஸல்] அவர்களிடம்  கேட்டார். இறைத்தூதரே! மறுமையில் நம்மை விசாரிப்பது யார்? பெருமானார் [ஸல்] கூறினார்கள், அல்லாஹ் . அவர் கேட்டார். அல்லாஹ்வேதான் விசாரிப்பானா?  அதற்கு அண்ணலார் [ஸல்] ஆம்! என்று கூறவும்  அந்தக் கிராமவாசி அல்லாஹூ அக்பர் ! என்று கூறி சிரித்தார். எதற்காக சிரிக்கின்றீர் என்று பெருமானார் [ஸல்] கேட்கவும் , அவர் கூறினார் . இறைவனின் தூதரே! கருணையாளனாகிய  அல்லாஹ்வே விசாரித்தால் மன்னிக்கலாமா இருப்பான்? கேள்வி கேட்டால் கருணை காட்டாமலா இருப்பான்? அது கேட்ட பெருமானார் [ஸல்] அவர்கள் சிரித்தவாறு கூறினார்கள் . கிராமவாசி புரிந்துக் கொண்டார் . தெரிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ்வைவிட மேலான மன்னிப்பாளன் வேறு எவரும் இல்லை  . மறுமையில் மன்னிப்பின் மிக விரிந்த எல்லை.. அனைத்துக்கும் மேலாக மறுமையில் அல் அஃபுவ்  எனும் இறைவனுடைய மன்னிப்பின் எல்லை நமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு விசாலமானதாக இருக்கும். சிறு பருவத்திலேயே இறந்துவிட்ட குழந்தைகள் மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால்  அழைத்து வரப்படும் அப்போது அவர்களிடம்  அல்லாஹ்  கூறுவான், செல்லுங்கள் எனது சுவனத்தில் நுழையுங்கள்   அவர்கள் கூறுவார்கள் . இல்லை இறைவா! எங்களது தாயும் தந்தையும் எங்களுடன் நுழையாதவரை நாங்கள் சுவனம் செல்லமாட்டோம். அப்போது அக்குழந்தைகளிடம் அல்லாஹ்  கூறுவான். உங்களது பெற்றோர்களின் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன். அவர்களது கைகளைப் பிடித்தவாறு நீங்கள் அனைவரும் சுவனத்தில் நுழையுங்கள்.[அஹ்மது]

இந்த இறைவனுக்கு தான் நம் மீது எவ்வளவு கருணை! நமது பிள்ளைகளின் காரணத்தால்  நமது பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கிறான். ஏனெனில் அவன்  அல் அஃபுவ் . அண்ணல் நபி [ஸல்] அவர்களுடைய சமுதாயம் என்று அழைக்கப்படும் நம்மீது மறுமையில் இறைவன் தனிப்பெரும் கருணை புரிவான். அவனது ஈடு இணையற்ற மன்னிப்பின் எல்லை அது. அண்ணல் நபி [ஸல்] அவர்களே அந்த நிகழ்வைக் குறிப்பிடுகின்றார்கள்.. சுவனவாசிகள் அனைவரும் சுவனம் சென்றபின், எனது சமுதாயத்தைச் சார்ந்த பெருங்கூட்டம் ஒன்று நரகில் இருக்கும். அல்லாஹ்வின் அரியணைக்கு முன் நான் சுஜூதில் விழுந்து இறைவா! எனது உம்மத்.. எனது உம்மத்.. என்று அழுதுகேட்பேன் . அப்போது நரகத்திலிருந்து ஒரு கூட்டத்தை அல்லாஹ்  வெளியேற்றுவான் . ஆயினும் இன்னும் நரகில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் இருப்பார்கள். மீண்டும் அல்லாஹ்விடம் கேட்பதற்கு நான் வெட்கப்படுவேன். அப்போது அல்லாஹ்  கூறுவான். நபிமார்கள் பரிந்துரைத்தார்கள். இறைத்தூதர்கள் பரிந்துரைத்தார்கள். வானவர்கள் பரிந்துரைத்தார்கள். நம்பிக்கையாளர்கள் பரிந்துரைத்தார்கள். நோன்பு பரிந்துரைத்துள்ளது. எனது நேசர் முஹம்மத் பரிந்துரைப்பார். நான் மன்னிக்கமாட்டேனா! நிச்சயம் மன்னிப்பேன். பின்னர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று உளமார கூறிய அனைவரையும் நரகைவிட்டு அல்லாஹ்  வெளியேற்றுவான் . கருணையாளனால் நரகிலிருந்து விடுதலை பெற்றவர்கள் என்று அவர்களுக்குப் பெயர் சூட்டப்படும்.

இன்ஷாஅல்லாஹ்  இன்னும் தொடரும்.... அடுத்த இதழில் பார்ப்போம்
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்...     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!