சனி, ஆகஸ்ட் 06, 2016

மாமனிதர் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் பொறுமை!

மாமனிதர் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் பொறுமை!
''மக்களிடம் சர்வ சாதாரணமாக முஹம்மது பழகுகிறார் , யாரும் அவரைநெருங்கலாம்; எப்படி வேண்டுமானாலும் கோரிக்கையை முன் வைக்கலாம்; நீண்ட நாள் பழகிய நண்பனுடன் எடுத்துக் கொள்ளும் உரிமையை எடுத்துக் கொள்ளலாம்; எப்படி நடந்தாலும் அவர் கோபம் கொள்ள மாட்டார் தேவைக்கேற்ப வாரி வழங்குவார் என்றெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததால் தான் அறிமுகமில்லாத கிராமவாசிக்கு இப்படி நடக்க முடிந்தது. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசல் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாசன் மையப்பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர்களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பிடரி சிவந்து விட்டது. முஹம்மதே எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களைத் தருவிராக! உமது செல்வத்திருந்தோ, உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ நீர் தரப்போவதில்லை என்று அந்த மனிதர் கூறினார். இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களைத் தர மாட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் விட மாட்டேன் என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறை நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது மூன்று முறையும் அவர் விட மாட்டேன் என்றார். அந்தக் கிராம வாசியின் கூற்றை நாங்கள் செவியுற்ற போது அவரை நோக்கி விரைந்தோம். நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். பின்னர் கூட்டத்திருந்த ஒருவரை நோக்கி இவரது ஒரு ஒட்டகத்தில் கோதுமையையும், இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவிராக என்றார்கள். பின்னர் மக்களை நோக்கி நீங்கள் புறப்படுங்கள் என்றார்கள். இதை நபிகள் நாயகத்தின் தோழர் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்.
நூற்கள்.. நஸாயீ , அபூதாவூத் ]


 நபிகள் நாயகத்தின் ஆட்சி எந்த அளவுக்குச்  செழிப்பாக இருந்தது என்பதற்குச் சான்றாக இந்த நிகழ்ச்சியை முன்னரும் குறிப்பிட்டுள்ளோம். அவர்களின் பெருந்தன்மைக்கும், தன்னடக்கத் திற்கும் இதில் சான்று உள்ளதால் மீண்டும் இதைக் குறிப்பிடுகிறோம். பள்ளிவாசல் நபிகள் நாயகத்தின் உற்ற தோழர்கள் இருக்கும் போது யாரெனத் தெரியாத ஒருவர் சட்டையைப் பிடித்து இழுக்கிறார். பிடரி சிவந்து போகும் அளவுக்கு இழுத்தும் நபிகள் நாயகம் (ஸல்) கோபப்படாமல் இருக்கிறார்கள்.
அவருக்கு இரண்டு ஒட்டகங் கள் உடைமையாக இருந்தும் அவற்றில் ஏற்றிச் செல்லும் அளவுக்குப் பொருட்களைக் கேட்டும் அதையும் சகித்துக் கொண்டார்கள். பிடித்த சட்டையை விடாமலே தனது கோரிக்கையைக் கேட்கிறார். சட்டையை விடும்படி நபிகள் நாயகம் கேட்ட பிறகும் சட்டையை விடாமல் கோரிக்கையில் பிடிவாதமாக இருக்கிறார். இப்படி ஒரு நிலையை எவ்வித அதிகாரமும் இல்லாத நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட சகித்துக் கொள்ள இயலுமா? இவ்வளவு நடந்த பின்பும் உமது அப்பன் சொத்தைக் கேட்கவில்லை; பொது நிதியைத் தான் கேட்கிறேன் என அவர் கூறிய பிறகும் அவரது கோரிக்கையை ஏற்று இரு ஒட்டகங்கள் நிறைய வாரி வழங்க நமது மனம் இடம் தருமா? இந்த மாமனிதரின் உள்ளம் இடம் தருகிறது. தாம் ஒரு வல்லரசின் அதிபதி என்ற எண்ணம் கூட இல்லாமல் நடந்து கொண்டார்கள்.

இன்று நமக்குள் நிறைய கருத்து மோதல் விவாதம் என்ற போக்கிலே நாம் சென்றுக் கொண்டிருக்கிறோம். நம் வாழ்வில் இன்னும் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாழ்க்கை நெறிகள் [life style ] வரவில்லை. அப்படி கொஞ்சமாக இருந்தாலும் நாம் இப்படி ஒருவொருக்கொருவர் மன கசப்புடனும், வெறுப்புடனும் . சண்டையிட்டுக் கொண்டு வாழ மாட்டோம்! யாராவது நம்மை ஒருவர் பேசிவிட்டால் ஏசிவிட்டால் அவரின் மீது நாம் வசைமொழிகிறோம்  !  சண்டையிட்டுக் கொண்டு வெறுத்து வாழ்கிறோம். இயக்கம் சண்டை , ஜமாத்து சண்டை , இப்படி நாம் எல்லோரும் எந்த ஒரு சகிப்பு தன்மை இல்லாமலும், பொறுமை இல்லாமலும் , மன்னிக்கும் தன்மை இல்லாமலும் வாழ்ந்து வருகிறோம்!  நபி வழி நபி வழி என்று வாய் கிழிய பேசிக் கூடியவர்கள் கூட வெறும் பேச்சில் மட்டும் தான் நபி வழியை காண முடிகிறது! நிச்சயமாக நாம் அனைவரும் உண்மையாக அண்ணல் நபியை நம் உயிரைவிட நேசிப்பதாக இருந்தால் , நிச்சயமாக நாம் யாரையும் [முஸ்லீம்  சகோதரர்கள்] வெறுக்க மாட்டோம். ஒற்றுமையாக வாழ்வோம்! கருத்து வேறுபாடுகளை வைத்துக் கொண்டு பிரிவினை செய்வது எந்த விதத்தில் நியாயம் ? ஒற்றுமையாக இருந்துக் கொண்டு நமக்குள் அழகான முறையில் கருத்து மாற்றம் செய்ய இயலாதா? சிந்திக்க சில வரிகள்......மனம் வைத்தால் மார்க்கம் உண்டு!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!