திங்கள், ஆகஸ்ட் 15, 2016

இறை நம்பிக்கை வேண்டும்!

இறை நம்பிக்கை வேண்டும்!
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
''இய்யாக்க நஃ புது வ இய்யாக்க நஸ்தஈன் ''
[சூரா ஃ பாத்திஹா ]
ஒவ்வொரு தொழுகையிலும் நாம் ஒதக் கூடிய சூரத்துல் ஃ பாத்திஹா . இதை ஓதாமல் தொழுகை இல்லை!

''உன்னையே வணங்குகிறேன் , உன்னிடமே உதவி கோருகிறேன்'' என்பதாகும்.
இறைவனையே நாம் வணங்குவதாகவும், இறைவனிடமே உதவி கேட்பதாகவும் கூறும் நாம் வேறு எவரையும் வணங்கவில்லை,, வேறு எவரிடமும் உதவி கேட்கவில்லை,, நம் தேவைகளுக்காக கையேந்தவில்லை என்பதாக மனதால்  உறுதி பூணுகிறோம்.


ஆனால்,  ...???   நம்முடைய இக் கூற்றும் மனோ உறுதியும் உண்மைதானா? என்று சிந்தித்துப் பார்த்தால், அத்துனையும்  பொய்! பித்தலாட்டப் பேச்சு! நயவஞ்சக எண்ணம்! உண்மைதான்! நாம் கேட்கிறோம்! அல்லாஹ்வை வணங்கக்  கூடிய எத்தனைப் பேருக்கு இறை நம்பிக்கை உள்ளது?
வணங்குவது அல்லாஹ்வை! கையேந்தி உதவி கேட்பது நாகூர் வலியுல்லாஹ்விடம்! ஏர்வாடி வலியுல்லாஹ்விடம்!
தீராத நோய்  வந்து விட்டால் உடனே மனத்  திரையில்  நிழலாடுவன ஊர் உலகில் உள்ள அனைத்து தர்காக்களும்! இது நயவஞ்சகமா ? அல்லவா? யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்? அல்லாஹ்வையா ? அது நடக்குமா?

இத்தகுக் கயவர்களைத்தான் அல்லாஹ் திண்டாட விட்டு விடுகிறான்! இவர்களின் துஆவை அல்லாஹ் அங்கீகரிப்பான? இவர்களின் வறுமையைப் போக்குவானா? பிணிகளை நீக்குவானா? சிந்தித்துப் பாருங்கள்!

இறை நம்பிக்கை என்பது ஒரு கருவூலம் ஆகும். இது ஒருவனின் உள்ளத்தில் ஆழமாக இருக்கும் வரை வறுமையோ அல்லது பிணியோ அவனை வாட்டாது. அதாவது இறை நம்பிக்கையாளின் துஆவை அல்லாஹ் அங்கீகரித்துக் கொள்வான். அவனை எதிர் நோக்கி வரும் பிணிகள், நெருக்கடிகள், தொல்லை- தொந்தரவுகள் அனைத்தும் அவனின் துஆக்கள் மூலம் நீங்கிப் போகும்.

எனவே கலப்படமற்ற வகையில் ஒருவன், இறைவனின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கலப்படமற்ற இறை நம்பிக்கை என்றால் என்ன?
இறைவனே அனைத்தையும் நிகழ்த்துகின்றவன்,, நோயைத் தருகின்றவன்,, நோயைக் களைகின்றவன் ,, இன்பமும் துன்பமும் அவனாலே,, வறுமை ஏற்படுத்துவதும், வள வாழ்வு உண்டாவதும் அவனாலே'' என்று உய்த்துணர்ந்து உறுதி பூணுவது.

இறைவனல்லாது வேறெவராலும் நமக்கு எந்த நன்மையையும் அல்லது தீமையையும் உண்டாக்க முடியாது. குறிப்பாக தர்காக்களில் அடங்கியுள்ள அவ்லியாக்களால் நமக்கு எந்த நன்மையும்  விளையாது அல்லது அவர்களால் எந்தத்  தீங்கையும் நமக்கு விளைவிக்க முடியாது என்பதனைத் தெளிவு கொள்வது.

இறைநேசர்கள் மீது அன்பு கொள்வதும், அவர்களை மதிப்பதும் நம் மீது கடமைதான்! அவர்கள் சென்ற பாதைகளை நபி [ஸல்] அவர்களின் வழிமுறைகளுக்கு மாறுபடாமல் இருப்பின்]  நாம் பின்பற்றிச் செல்வது வர்கள் மீது நாம் கொள்ளும் அன்பிற்கு அடையாளமாகும். அதை விட்டு விட்டு எதற்கெடுத்தாலும் அவர்களின் கப்ரைச் சுற்றிச் சுற்றி வருவதும், அவர்களுக்கு நேர்ச்சை செய்து கொள்வதும் கூடாது. இவை அனைத்தும் அல்லாஹ்வை மறக்கடிக்கும் செயல்களாகும்.  சில பெண்கள் செய்யும் அனாச்சாரங்களை பற்றி சொல்லி மாளாது! அவர்களின் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மாற்றமான செயல்கள் ஆகும்.

கப்ருகளுக்கு செல்ல அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நமக்கு அனுமதி வழங்கியிருப்பது  மரணம்- மறுமை  இவ்விரண்டையும்  சிந்தித்துப் பார்த்து தெளிவு பெறுவதற்காகத் தான். கப்ராளிகளிடம் சென்று நம் தேவைகளைக் கேட்பதற்காக அல்ல. இப்படிப்பட்ட தீய சிந்தனைகளையும், செயல் முறைகளையும் அறவே நம் உள்ளத்தை விட்டு அகற்றிவிட வேண்டும், நாம் உளத்தூய்மை பெற வேண்டும். தூய்மையான ஏகத்துவமே  உண்மையான இறை நம்பிக்கை ஆகும்.

அன்றி, நபிமார்களையோ, வலிமார்களையோ அல்லது இறந்துவிட்ட முன்னோர்களையோ அல்லாஹ்வைப் போன்று எண்ணி உதவி தேடுவோர் இம்மையிலும் மறுமையிலும் நாசமாகிப்  போவார் என்பது திண்ணம்!

அல்லாஹ்வை மட்டும்  நம்புங்கள்! அவனிடமே உதவி தேடுங்கள்! அவன் தான் எல்லாவற்றையும் படைத்த நம் இரட்சகன்!  அல்லாஹ்வை இன்றி எதுவும் நடக்காது! அவன் நாடாமல் நமக்கு எதுவும் கிடைக்காது! எந்த தீங்கும் நம்மை வந்து சேராது! அன்பார்ந்த இஸ்லாமிய மக்கள்களே! தயவு செய்து இறைநேசர்கள் மீது கதைக்  கட்டாதீர்கள் ! அவர்கள் எங்கள் கனவில் வந்து  'இப்படி இப்படி கூறினார்கள் '' இன்னாருக்கு இன்னாருக்கு இதை கொடுக்க சொன்னார்கள் என்று கற்பனை கூறாதீர்கள்!  ஸஹாபாக்கள் யார்? அவர்கள் அல்லாஹ்வின் இறைநேசர்கள் அல்லவா! அவர்கள் பெயரால் ஏதாவது சடங்கு, சம்பிரதாயம் , கூற்றுக்கள், விழாக்கள் உண்டா? சிந்தித்துப்  பாருங்கள் !
நீங்கள் சீமானாக இருந்தாலும் ஈமான் இல்லாமல் மரணித்தால் நரகம் தான் கிட்டும் என்பது திண்ணம்!
அல்லாஹ் நம் அனைவரையும்  ஈமானுடன் மரணிக்கும் கூட்டத்தில் சேர்ப்பானாக! ஈமானுடைய வாழ்வை வாழச்  செய்வானாக! நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் வழிமுறையை பின்பற்றும் கூட்டத்தில் ஆக்குவானாக!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!