மானபங்கப்படுத்தாதீர்கள்!




மானமே பெரிது !

பால்யப் பருவத்திலிருந்து முதுமைக்காலம் வரை மானம் காத்து வாழ்வதே மனித இயல் பிற்பட்டதாகும் . அரைகுறை அறிவு வரும் பிஞ்சுபருவத்திலே மறைப்பின்றி மற்றவர் முன் நடமாட குழந்தை தயங்குகிறது . தன்னைத்  தாக்கினாலோ ஏசினாலோ பிள்ளை மனம் அதைப் புரிந்து அதற்க்கு ரோஷம்  பொத்துக் கொண்டு வருகிறது . இந்த ரோஷம் , தன்மானம் நாளடைவில் வளர்ந்து கனியாகின்றது . ஒரு தலை மகன் அடுத்தவர் முன் அவமானத்திர்காளாகும் பொழுது எவ்வித விபரீதச் செயலையும் நொடியில் செய்ய துணிகின்றான் , இதெல்லாம் மானத்தின் வெளிப்பாடாகும் . இவ்வுணர்ச்சி ஏற்படுவது , உயர்ந்தவன், தாழ்ந்தவன் வசதியுள்ளவன்  வறுமையுல்லவன் என்ற இடைவெளிக்கு அப்பாற்பட்டதாகும் . தனது மானம், குடும்பத்து கண்ணியம் என்ற முறையில் நீண்டு செல்லும் வல்லமையைப் பெற்றது தான் இந்த "மானம்" இதில் எந்த வகை மானம் பறி போனாலும் சகஜ நிலை ஸ்தம்பிப்புத்தான்!.

தமது உரிமை பறிக்கப்பட்டவன் , அல்லது மற்றவர் முன் மரியாதை கெடுக்கப்பட்டவன் எவ்வையிலாவது தமது கொந்தளிப்பை, கிளர்ச்சியை வெளிக்காட்டியாக வேண்டும். அப்படி அவன் இல்லாவிட்டால் அவன் மானங்கெட்டவன் , சூடுசொரணை இல்லாதவன் என்ற பெயருக்கு அவன் ஆளாக நேரிடும். சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எல்லாம் அவன் இளக்காரமாக தலையில் கொட்டப்பட்டு தரம் குறைக்கப்படுவான் . ஆக மனிதனின் இயற்க்கைப்பண்பு தன்மானத்தை , சுயமரியாதையை  விரும்புவதாகவே இருக்கின்றது என்பது வெளிப்படை.

மற்றவர் மானம் காக்க !

தமது மானத்தைக் காப்பாற்றி வாழ இஸ்லாம் தூண்டுவது போல் மற்றவரின் மான மரியாதையையும் காப்பாற்றி வாழவும் தூண்டுகிறது ."அடுத்தவர் குறை நிறைகளை அலசித் திரியாதீர் " என்கிறது திருக்குர் ஆன் . தமது முஸ்லிம் ஒரு இடத்தில் மான பங்கப்படுத்தப்படும் பொழுது எவர் அவருக்கு உதவிகரம்  நீட்டுகின்றாரோ , அவருக்கு அல்லாஹ் உதவிக்கரம் நீட்டுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) நவின்றுள்ளார்கள் .

கொடிய வட்டி!

தமது இஸ்லாம் இது சமந்தப்பட்ட பிரச்சனையில் சொல்லிக் காட்டும் எச்சரிக்கை கள் கவனிக்கத்தக்கவையாகும் . "அத்துமீறி ஒரு முஸ்லிமின் மானத்தில் தலையிடுவது கொடிய வட்டியில் சேர்ந்ததாகும் "  என்று நபிகள் நாயகம் (ஸல்) போதித்துள்ளார்கள். அனாவசிய தலையீட்டின் கொடுமையை நபிகளார் (ஸல்) இந்த ஹதீஸில் எச்சரித்துள்ளதைவிட வேறெவரும் இந்தளவு அதன் கொடுமையை சித்தரிக்க இயலாது .

முதற்கண் , அடுத்து முஸ்லிமை புறம்பேசி , கோள் சொல்லி, அவதூறு கிளப்பும் இப்பழக்கத்தை நபி (ஸல்) அவர்கள் வட்டியுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளது மிகப் பொருத்தமானதாகும். " பெறத்தகுந்த  தொகையைவிட அதிகத் தொகை பெறுவது " என்ற பொருளில் வட்டி இருப்பது போல இதே கொடுமை - கொண்டதாகவே அவதூறு பேசுவதும் இருக்கின்றது . அவதூறு என்பது அடுத்தவரைப் பற்றி அதிகப்படியாக தலையிடுவது தானே! எனவேதான் இதையும் வட்டி என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் .

விளைவு பயங்கரம்!

முறையின்றி மான விவகாரங்களில் தலையிடுவோருக்கு மறுமை சோதனை கடுமையானதாகும் இருக்கும். பிறர் படும் வேதனையில் குளிர் காயிந்து இந்த குணக் கெட்டவனின் விரல் நகங்கள் மறுமையில் செம்பிலானதாக இருக்கும்  இந்த நகங்களால் அவன் தன் நெஞ்சத்தையும் முகங்களையும் கீறிக் கொண்டிருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

தமது சகோதர முஸ்லிமை ஒரு இடத்தில் வைத்து , அவனது மரியாதையைக்  கெடுத்து , குழி பரித்தவனது நிலை , " அவனுக்கு ஒரு இக்கட்டான சந்தர்ப்பம் நேரிடும் பொழுது அல்லாஹ் அவனை எட்டித்தள்ளி விடுவான் " என்று பெருமானார் (ஸல்) எச்சரித்துள்ளார்கள் . (நூல் அபூதாவுது)

மேலும், "தமது சகோதர முஸ்லிமின் அந்தரங்க விஷயங்களை கிளறிக் கொண்டிருப்பவனது அந்தரங்களை வல்ல இறைவன் இவ்வுலகிலேயே வெளிக்கொணர்ந்து அவனுடைய மானத்தை வாங்குவான் " என்று நபிகள் நாயகம் (ஸல்) அறிவித்துள்ளார்கள் .

நமது குறைநிறைகளை அவனொருவனே நன்கு அறிந்தவன் அவனால் மட்டுமே நம்மை மானமுடன் வாழச் செய்ய முடியும் . நமது தன்மானம் என்றும் காக்கப்பட்டு நாம் வாழ நாயன் அருள்வானாக . ஆமீன்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள்