சனி, செப்டம்பர் 10, 2016

துஆ கேட்கும் முறை.

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

[விசுவாசிகளே!] நீங்கள் உங்கள் இறைவனிடமே மிகப் பணிவாகவும் அந்தரங்கமாகவும் [வேண்டியதைக் கோரி] பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் [பிரார்த்தனை செய்யாததின் மூலம்] வரம்பு மீறியவர்களை  விரும்புவதில்லை''.
அல்குர்ஆன் .. 7..55]

மேலும், வல்ல அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்..  ''[நபியே!] உம்முடைய மனத்திற்குள்ளாகவே மிக்க தாழ்மையுடன், பயபக்தியோடு உரத்தக் குரலின்றி [மெது மெதுவாக] காலையிலும் மாலையிலும் உமது இறைவனை [பிரார்த்தித்து] துதி செய்து வருவீராக! அவனை மறந்தவர்களில் நீர் ஆகிவிட வேண்டாம்.
அல்குர்ஆன்.. 7..205]

தளர்ரு  அன் -வகுஃயா - தாழ்மையாகவும் மெதுவான குரலிலும்'' எனபது இவற்றின் பொருளாகும். அல்லாஹ்விடம் அடியான் இறைஞ்சிடும் பொழுது அவன் தனது பணிவையும், இயலாமையையும் வெளிப்படுத்தி உள்ளச்சத்துடனும் பயபக்த்தியுடனும் துஆ இறைஞ்ச வேண்டும் என்பதே மேற்காணும் சொற்களுக்குரிய விளக்கமாகும்.


இவ்வாறின்றி, 'ஆ, ஊ , என்று அலறுவதோ , உரத்தக் குரலால் துஆ இறைஞ்சுவதோ கூடாது. ஏனென்றால்,

''நிச்சயமாக மனிதனை நாம் தான் படைத்தோம். அவன் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களையும் நாம் நன்கறிவோம், மேலும் நாம் [அவனுடைய] பிடரியிலுள்ள உயிர் நரம்பை விட அவனுக்கு மிக்க சமீபமாகவே இருக்கிறோம்.
அல்குர்ஆன்.. 50..16]

என அல்லாஹ் கூறுகின்றான். மனிதர்களின் மனத்துள்  மறைந்திருக்கும் எண்ண  ஓட்டங்களையே அறிந்துள்ளவனான அல்லாஹ்வை நாம் அழைத்திடும்  பொழுது     உரத்த குரலில் அழைப்பது கேலி செய்வதாகும்.

அவனே நம் பிடரி நரம்பினும் மிக அருகிலிருக்கிறான், அத்தகையவனை மிகத்  தொலைவில் இருப்பவன் போல் எண்ணி உரத்தக் குரலில் அழைப்பது முறையல்லவே!

ஒருமுறை நபியின் தோழர்கள் மார்க்கப் போரின் பொருட்டுச் சென்ற பொழுது, ஒரு பள்ளத்தாக்கை அடைந்து, அங்கு உரத்தக் குரல் எழுப்பி தக்பீர் கூறி, ''லாயிலாஹ இல்லல்லாஹ்'  என்று திக்ரு செய்தனர். இதனைச் செவியுற்ற மாநபி [ஸல்] அவர்கள் தம் தோழர்களை நோக்கி,
''உங்கள் மனத்திற்குள்ளாகவே கூறுங்கள்,, நீங்கள் செவிடனையோ, உங்களுக்கு [புறம்பில்] மறைவாக உள்ளவனிடமோ துஆச் செய்யவில்லை,, செவியேற்பவனாகவும், சமீபத்திலுள்ளவனாகவும், உங்களுடனிருப்பவனாகவு முள்ளவனையே  அழைக்கிறீர்கள்.'' என்று கூறினார்கள்.

ஆக, துஆவில் நம்முடைய பணிவும், பயபக்தியுமே வெளியாக வேண்டுமேயன்றி ரியா என்னும் முகஸ்துதி வெளியாகிட இடம் தரக்  கூடாது.

மேலும், வல்லோன் அல்லாஹ்,  '' வத்ஊஹூ கவ்ஃபன் - வதமஅன் - மேலும் அஞ்சியும், ஆதரவு வைத்தும் அவனிடம் துஆச் செய்யுங்கள்.'' என்று கூறுகின்றான்.

ஆக, துஆவிற்கு அடிப்படை அச்சமும் ஆதரவுமாகும். நிச்சயமாக அல்லாஹ் நம்முடைய துஆவை ஒப்புக் கொள்வான் என்று ஆதரவு வைக்க வேண்டும். நம்பிக்கை இழந்து விடக்  கூடாது.

இன்னொன்றையும் நாம் நினைவில் வைத்துக் கொள்வது அவசியமாகும். அதாவது நாம் கேட்கின்ற துஆவை அல்லாஹ் உடனடியாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அதனால் நமக்கு நன்மைகள் கிடைப்பதுடன், நம்முடைய பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன என்பதை மறந்து விடக்  கூடாது.

''துஆ '' ஒப்புக் கொள்ளப்படும் என்ற உறுதியுள்ளவர்களாக இருக்கும் நிலையில் நீங்கள் அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள். '' என்று நபி [ஸல்[ அவர்கள் கூறியுள்ளார்கள்.

எதை, எப்பொழுது, எவருக்கு , எந்நிலையில் , எம்முறையில் , எவர் மூலம் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் நாடுகின்றானோ அதை, அப்பொழுது இன்னார் மூலம் அவன் நாடுகின்ற பொழுது கொடுப்பான் என்பதை அடியார்கள் உணரவேண்டும்.

இறுதியாக, பின்னும் நபி [ஸல்] அவர்கள் ஒரு மனைதனைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்,, ''அம்மனிதன் நீண்ட பயணம் செய்கிறான், புழுதியும் அழுக்கும் படிந்த நிலையில்,  ''இறைவனே! இறைவனே! என அவன் வானின் பால் கையை உயர்த்திக் கெஞ்சுகிறான்.
''ஆனால் அவனது உணவு [ஹராம்] விலக்கப்பட்டதாகும் ,, அவன் குடிக்கும் நீர் ஹராம் [தடுக்கப்பட்டது] ஆகும்,, அவனது உடையும் தடுக்கப்பட்டதாகும்  தடுக்கப்பட்டவற்றால் வளர்க்கப் பெட்ரா அவனுக்கு அவனுடைய இறைஞ்சுதல் எங்ககனம்  ஏற்கப்படும்?''
அறிவிப்பவர்.. அபூஹுரைரா [ரலி] நூல்.. முஸ்லிம் ]

அவர் எவ்வளவு பெரிய ஆபிதாக இருந்தாலும் மேற்கூறியவற்றைத் தவிர்த்து கொள்ளாதவரை அவரின் துஆ அல்லாஹ்வால் ஒப்புக் கொள்ளப்படுவதில்லை.
எனவே, நம்முடைய உணவு, உடை, குடித்து யாவும், ஹலாலானதாக இருந்து , அல்லாஹ்வின் அன்பிற்கும் நாம் உரியவர்களாக ஆகி, அதன் பின்னர் நாம் கேட்கும் துஆ ஏற்றுக் கொள்ளப்பட வல்லோன் அல்லாஹ் நம் மீது பேரருள் புரிவானாக! [ஆமீன்]
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே! தயவு செய்து முஸ்லிமின் முன்மாதிரி படிக்க தவறாதீர்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான். www.muslim-life-model.blogspot.com
இதான் தளத்தின் முகவரி............     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!