செவ்வாய், ஆகஸ்ட் 16, 2016

பாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள்

பாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் 
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

நமக்கு ஏற்படுகின்ற சிக்கல்கள், தொல்லைகள், நெருக்கடிகள் அனைத்திற்கும் அடிப்படைக்  காரணங்கள் நம் கைகளால் நாம் தேடிக்  கொள்ளும் பாவங்களேயாகும். நம்முடைய இன்னல்கள் அகல வேண்டுமெனில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருதல் [தௌபா செய்தல்] அவசியம் ஆகும்.

''நான் பாவச்  செயல்களை இனியும் செய்ய மாட்டேன்'' என்பதாக அழுது  கண்ணீர் வடித்து அல்லாஹ்விடம் மன்றாடி பாவ மன்னிப்புக் கோரினால், அவன் மன்னிக்கப் போதுமானவன். நம்முடைய இத்தாழச்சியான, பணிவான வேண்டுதலால் இறைவனின் சினம் நீங்குகிறது. அவனின் அன்பு நம் மீது பொழிகின்றது.


அல்லாஹ் தன்  திருமறையில் கூறுகின்றான்..
''நிச்சயமாக உங்களில் எவராயினும் அறியாமையின் விளைவாக தீமை செய்து விட்டு, பின்னர் அதற்காக பச்சாதாப்பட்டு [அதிலிருந்து விலகி தன்  நடத்தையைச்] சீர்திருத்திக் கொண்டால் [அக்குற்றத்தை இறைவன் மன்னித்து விடுவான்] நிச்சயமாக, அவன்  மன்னிப்போனும், கிருபையுடையோனுமாய் இருக்கின்றான்.
[6..54]

எனவே ஏழ்மையில் வாடுவோர் தௌபாச் செய்வாராக! அவர்களின் வறுமை நீங்கும்! தௌபா என்பது அல்லாஹ் நமக்குக்  கற்றுத் தந்த மாபெரும் நற்செயல்களில் ஒன்றாகும். மேலும் இது அல்லாஹ்வின் அருட்கொடையும், நம் இன்னல்களைத் துடைக்கும் வழிமுறையும் ஆகும். இத்துணைச்  சிறப்புகளுக்குரிய தௌபாவை எவ்வாறு செய்வது? அதன் வழிமுறைகள் எவை என்பன பற்றியும் ஒருவன் அறிந்திருத்தல் அவசியம் ஆகும்.

அண்ணல் நபி [ஸல்] அவர்கள்,  ''வாயால் மட்டும் பாவமன்னிப்புக் கோரி செயலால் பாவம் செய்துக்  கொண்டிருப்பவர் அல்லாஹ்வைப் பரிகாசம் செய்கிறார்.'' என்று கூறினார்கள்.

எனவே பாவ மன்னிப்புக் கோருவோர்  இனி மீண்டும் பாவத்தின் பால் செல்லாத அளவிற்கு உறுதி பூண்டு தௌபாச் செய்தல் வேண்டும். மீண்டும் அப்பாவத்தைச் செய்யாமல் இருத்தல் வேண்டும். அவ்வாறு அவர் உறுதி மேற்கொள்வாராயின் அவரின் தௌபாவை அல்லாஹ் அங்கீகரிப்பதுடன் அவரின் வறுமையையும் இன்னல்களையும் போக்குவான்.

மாறாக தௌபா செய்து கொண்டே தொடர்ந்து பாவங்களையும் செய்து கொண்டிருந்தாள் மனிதரின் தௌபாவை அல்லாஹ் எவ்வாறு அங்கீகரிப்பான்? அவரின் வறுமை எவ்வாறு விலகும்? அவரின் துன்பங்கள் நீங்குவது எவ்வாறு?

ஒருநாள் மஸ்ஜிதுந்  நபவியில் காட்டரபி ஒருவர்  வந்து,  ''யா அல்லாஹ்! நான் உன்னிடம் பாவ மன்னிப்புக் கோருகின்றேன். மேலும் உன்னிடமே மீளுகின்றேன்'' என்று கூறி, ''அல்லாஹு அக்பர் என்று சப்தமிட்டழுதார். அப்பொழுது ஹஜ்ரத் அலீ [ரலி] அவர்கள் அம்மனிதரை  நோக்கி, ''நாவால் மட்டும் பாவ மன்னிப்புக் கோராதீர்! அது பொய்யர்களின் தௌபா ஆகும். உம்முடைய தௌபா விற்கு மற்றொரு தௌபாவும் தேவைப்படுகின்றது'' என்று கூறினார்கள்.

அப்பொழுது அம்மனிதர் அதுபற்றித் தமக்கு விளக்குமாறு வேண்ட, அதற்கு அலீ[ ரலி] அவர்கள், ''தௌபா என்று ஆறு செயல்களுக்குச் சொல்லப்படும்.
1. நடந்து விட்ட பாவத் செயலை எண்ணி அழுது  வருந்துதல்.2. செய்யாமல் விடுபட்டக் கடமைகளை நிறைவேற்றுதல். 3. ஹராமான வழியில் வந்தப்  பொருளைத் திருப்பிக் கொடுத்து விடுதல்.4. பாவம் செய்துப்  பழகி விட்ட மனதை நேர்வழியில் பழக்குதல் .5. பாவத்தின் இன்பத்தை அது [உள்ளம்] நுகர்ந்து போன்று அதன் கசப்பையும் நுகரச்  செய்தல்.6. பாவத்தின் பொழுது சிரித்த சிரிப்பு ஒவ்வொன்றிக்காகவும் அழுதல் '' என்று கூறினார்கள்.

எனவே  பாவமன்னிப்புக் கோருவோர்   இந்த ஆறு வழி  முறைகளையும் கடைப்பிடித்து,  மனம் ஒன்றிய நிலையில் தௌபாச் செய்தல் வேண்டும்.  இவ்வாறு  செய்வதால் மனிதனின் இன்னல்கள் நீங்கி அவன்  மீது  இறைவனின் பேரருள் பொழியும்!

பாவங்கள் மிகைத்து விட்ட காரணத்தினால் , நரகத்தின் வெளிப்பாடு தான் இந்த கடுமையான வெப்பம் ! தாங்கமுடியாத வெயிலின் கோரம்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!