வியாழன், ஜூலை 21, 2016

பொறாமையின் விளைவு

பொறாமையின் விளைவு .......
அல்லாஹ்வின் திருப்பெயரால்............

ஓர் ஊரில் ஒரு சுல்தான் ஆட்சி புரிந்து வந்தார். அந்த அரசரிடம் ஒவ்வொரு வாரமும் ஒரு மகான் சென்று அறிவுரைகள் கூறுவது வழக்கம். ஒரு நாள் அந்த அரசரை நோக்கி,  ''அரசரே! யாரேனும் தங்களுக்கு உதவி புரிந்தாலும் சரி அல்லது தங்களுக்கு தீங்கிழைத்தாலும் சரி அவருக்கு தாங்கள் நன்மையையே செய்யுங்கள் ,, தீமை ஒன்றும் செய்திட வேண்டாம்'' என்று அந்த மகான் கூறினார். அந்த அரசர் தமக்கு நல்லறிவைக் கற்பிக்கக் கூடிய  மகானுக்கு தம் அரசவைக்கு வரும்போதெல்லாம் அன்பளிப்பாக ஏதேனும் சன்மானங்களை கொடுப்பது வழக்கம்.

அந்த மகான் அரசவைக்கு அடிக்கடி சென்று சன்மானங்களை பெற்று வருவதை ஒருவன் கண்டு அந்த மகான் மீது பொறாமை கொண்டான். தானும் அந்த அரசருடன் பழகி ஒன்றாக இருந்தும் சன்மானம் வழங்கப்படவில்லையே என்று ஆத்திரமடைந்தான்.


பொறாமை நாளாக ஆக வளர்ந்து  கொண்டே சென்றது. எனவே அரசருக்கும், அந்த மகானுக்கு ஏற்ப்பட்டுள்ள தொடர்ப்பைத் துண்டித்துவிட  வேண்டுமென்ற கெட்ட  எண்ணத்துடன் சதித் திட்டங்களை வகுத்து கடைசியாக ஒரு முடிவு செய்தான். அதாவது அரசரிடம் சென்று அந்த மகானைப் பற்றி இல்லாதவற்றைக் கூறி வெறுப்புண்டாகும்படி செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். எனவே அரசரிடம் சென்று ''அரசரே! தங்கள் அரசவைக்கு அடிக்கடி வந்து போகும் பெரியவர் தாங்கள் பேசும்போது வாய் நாற்றம் அடிப்பதாக என்னிடம் பல தடவைகள் கூறினார் '' என்றான். மேலும் தொடர்ந்தான்,,  ''உண்மையில் அந்தப் பெரியார்தான் வாய் நாற்றமுடையவர் இதற்கு ஆதாரம் என்னவென்றால் தங்களுடன் சம்பாஷிக்கின்றபோது அவரின் துர்நாற்றம் தங்களின் மூக்கில் படாதிருப்பதற்காகத் தங்களுடன் தூரமாகக் கையால் மறைத்து  கொண்டு பேசுவார் என்று கோள்மூட்டி விட்டான்.

இச்செய்தியைக் கேட்டதும் அந்த மகான் மீது அரசருக்கு வெறுப்புண்டாயிற்று. ''நல்லது'' அப்பெரியார் வரட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன் '' என்று கூறி அந்த பொறாமைக்காரனை அனுப்பி விட்டார். மறுநாள் காலையில் வழக்கம்போல் அப்பெரியார் அரசரைச் சந்தித்து அறிவுரைகள்  பகர்வதற்காகச் சென்று  கொண்டிருந்தார்கள். அந்த பொறாமைக்காரன் அந்த பெரியவரை அணுகி ,  ''பெரியவரே! தாங்கள் இன்று என் இல்லத்திற்கு வருக தந்து சிற்றுண்டி அருந்த வேண்டும் '' என்று அவன் அழைத்தான் . அழைப்பை ஏற்றுக் கொண்டு அவனின் இல்லத்திற்கு வருகை தந்தார்கள் அந்த பெரியார். பச்சை  வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் அதிகம் சேர்த்து சமைக்கப்பட்ட உணவை கொடுத்தான் அந்த பொறாமைக்காரன்.  உணவு அருந்திய பின் இறைவனை வாழ்த்தியவாறு அரசவைக்கு சென்றார்கள்  அப்பெரியார்.

வழக்கமாக அரசருக்கு அறிவுரை கூறும்போது தம் அருகில் வரும்படி அப்பெரியாரை அரசர் அழைத்தார். சற்று முன் சாப்பிட்ட உணவில் அதிக வெங்காயமும், பூண்டும் சமைத்தபடியினால் அவர்களின் வாயிலிருந்து துர்நாற்றம் வீசியது. எனவே, சற்று தூரமாகவே நின்று வாயை கையால் சிறிது மறைத்தவாறே பேசலானார்கள் . இதைக் கண்ணுற்ற அரசர் நேற்று அந்த மனிதன் சொன்னது உண்மையே என் நம்பி அந்த பெரியார் மீது கோபமுற்றார். உடனே அரசர் தம் கைப்பட ஓர் அஞ்சல் எழுதி முத்திரையிட்டு தலையாரிடம் கொண்டு போய்ச் சேர்க்கும்படி அப்பெரியாரிடம் கொடுத்தார். அந்த அஞ்சலை பெற்றுக் கொண்டு தமக்கு எதோ வெகுமதி கிடைக்கப் போவதாக எண்ணியவாறு வெளியில் சென்று கொண்டிருந்தார். இதைப்  பொறாமைக்காரன் பெரியாருக்கு வெகுமதி கிடைத்து விட்டதாக எண்ணிப் பொறாமைப்பட்டு ஆத்திரமடைந்தான். அப்பெரியாரை அணுகி,  '' பெரியாரே! வாரம்தோறும் தங்களுக்கு வெகுமதி கிடைக்கும்போது இதை எனக்குத் தரக்  கூடாதா? '' என்று கேட்டான். அவன் வேண்டுதலுக்கிணங்கி அரசர் கொடுத்த கடிதத்தை அவனிடம் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்டு அந்தப் பொறாமைக்காரன் ஓடோடிச் சென்று தலையாரியிடம் கொடுத்தான்.

''இந்த கடிதத்தை கோட்னு வருபவரின் தலையைத் துண்டித்து, மூக்கை அறுத்து எனக்கு அனுப்புக '' என்று எழுதப்பட்டிருந்தது. உடனே அந்த  பொறாமைக்காரனைக் கைது செய்து விஷயத்தை  விளக்கினார்கள். இச்செய்தியைக் கேட்ட அவன் கதறினான்.  ''இந்த தபாலை என்னிடம் அரசர் தரவில்லை. இதை வேறு ஒருவர் என்னிடம் தந்து என்னை ஏமாற்றிச் சென்று விட்டார். நான் அவரைப் பிடித்துத் தருகிறேன் '' என்று கெஞ்சினான்,, அழுதான்,, கதறினான்,, ஒன்றும் பலிக்கவில்லை,, தலை துண்டிக்கப்பட்டது.

வழக்கம்போல் அப்பெரியார் அரசவைக்குச் சென்றார்கள். அப்பெரியாரின் வருகை அரசருக்கு ஆச்சிரியத்தை கொடுத்தது.  எனவே, பெரியவரே! சென்ற வாரம் தங்களிடம் நான் தந்த கடிதத்தை என்ன செய்தீர்கள்? '' என்று வினவினார். நடந்த விஷயத்தை அரசரிடம் அப்பெரியார் கூறினார்கள்.  இதைக் கேட்ட அரசர் அந்த பொறாமைக்காரன் சொன்ன விஷயங்களை விளக்கினார். '' நன்மை செய்தவனுக்கு தீமை செய்தவனுக்கும் நல்லனவே செய்யுங்கள் என்று கூறியதை நான் மறந்து விட்டேன், தங்களின் போதனைகள் முற்றிலும் உண்மையே '' என்று கூறினார் அரசர்.

தீயோரின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரைத் தவிர மற்றெவரையும் சூழ்ந்து கொள்ளாது.  அல்குர் ஆன் .. -53.43]

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''உங்களை நீங்களே பொறாமையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில்  நெருப்பு விறகைச்  சாம்பலாக்கி விடுவதை போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடுகின்றது.''
நூல் .. அபூதாவூத்] 

4 கருத்துகள்:

Welcome to your comment!