புதன், நவம்பர் 23, 2016

வெட்கம் அனுமதியும் தடையும்! தொடர் 1👍💢

வெட்கம் அனுமதியும் தடையும்! தொடர் 1👍💢
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கை மனிதன் கடவுளை வணங்குவதற்காக மட்டுமே படைக்கப்படவில்லை என்பதாகும். எனவேதான் கடவுளுக்காக மட்டுமே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மனைவி மக்கள் தேவையில்லை என்று துறவறம் செல்வதை இஸ்லாம் தடுக்கிறது. மேலும் துறவிகள் இஸ்லாமிய மார்க்கத்தின் பார்வையில் நல்லவர்கள் அல்ல என்றும் சொல்லுகிறது. அதே நேரத்தில் மனிதனிடம் இருக்கவேண்டிய பண்புகளைப் பற்றியும், ஒருவன் பிறரிடத்தில் நடந்து கொள்ளும் முறை பற்றியும் ஆழமாகப் பேசுகிறது.

ஒருவன் தன் தாயிடத்தில், தந்தையிடத்தில், மனைவியிடத்தில், பிள்ளைகளிடத்தில், குடும்பத்தினர்கள், உறவினர்களிடத்தில், அண்டை வீட்டாரிடத்தில், இப்படி தன்னைச் சுற்றியுள்ளவர்களிடத்திலும் எல்லாரிடத்திலும் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? என்பதைப் பற்றியும் எதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கிறது. இந்த வகையில் இஸ்லாமே மனிதனுக்கான நேரான வழிகாட்டுதலாகும். மனிதனுக்குத் தேவையான அனைத்தையுமே இஸ்லாம் கற்றுக் கொடுக்கும்.


அந்த வகையில், மனிதனிடம் இருக்க வேண்டிய குணங்களைப் பற்றியும் இயல்புகளைப் பற்றியும் மிக விரிவாகவே அலசுகிறது. இப்படி மனித இயல்புகளைப் பற்றியும் குணாதிசயங்களைப் பற்றியும் பேசும்போது மனிதனால் பின்பற்ற முடியாதவற்றை நம்மிடம் ஒருக்காலும் இந்த மார்க்கம் திணிக்காது. இதிலிருந்து. இஸ்லாம் எதைச் சொன்னாலும் மனிதனால் பின்பற்றக்கூடியதையே சொல்லும், பின்பற்றத் தகாததை சொல்லாது என்பதை நாம் நம்பவேண்டும்.

இப்படி மனித குணங்களில் ஒன்றாக உள்ள வெட்கத்தைப் பற்றி நாம் அலசுவோம்.
பொதுவாகவே இஸ்லாமிய மார்க்கத்தில் வெட்கப்படுவதைப் பற்றித்தான் எல்லோரும் பேசுவார்கள், எழுதுவார்கள். ஆனால் நாம் அதைப் பற்றி இதில் அதிகமாக எழுதமாட்டோம். மாறாக வெட்கப்படக்கூடாத காரியங்கள், செயல்கள், இடங்கள், சந்தர்ப்பங்கள் என்னென்ன? என்பதை அலசுகிறோம். எனவே வெட்கம் சம்பந்தமான சில அடிப்படைகளைப் பார்த்துவிட்டு வெட்கப்படக்கூடாத காரியங்களைத் தொடர்வோம்.

முதலில் வெட்கம் என்றால் என்ன? என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். வெட்கம், வெட்கப்படுதல் போன்றவைகளை விளங்காமல் வெட்கப்படக் கூடாத காரியங்களை விளங்கிக் கொள்ளமுடியாது. எனவே வெட்கம் பற்றி அடிப்படையான தகவல்களை அறிந்து கொள்வோம். வெட்கம் என்பதை அரபி மொழி அகராதியில் அல்ஹயா என்பார்கள்.
வெட்கம் என்பது பெயர்ச் சொல் வார்த்தையாகும். இதற்குப் பொருள், பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்கமுடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு.

மேலும் வெட்கம் இரண்டு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. 1. நாணம் லி ள்ட்ஹ்ய்ங்ள்ள், க்ஷஹள்ட்ச்ன்ப்ய்ங்ள்ள் லி திறமையை வெளிப்படுத்துவதற்கு வெட்கப்படுவது, பெண் மாப்பிள்ளையைப் பார்க்க வெட்கப்படுவது போன்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. 2. அவமானம் லி ள்ட்ஹம்ங், க்ண்ள்ஞ்ழ்ஹஸ்ரீங் லி தவறு செய்வதற்குப் பயப்படுவது, மானம் கெட்ட செயல்களைச் செய்வதற்கு அஞ்சுவது.
பார்க்க: கிரியாவின் தமிழ் அகராதி
மேற்சொன்ன கருத்தில்தான், அரபி மொழியின் பிரபலமான, ஆதாரத்திற்கு ஏற்கத் தகுந்த லிஸானுல் அரப் என்ற அகராதியிலும் வெட்கத்திற்கு பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
லிஸானுல் அரப்: பாகம் 11, பக்கம் 200

பிறர் பழிப்பிற்கு பயந்து ஒன்றிலிருந்து தன்னை விடுவித்து விலக்கிக் கொள்வது அல்லது விலகிக் கொள்வது. (அல்முன்ஜித்: பக்கம் 165)
மேலும் ஹயா என்பதற்கு உயிர்வாழ்தல் என்று கூட பொருள் உண்டு. அதனால்தான் நாம்கூட மானம் இழப்பின் உயிர்வாழ்தல் உடமையா? என்றுகூட கேட்கிறோம். எனவே உயிர்வாழ்வதின் அர்த்தமே மானத்தோடும் மரியாதையோடு வாழ்தலாகும். இதுதான் வெட்கம்.
மார்க்க ரீதியாக வெட்கத்தைப் பற்றிய சில அடிப்படையான செய்திகளைப் பார்த்துவிட்டு தலைப்புக்குள் சென்றுவிடுவோம்.

வெட்கம் ஈமானின் கிளை
வெட்கப்படுவது ஈமானின் ஒருமுக்கிய கிளையாகும். ஏனெனில் வெட்கம் கெட்டுவிட்டால் நமது வெளிப்படையான உள்ரங்கமான ஈமானின் பிற அம்சங்களையும் இது இரும்பைத் துரு அரிப்பதைப்போன்று அரித்துவிடும். வெட்கப்படுகிற குணம் நம்மிடம் இல்லையெனில் நம்மில் அதிகமானோர் அருவறுக்கத்தக்க ஆபாசங்களை சர்வசாதாரணமாக செய்துவிடுவோம். வெட்கம் என்பது இருப்பதினால்தான் நம்மை அனைத்து விஷயங்களிலும் அடக்கிக் கொண்டு இருக்கிறோம். எனவே வெட்கம் ஈமானில் மிகமுக்கியம் என்பதினால்தான் நபியவர்கள் ஈமானுக்கு எத்தனை கிளை இருக்கிறது என்பதைச் சொல்லும்போது வெட்கத்தையும் அத்தோடு சேர்த்தே குறிப்பிடுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிமான கிளைகளைக் கொண்டதாகும். வெட்கமும் (நாணமும்) இறைநம்பிக்கையின் ஒரு கிளையே.
அறிவிப்பவர்; அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 9

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை என்பது “எழுபதுக்கும் அதிகமான’ அல்லது “அறுபதுக்கும் அதிகமான’ கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் (வெட்கமும்) இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.
அறிவிப்பவர்: அபூஹரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 58,59

வெட்கத்தின் முக்கியத்துவம்
பொதுவாகவே வெட்கம் இல்லையென்றால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் என்றாகிவிடும். இதற்குச் சிறந்த உதாரணமாக, திரைத் துறையினரை சொல்லலாம். காசுபணம் சம்பாதிப்பதற்காக கூத்தடிக்கும் வேலைகளை, அதுவும் கணவன் மனைவி செய்யவேண்டிய அந்தரங்கக் காரியங்களை காட்சியாக்கி அசிங்கமாகவும் ஆபாசமாகவும் வெளியில் பிறருக்குக் காட்டுவதற்குக் காரணம், வெட்கம் கெட்டுவிடுவதினால்தான். எதார்த்தத்தில் இதை யாரும் விரும்புவதில்லை. அப்படி விரும்பினால் அவனிடமும் வெட்கம் கெட்டு விட்டது என்று அர்த்தம்.
அதே போன்று சிலர், வெட்கமில்லாமல் எதையும் பத்திரிக்கையிலே எழுதுவார்கள். உதாரணத்திற்கு, சமீபத்தில்கூட நக்கீரன் கோபால் தனது பத்திரிக்கையிலே தமிழக முதலமைச்சரைப் பற்றி தவறாக வெட்கமில்லாமல் எழுதியைச் சொல்லலாம். நக்கீரனைப் போன்று பல பத்திரிக்கைகள் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களைப் பற்றிய அவதூறு செய்திகளை வெட்கமில்லாமல்தான் சொல்லுகிறார்கள் என்பதை சாதாரண அறிவுள்ள எவராலும் விளங்கிக் கொள்ளமுடியும்.

அதேபோன்று இன்றைய அரசியல்வாதிகள் மக்களிடத்தில் பொய்வாக்குறுதிகளைச் சொல்லி வெட்கமில்லாமல் மானங்கெட்டு ஓட்டுக் கேட்பார்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும் அத்தனை வாக்குறுதிகளையும் மீறுவார்கள். இதுவும்கூட வெட்கங்கெட்ட செயலாகும்.
அதேபோன்று நமது சமுதாயத் தலைவர்களிலும்கூட பல கழிசடைகள் அரசியலுக்காவும் உலக ஆதாயத்திற்காகவும் வெட்கங்கெட்டு இஸ்லாத்தை அடகுவைக்கிற காட்சிகளை சாட்சிகளோடு செய்வதையும் கண்கூடாக நாம் அன்றாட வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறோம்.

இப்படி, எந்த மனிதனிடத்தில் வெட்கம் கெட்டுவிடுகிறதோ அவன் எந்தத் தவறையும் செய்வான் என்பதை நபியவர்கள் நமக்கு எச்சரிக்கிறார்கள். மேலும் எல்லா நபிமார்களும் சில அடிப்படையான கொள்கை கோட்பாடுகளை ஒரே மாதிரியாகவே சொல்லுவார்கள். அதே போன்று ஆதமிலிருந்து ஆரம்பித்து நூஹ், இத்ரீஸ், இப்ராஹீம் என்று இறுதி நபி முஹம்மது அவர்கள் வரைக்கும், இப்படி எல்லா நபிமார்களுமே இந்த வெட்கம் கெட்டால் ஒருவன் எதனையும் செய்வான் என்பதையும் சொல்லியுள்ளார்கள் என்பதிலிருந்து வெட்கத்தை விடாமல் கடைபிடிக்க வேண்டும் என்கிற முக்கியத்துவம் விளங்குகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்றுதான், “நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்துகொள்” என்பதும்.
அறிவிப்பவர்: அபூ மஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி),
நூல்: புகாரி 3483,3484,6120

வெட்கம் எல்லா மனிதர்களிடத்திலும் இருக்கவேண்டும் என்பதை யாருமே மறுப்பதற்கில்லை. வெட்கத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கு இதுவே போதுமானதாகும். நமது தலைப்பு வெட்கப்படக்கூடாத விஷயங்களைப் பற்றியதுதான். இனி வெட்கப்படக்கூடாதவைகளைப் பற்றிய செய்திகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.👇👈👉

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!