விதியின் மீது நம்பிக்கை விதியின் மீது நம்பிக்கை ....... அல்லாஹ்வின் திருப்பெயரால்..........
நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''உங்களில் ஒவ்வொருவரின் சொர்க்கமும் நரகமும் முன்னரே எழுதப்பட்டுவிட்டன.'' மக்கள் வினவினார்கள்.. ''அல்லாஹ்வின் தூதரே! அப்படியென்றால் நாங்கள் எங்கள் மீது எழுதப்பட்ட விதியை நம்பிக்கைக்கொண்டு செயல்படுவதை விட்டுவிடலாமல்லவா?''
அண்ணலார் .. ''இல்லை ! செயல்படுங்கள்! ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எதற்காக படைக்கப்பட்டுள்ளானோ அதற்கான தவ்ஃபீக் [இறைவன் அருளும் பேரு ] அளிக்கப்படுகிறது. எவன் பாக்கியவானோ அவனுக்குச் சுவனத்துக்குரிய செயல்கள் புரியும் வகையில் இறையுதவி அளிக்கப்படுகிறது. மேலும், எவன் துர்பாக்கியவானோ [நரகவாசியோ] அவனுக்கு நரகத்துக்குரிய செயல்கள் புரியும் வகையில் பேரு அளிக்கப்படுகிறது.
இதன் பின் அண்ணலார் திருக்குர்ஆனிலுள்ள 'அல்லைல் ' அத்தியாயத்தின் பின்வரும் இரு வசனங்களை ஓதினார்கள்.. எவனொருவன் பொருளைச் செலவு செய்து இறையச்சத்தின் பாதையை மேற்கொண்டு, இன்னும் நன்மையானதை உண்மைப்படுத்தினானோ [அதாவது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டானோ] அவனுக்கு நாம் நல்ல வாழ்க்கைக்குரிய [சுவனத்துக்குரிய] பாதையில் செல்வதற்கு பேரு அளிப்போம் . எவன் தன் பொருளை வழங்குவதில் கஞ்சத்தனம் புரிந்து, இறைவனைக் குறித்து அலட்சியமாக வாழ்ந்து நல்லதொரு வாழ்வைப் பொய்யென்று கூறினானோ அவனுக்கு நாம் துன்பமிகு வாழ்க்கைக்குரிய [நரகத்துக்குரிய] பாதையில் செல்வதற்கு பேரு அளிப்போம்.
நூல்கள்... புகாரி, முஸ்லிம் ]
விளக்கம*****
மனிதன் என்னென்ன செயல்களின் காரணத்தால் நரகம் செல்வான்,, மேலும் என்னென்ன செயல்களின் காரணத்தால் சுவனம் செல்வான் என்பது அல்லாஹ்விடம் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இறைவன் இந்த விதி நிர்ணயத்தை மிகவும் விளக்கமாக திருக்குர்ஆனில் எடுத்துரைத்துள்ளான் . மேலும் அண்ணலாரும் இவ்வுண்மையைத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டார்கள். இனி நரகத்தின் பாதையில் நடைபோடுவதா, சுவனத்தின் பாதையில் நடைபோடுவதா என்பதை முடிவு செய்வது மனிதனின் வேலையாகும். இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவனது பொறுப்பேயாகும். ஏனெனில், சுயவிருப்பப்படி தேர்ந்தெடுக்கும் ஆற்றலை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளான். பாதையைத் தேர்ந்தெடுத்திட அவனைச் சுதந்திரமாக விட்டுவிட்டான். இந்தச் சுதந்திரம் தான் அவனுக்கு தண்டனை வாங்கித் தரும்,, அதுவே அவனுக்கு சுவனத்தைப் பெற்றுத் தரும். ஆனால் விவரம் புரியாத பலர் தமது பொறுப்பை இறைவனின் மீது சுமத்திவிட்டு தம்மைத்தாமே கட்டாய நிலையிலுள்ளவர்களாகக் கருதிக்கொள்கிறார்கள் .
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Welcome to your comment!