அல்லாஹ்வின் திருபெயரால் ...
ஒரு சமயம் பெருமானார் [ஸல்] அவர்கள் அபூஹுரைரா [ரலி] அவர்களை நோக்கி ''அபூஹுரைராவே! உமக்கு இவ்வுலக நிலைமையைப் பற்றி அறிவித்துத் தரட்டுமா? '' என்று வினவியபோது , ''அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! அறிவித்துத் தாருங்கள்'' என்று கூறினார்கள். எனவே நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் அந்த சஹாபி [ரலி] அவர்களை ஒரு மைதானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு மனிதர்களின் மண்டை ஓடுகளையும், எலும்புத் துண்டுகளையும், மலக் குழிகளையும், கிழிந்து போன கந்தல் துணிகளையும் கண்டார்கள்.
அங்கிருந்து வரக்கூடிய துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல் அபூஹுரைரா [ரலி] அவர்கள் தங்களின் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். இதைப் பார்த்த பெருமானார் [ஸல்] அவர்கள், 'அபூஹுரைராவே! துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கைப் பொத்திக் கொண்டீரா? இதோ பாரும்,'' என்று கூறி அங்கிருந்த ஒரு மண்டை ஓட்டை எடுத்துக் காண்பித்து ''இது என்ன? '' என்று கேட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இது ஒரு மனிதனின் மண்டை ஓடு என்று அந்த சஹாபி கூறினார்கள்.
பின்னர் அருகில் கிடந்த ஓர் எலும்புத் துண்டை எடுத்துக் காண்பித்து, 'தோழரே! இது என்ன பாரும்? என்று கேட்டபோது, 'அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! இது ஒரு மனிதனுடைய எலும்புத் துண்டு என்று கூறினார்கள் அந்த தோழர். பின்னர் ஒரு கிழிந்த கந்தல் துணியை எடுத்துக் காட்டி, ''தோழரே! இதைப் பார்த்தீரா? ' என்று வினவ, 'அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! இது கிழிந்துபோன துணி என்று கூறினார்கள் அந்த நபித் தோழர் அவர்கள். பின்னர் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் தோழரை நோக்கி , ''அபூஹுரைராவே! இதோ பாரும், இந்த மனிதனுடைய மூளை இதே மண்டை ஓட்டில்தான் இருந்தது.
''இந்த எலும்புத் துண்டைப் பார்த்தீரா? இது ஒரு மனிதனுடைய உடம்பில் ஒரு பகுதியாக இருந்தது. இந்தத் கந்தல் துணியைப் பார்த்தீரா? இந்தத் துணியை ஒரு நேரத்தில் ஒரு மனிதன் தன்னுடைய உடம்பில் அணிந்து கொண்டு எவ்வளவு ஓய்யாரமாக நடந்து சென்றிருப்பான்? இப்போது இவைகளெல்லாம் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. ஒரு காலத்தில் இந்த மண்டை ஓடுகளும் எலும்புத் துண்டுகளும், கந்தல் துணிகளும் மனிதர்களால் மதிக்கப்பட்டு வந்தன.
''ஆனால் இப்போது இவைகளை யாரும் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. எப்படி இப்பொருட்களை மக்கள் மதிக்க வில்லையோ,, அப்படியே, அல்லாஹ்வும் இவ்வுலகத்தையும் இவ்வுலகத்திலுள்ள பொருள்களையும் மதிப்பதே இல்லை, திரும்பிக் கூட பார்ப்பதில்லை. இவ்வுலகம் இதில் அடங்கியுள்ள அத்தனைப் பொருள்களும் அல்லாஹ்வினிடத்தில் ஒரு பொருட்டாக இல்லை. தோழரே! பார்த்தீரா இதுதான் உலகம்! இதுதான் உலகம்! என்று பெருமானார் [ஸல்] அவர்கள் அந்தத் தோழர் [ரலி] அவர்களிடம் கூறினார்கள். இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அபூஹுரைரா [ரலி] அவர்கள் கண்ணீர் வடித்துக்கொண்டு அதே இடத்தில் ஸ்தம்பித்து நின்றுவிட்டார்கள். இச்சம்பவத்தை அந்த சஹாபி [ரலி] அவர்களே கூறுகின்றார்கள்..
நமக்கு ஒரு படிப்பினை பெறுவதற்கான ஓர் அழகிய சம்பவம்.. இந்த உலகத்தில் ஒருவொர்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு இந்த உலகத்தை அடையச் ஆசைப்படுகிறார்கள். இருப்பவர்களும் இன்னும் வேண்டும் என்று ஆசைக் கொள்கிறார்கள். இல்லாதவர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏக்கம் வேண்டாம் என்பதற்கு இந்த சம்பவம் மூலம் நமக்கு பாடம் புகட்டுகிறது. அல்லாஹ்வின் நல்லடியார்களே! சிந்தித்து நல்வுணர்வு பெற்றுக்கொள்ளுங்கள்! சொர்ப்பக் கால வாழ்க்கை!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Welcome to your comment!