புதன், ஏப்ரல் 06, 2016

ஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை ..

நான் எப்படி இருந்தேன்! இப்போ இப்படி ஆயிட்டேன்..
ஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை ..[அவசியம் படியுங்கள்]
அல்லாஹ்வின் திருபெயரால்...
அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
''பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச் சிறந்த தர்மமாகும்.''
அறிவிப்பாளர்.. அனஸ் [ரலி]
நூல்..மிஷ்காத்]

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''யாசிப்பவனுக்கு ஏதாவது கொடுங்கள், அது எரிந்துபோன குளம்பாக இருந்தாலும் சரியே!''
நூல்.. மிஷ்காத்[


ஒருநாள் ஒரு கிராமத்தில் கணவனும் மனைவியும் உணவு உண்பதற்காக அமர்ந்திருக்கும் சமயம் ஒரு வழிப்போக்கர் தாம் பசியோடிருப்பதாகவும் ஏதாவது உணவளிக்கும்படியும் வீட்டின் கதவை தட்டி வேண்டிக் கொண்டார். உணவு உண்பதற்குத் தயாராக இருந்த அக்கிராமவாசிக்குக் கோபம் வந்து  விட்டது. உடனடியாக வெளியே வந்து அவ்வழிப்போக்கரை அடித்துக் கீழே சாய்த்து விட்டார். சிறிது நேரம் சென்றதும் அவ்வழிப்போக்கர்  எழுந்து நேரடியாகப் பள்ளிவாசலுக்குச் சென்று ஒளு  செய்து தொழுதுவிட்டு எல்லாம் வல்ல இறைவனிடம்  ''யா அல்லாஹ் ! என்னுடைய பசியைப் பற்றி மனிதர்களிடம் சொன்னால் எனக்கு அடி விழுகிறது . எனவே இனிமேல் எந்த மனிதனிடமும் சென்று பிச்சை கேட்கமாட்டேன். இன்று முதல் உன்னிடத்தில் தான் கேட்பேன் '' என்று பிரார்த்தனை புரிந்தார். அதுமுதல் எல்லாம் வல்ல இறைவனின் கிருபை அந்த வழிப்போக்கருக்குக்  கிடைக்க ஆரம்பமாயிற்று, நாட்கள் நகர்ந்தன, அவ்வழிப்போக்கருக்கு  செல்வம் வளர்ந்தன.

இந்த வழிப்போக்கரை அடித்த கிராமவாசியின் நிலைமை நாட்கள் செல்லச்செல்ல மோசமாகிக் கொண்டே போயிற்று . வறுமையும் கஷ்டமும் அதிகரித்துக்கொண்டே போனதின் காரணமாகத் தம்முடைய மனைவியையும் திருமண ரத்து [தலாக்கு] சொல்லிவிட்டார். ஒவ்வொரு நாளும் பொழுது போவதே கஷ்டமாயிற்று. எனவே பிச்சை எடுக்கும் தொழில் ஆரம்பித்து வீடுவீடாகச் சென்று பிச்சை கேட்டார், ஒரு வீட்டு வாசலின்முன்  நின்று தாம் பசி  யோடிருப்பதாகவும் , தமக்கு ஏதாவது உணவு அளிக்குமாறு வீட்டின் கதவைத் தட்டி வேண்டிக் கொண்டார்.

அவ்வீட்டினுள் கணவனும் மனைவியும் உணவு உண்பதற்காகத்  தயாரானார்கள். இருந்த போதிலும், பசியுடன் வெளியே நிற்கும் ஏழைக்கு ஏதாவது உணவு போடுப்படி மனைவிக்கு உத்தரவிட்டார்.  மனைவி கணவனுடைய உத்திரவுப்படி சிறிது உணவை  எடுத்துக்கொண்டு வெளியில் வந்ததும், அவ்விடத்திலேயே மயக்கமுற்று கீழே விழுந்துவிட்டார். சிறிது நேரம் சென்றதும் கணவன் மனைவி மயக்கமுற்று விழக்காரணம்  யாது என வினவினார். அதற்கு அம்மனைவி கூறியதாவது.. பிச்சை கேட்டு வந்த அந்நபர் தம்முடைய முந்தின கணவர் என்றும் முன்னதாக அவர் ரொம்ப வசதியுடனிருந்ததாகவும் , ஒரு நாளன்று தம்வீட்டிற்கு பிச்சைக் கேட்டு வந்த ஒருவரை அடித்ததிலிருந்து வறுமையும், கஷ்டமும் ஏற்பட்டு தம்மையும் தலாக் சொல்லிவிட்டதாகவும் கணவரிடம் கூறி தம்முடைய பழைய நிகழ்ச்சிகள் எல்லாம் சொல்லிக் காட்டினாள்  .

இவைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கணவன் உன்னுடைய முந்தின கணவனிடம் அடிவாங்கிய அந்தப் பிச்சைக்காரன் நான் தான்!  அடியை வாங்கிகொண்டு பள்ளிவாசலுக்கு சென்று இறைவனிடம் முறையிட்டேன். எனவே எல்லாம் வல்ல இறைவன் என் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உண்டாக்கிவிட்டான். என்பதாக தம்முடைய வாழ்க்கையில் நடைபெற்ற மாற்றங்களை விபரமாகச் சொல்லிக் காட்டினார். மேலும், பிச்சைக்காரனாக்கி அவருடைய மனைவியாகிய உன்னை எனக்கு திருமணம் செய்து தந்து மேலும்  என்னுடைய வீட்டிற்கே அவரைப் பிச்சை வாங்க அனுப்பி வைத்ததும், எல்லாம் வல்ல இறைவனின் செயல்! என்பதாக மிக உருக்கமாகச் சொன்னார்.
படிப்பினை.. அல்லாஹ்  யாரையும் எப்படி வேண்டுமானாலும் ஆக்குவான்.. வாழ்க்கையை புரட்டி போடக் கூடிய வல்லமை உடையவன் அல்லாஹ் !
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!