திங்கள், ஆகஸ்ட் 01, 2016

நேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்]

நேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்]
அல்லாஹ்வின் திருப்பெயரால் .................
இன்று மக்களிடம் சுத்தமாகத் துடைத்தெடுக்கப் பட்டது நேர்மையாக. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டியவர்களிடம் நீதியைப் பார்க்க முடியவில்லை. அநீதியும் அக்கிரமும் அவர்களின் உள்ளத்தில் நிரந்தரமாக குடிகொண்டு விட்டன. பணமும் பதவியுமே  அவர்களின் குறிக்கோளாக மாறி விட்டது. இப்படிப்பட்ட தலைவர்களைத்தாம் நாம் பார்க்கிறோம். இன்று இந்தியாவில் அநீதிகளும் , அக்கிரமங்களும் , அநியாயங்களும்  தலை விரித்து ஆடுகிறது. பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும்  கதைதான் ஆகும்! 

1400 ஆண்டுகளுக்கு முன்னால்  வாழ்ந்த அந்த உத்தமர் முஹம்மது [ஸல்] அவர்கள் நேர்மையின் உறைவிடமாகத் திகழ்ந்துள்ளார்கள் . நீதிக்கு மறுபெயராக அவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.


எதிரிகள் கூட பிரச்சனை ஏற்படும்போது முஹம்மது [ஸல்] அவர்களை நாடி வந்துள்ளார்கள். முஹம்மது [ஸல்] அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத யூதர்கள் தங்கள் பிரச்னையை தீர்க்க முஹம்மது [ஸல்] அவர்களை நாடியுள்ளார்.
நூல் புகாரீ]

இவர்கள் மட்டுமின்றி இன்னும் பல கூட்டத்தினர், 'இவர் தங்கள் கொள்கைக்கு எதிரானவர்' என்று தெரிந்தும்கூட அண்ணல் நபி [ஸல்] அவர்களிடம் சென்று தீர்ப்பு கண்டுள்ளார்கள். இவையனைத்தும் அம்மக்கள் ஐயம் கொள்ளவில்லை என்பதையே காட்டுகின்றன.

அம்மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அண்ணல் நபி [ஸல்] அவர்களும் நடந்து காட்டியுள்ளார்கள். உயர்ந்த குலத்துப் பெண் ஒருத்தி திருடி விட்டாள் . திருடினால் கையை வெட்டுதல் தண்டனையாகும். எனவே இத்தண்டனையை ரத்துச் செய்ய அவ்வுயர் குலத்திலுள்ள குடும்பத்தினர் முயற்சி செய்தனர். அதன்படி அண்ணல் நபி[ஸல்] அவர்களுக்கு விருப்பமான தோழரான உஸாமா பின் ஜைத் என்பவரை அணுகித் தண்டனையைக் குறைக்கும்படி அண்ணல் நபி [ஸல்]  அவர்களிடம் பரிந்துரை செய்யச் சொன்னார்கள்.

அதன்படி உஸாமா பின் ஜைத், அண்ணல் நபி [ஸல்] அவர்களிடம் வந்து, தண்டனையைக் குறைக்கும்படி பரிந்துரை செய்யும்போது கடும் சினமுற்ற அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள்.

அல்லாஹ்வுடைய தண்டனையில் நீ பரிந்துரை செய்ய வந்துவிட்டாயா? என்று கேட்டுவிட்டு, மக்களுக்கு இதுபற்றி ஓர் உபதேசம் செய்தார்கள்.
இதற்கு முன் வாழ்ந்த சமுதாயம் அழிக்கப்பட்டதன்  காரணம்.. அவர்களில் வசதி படைத்தவர்கள் திருடினால் விட்டு விடுவார்கள்,, பலவீனர்கள் திருடினால் தண்டனை கொடுப்பார்கள்..
''அல்லாஹ்வின் மீது ஆணையாக ! முஹம்மதுடைய மகள்  பாத்திமா திருடியிருந்தாலும் அவளின் கையையும் நான் வெட்டியிருப்பேன்'' என்றார்கள்.
நூற்கள்.. புகாரீ, முஸ்லிம் ]

நீதி வழங்கும் பண்புக்கு எவ்வளவு அழகான எடுத்துக்காட்டு என்று பாருங்கள்! தம் மகளாக இருந்தாலும் நீதிக்கு முன் அனைவரும் சமம் என்பதை எவ்வளவு தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இன்றைய சமுதாயத் தலைவர்களிடம் இப்படிப்பட்ட நேர்மையை நாம் காண முடியுமா???

இன்னும் முஹம்மது [ஸல்] அவர்களுக்கு இறக்கி அருளப்பட்ட திருக்குர் ஆன் கட்டளையையும் படியுங்கள். முஹம்மது [ஸல்] அவர்கள் எவ்வளவு நேர்மையாக நடந்திருப்பார்கள் என்பதை அது  எடுத்துக் காட்டும்.

''நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.
[அல்குர் ஆன் 49..9]

இன்று நாம் அநீதியாளர்களை தான் பார்க்கிறோம். நீதிமன்றங்களை நாடி சென்றால் அங்கே நமக்கு  அநீதிதான் கிடைக்கிறது. காவல் நிலையத்துக்கு சென்றால் அங்கும் நமக்கு  அநியாயங்கள் தான் கிடைக்கிறது! நீதியையும், நியாயத்தையும் இப்பொழுது பார்க்க முடியவில்லை!  இந்தியாவில் இஸ்லாம் ஆட்சி மலர்ந்தால் ஒழிய!

'' நம்பிக்கை கொண்டவர்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக நீங்கள் அல்லாஹ்வுக்கு உறுதியான சாட்சியாக இருங்கள்.  எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களை தூண்ட வேண்டாம்!  நீதி செய்யுங்கள்! இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமாகும் . அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை [எல்லாம்நன்கு ] அறிந்தவனாக இருக்கின்றான்.
அல்குர் ஆன்.. 5..8]

இன்ஷாஅல்லாஹ் இனி நாம் அனைவரும் ஒவ்வொரு முஸ்லீம் அல்லாத மக்கள்களை அழைத்து இஸ்லாத்தைப் பற்றி எடுத்துக் கூறுவோம். ஈமான் உறுதியுடன், அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்து நாம் அழைப்பு பணி  செய்வோம்! அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவியும் அருளும் புரிவானாக!
அல்லாஹ் மிக்க அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!