புதன், நவம்பர் 30, 2016

ஸகாத் கொடுப்போம் 💰..தொடர் 3

ஸகாத் கொடுப்போம் 💰..தொடர் 3  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் பற்றி இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். இன்று ஜகாத் வழங்குவோரின் சிறப்புகளையும், கொடுக்காதவர்களின் மறுமை தண்டணைகளையும் பார்க்க இருக்கிறோம்.
ஸகாத் கொடுப்போம் 💰..தொடர் 3
மறுமைக்கான டெபாஸிட்
தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
அல்குர்ஆன் 2:110

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். அல்குர்ஆன் 74:20

மறுமையில் கவலையில்லை
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அல்குர்ஆன் 2:277

ஸகாத் பாவங்களை அழிக்கும்
இஸ்ராயீலின் மக்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்தான். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட பன்னிரண்டு பேரை அனுப்பினோம். “நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, எனது தூதர்களையும் நம்பி, அவர்களுக்கு உதவியாக இருந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனையும் கொடுப்பீர்களானால் உங்கள் தீமைகளை உங்களை விட்டும் அழிப்பேன். உங்களை சொர்க்கச் சோலைகளிலும் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். “உங்களில் இதன் பிறகு (என்னை) மறுத்தவர் நேரான வழியிலிருந்து விலகி விட்டார்” என்று அல்லாஹ் கூறினான். அல்குர்ஆன் 5:12

சொர்க்கத்தில் நுழைவிக்கும்
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள். நான் அதைச் செயல்படுத்தினால் அது என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்க வேண்டும்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஸகாத்தை நீங்கள் வழங்க வேண்டும்; உங்கள் உறவினரைப் பேணி வாழ வேண்டும்” என்று கூறினார்கள்.

அந்த மனிதர் திரும்பிச் சென்றதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் தமக்குக் கட்டளையிடப்பட்டவற்றைக் கடைப்பிடித்தால் கட்டாயம் இவர் சொர்க்கம் சென்று விடுவார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி)
நூல்: முஸ்லிம் 14, புகாரி 1396

உலகிலேயே சொர்க்கவாசியானவர்
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள்! நான் அதைச் செயல்படுத்தினால் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது; கடமையாக்கப்பட்ட தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்” என்று கூறினார்கள்.

அதற்கு அந்த மனிதர், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு போதும் இதைவிட அதிகமாக எதையும் நான் செய்ய மாட்டேன்; இதிலிருந்து எதையும் நான் குறைக்கவும் மாட்டேன்” என்று கூறினார்.
அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்ப்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் (இதோ!) இவரைப் பார்த்துக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 15

நிம்மதியாக சொர்க்கம் செல்லலாம்
அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜில் உரையாற்றும் போது நான் செவியுற்றேன். அவர்கள் கூறினார்கள்: (மக்களே) உங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள். உங்களுடைய ஐந்து (நேரத் தொழுகைகளை) தொழுது கொள்ளுங்கள், உங்களுடைய (ரமலான்) மாதத்தில் நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள், உங்களுடைய செல்வத்தின் ஸகாத்தை நிறைவேற்றுங்கள், உங்களில் அதிகாரமுடையவர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) கட்டுப்படுங்கள், உங்களுடைய இரட்சகனின் சொர்க்கத்தில் நீங்கள் நுழைவீர்கள். நூல்: திர்மிதி 559

ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நிலை
ஸகாத்தை நிறைவேற்றுபவர்களின் சிறப்புகளையும், மறுமையில் அடையவிருக்கும் நன்மைகளையும் நாம் விரிவாகப் பார்த்தோம். அதே நேரத்தில் ஸகாத்தை நிறைவேற்றாமல் மோசடி செய்பவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் தண்டனையையும் அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கின்றான்.
இத்தகைய கொடும் தண்டனையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டுமென்றால் நாம் அவசியம் ஸகாத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும்.
இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் எத்தனையோ செல்வந்தர்கள் ஸகாத்தைக் கணக்கிட்டு நிறைவேற்றும் விசயத்தில் பொடும்போக்கானவர்களாகவே இருக்கின்றார்கள்.

மரணம் ஒரு மனிதனுக்கு எப்போது வரும் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது. செல்வ வசதியைப் பெற்றும் ஸகாத்தை நிறைவேற்றாமல் இருப்பவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும். ஸகாத்தை நிறைவேற்றி மறுமை வேதனைகளிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதோ ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை வேதனையைப் பற்றி திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள்.

இணை கற்பிப்பவர்களின் பண்பு
இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது என்று (முஹம்மதே!) கூறுவீராக!. அவர்கள் ஸகாத் கொடுக்க மாட்டார்கள். மறுமையையும் மறுப்பவர்கள்.
அல்குர்ஆன் 41:6, 7

இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற ஒருவன் தான் ஸகாத்தை நிறைவேற்ற மாட்டான். இது ஒரு முஸ்லிமின் பண்பாக இருக்கலாமா? ஒரு போதும் இருக்கக் கூடாது. உண்மையான முஸ்லிம்கள் ஸகாத்தை முறையாக நிறைவேற்றி விடுவார்கள்.

மறுமையில் நஷ்டவாளிகள்
அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்த போது அவர்களிடம் நான் போய்ச் சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்டதும் “கஅபாவின் அதிபதி மீது ஆணையாக! அவர்கள் நஷ்டவாளிகள்” என்று கூறினார்கள். நான் சென்று (அவர்கள் அருகில்) அமர்ந்தேன்.

என்னால் இருப்புக் கொள்ள முடியாததால் உடனே எழுந்து, “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் அதிகமான செல்வம் படைத்தவர்கள். ஆனால், (நல்வழியில் செல்வத்தை ஈந்த) சிலரைத் தவிர” என்று கூறியபடி இவ்வாறு இவ்வாறு இவ்வாறு என்று (தம் முன் பக்கம், பின் பக்கம், வலப் பக்கம், இடப் பக்கம்) சைகை செய்து (நல்வழிகள் பல உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி)விட்டு,

“ஆனால், அவர்கள் மிகக் குறைவானவர்களே. ஒருவருக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றுக்கான ஸகாத்தை அவர் நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததை விடப் பெரியனவாகவும் கொழுத்தவையாகவும் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால் குளம்புகளால் மிதிக்கும். அவரை இறுதிப் பிராணி மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவரை மிதிக்க வரும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்” என்று கூறினார்கள்
நூல்கள்: புகாரி (6638), முஸ்லிம் (1809)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!