ஞாயிறு, மார்ச் 12, 2017

சிறு நேரத்தில் பெரு நன்மைகள் [தொடர் 2]

சிறு நேரத்தில் பெரு நன்மைகள் [தொடர் 2]
தொடர்ச்சி......
கையளவு தர்மம் - மலையளவு கூலி
தூய்மையான சம்பாத்தியத்தில் மதிப்பில் குறைந்த பொருளை சிறிய அளவு தர்மம் செய்தாலும் கூட அதற்காக இறைவனிடத்தில் மலையளவு நன்மைகளைப் பெறலாம் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். கையளவு முதலீட்டுக்கு மலையளவு லாபம் என்பது உண்மையில் பெரிய விஷயம் தானே!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ - அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்துவிடுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),,
நூல்: புகாரி 1410

ஒரு நோன்பும் ஈராண்டு பாவ மன்னிப்பும்
அரஃபா நாளில் நோன்பு நோற்றால் இரு ஆண்டுகள் புரிந்த பாவங்கள் மன்னிக்கப்படுவதாகவும், அதே போல ஆஷூரா தினத்தன்று (முஹர்ரம் 9,10) நோன்பு நோற்றால் ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும் என்றும் நபிகள் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, "முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப் பரிகாரமாக அமையும்'' என்றார்கள். ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு "அது கடந்த ஆண்டின் பாவப் பரிகாரமாகும்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),
நூல்: முஸ்லிம் 2152
எழுத்து ஒன்று - நன்மைகள் பத்து
திருக்குர்ஆனை ஓதும் போது அதில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள் வீதம் நமக்குக் கிடைப்பதாக நபிகளார் போதித்துள்ளார்கள். குறைந்த நேரத்தில் அதிகமான நன்மைகளை அறுவடை செய்ய விரும்பும் நபர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பே என்பதில் துளியும் சந்தேகமில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு அதற்காக ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை என்பது அதைப் போன்று பத்து மடங்காகும். அலிஃப், லாம், மீம் ஒரு எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக அலிஃப் ஒரு எழுத்தாகும். லாம் ஒரு எழுத்தாகும். மீம் ஒரு எழுத்தாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),
நூல்: திர்மிதி (2835)
மூன்று புனிதப் பள்ளிகள்
கஃபா, மஸ்ஜிதுந் நபவீ, பைத்துல் முகத்தஸ் ஆகிய பள்ளிகளில் தொழுவது ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட அதிக  நன்மைகளைப் பெற்றுத் தரும்.
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1190
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளப்படாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1189
குர்ஆனில் மூன்றில் ஒரு பாகம்
"குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் (112ஆவது) அத்தியாயத்தை ஓதினால் குர்ஆனில் மூன்றில் ஒரு பங்கை ஓதியதற்கு ஈடானதாகும் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.
ஒரு மனிதர் "குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் (112ஆவது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக் கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி),
நூல்: புகாரி 5013
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா? என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் ஒருவனே; அல்லாஹ் தேவைகளற்றவன்' (என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி),
நூல்: புகாரி 5013
பொறுமையாளர்களுக்கு கணக்கின்றி கூலிகள் வழங்குவதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவதையும் இந்நேரத்தில் நினைவு கூர்வது சாலச்சிறந்தது.
நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
அல்குர்ஆன் 39:10
EGATHUVAM APR 2015 /நன்றி. இஸ்மாத் /tamilwemislam .blogspot 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!