பெற்றோருக்கு நன்மை செய்தவரின் பிரார்த்தனை [துஆ ] ஏற்கப்படுவது

அல்லாஹ்வின் திருபெயரால் .....
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !!!

முன்காலத்தில் வாழ்ந்தவர்களின் ஒரு சம்பவம் . இது இன்ஷாஅல்லாஹ் நமக்கு பாடமாகவும் ,படிப்பினையாகவும் இருக்கும் .


அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள் ..

[உங்களுக்குமுன்  வாழ்ந்தவர்களில்] மூன்று பேர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது  [திடீரென்று ] மழை பிடித்துக்கொண்டது. ஆகவே , அவர்கள் [ஒதுங்குவதற்காக ] ஒரு மலைக்குகையை நோக்கிப் போனார்கள் . [அவர்கள் உள்ளே நுழைந்து] உடனே மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை அவர்களது குகைவாயிலை அடைத்துக்கொண்டது . [வெளியேற முடியாமல் திணறிய ] அவர்கள் [மூவரும்] அப்போது தமக்குள் , ''நாம் [வேறெவருடைய திருப்திக்காக்கவுமின்றி] அல்லாஹ்வுக்காக [என்று தூய்மையான முறையில்] செய்த நற்செயல்களை நினைத்துப்பார்த்து, அவற்றை முன்வைத்து        அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இ [ப்பாறை ]தனை [நம்மைவிட்டு] அகற்றிவிடக்கூடும் '' என்று பேசிக்கொண்டனர்
.

எனவே அவர்களில் ஒருவர் இவ்விதம் [இறைவனிடம் ] வேண்டினார் .. இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர் . எனக்குச் சிறு குழந்தைகளும் உண்டு . நான் இவர்களை பராமரிப்பதற்காக ஆடுகளை மெய்த்துக்கொண்டிருந்தேன் . மாலையில் அவர்களிடம் நான் திரும்பி வந்தபின் ஆட்டின் பாலைக் கறந்துகொண்டு வந்து என் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன்பாக என் தாய் தந்தையருக்கு முதலில் ஊட்டுவேன். [ஒருநாள்] இலை தழைகளைத் தேடியபடி வெகுதூரம் சென்றுவிட்டேன் . அதனால் அந்தியப் பொழுதிலேயே [வீட்டுக்கு] வர முடிந்தது . அப்போது [என் தாய் ,தந்தை] இருவரும் உறங்கிவிட்டிருக்கக் கண்டேன் . உடனே எப்போதும்போல பால் கறந்து , பால் செம்புடன் வந்தேன் .

பெற்றோரை தூக்கத்திலிருந்து எழுப்பிட மனமில்லாமல் அவர்கள்  இருவருடைய  தலைமாட்டில் நின்று கொண்டேன் . அவர்கள் இருவருக்கும் முன் குழந்தைகளுக்கு முதலில் ஊட்டுவதையும் நான் விரும்பவில்லை . என் குழந்தைகளோ எனது காலருகில்  [பசியால்] கதறிக்கொண்டிருன்தனர் . இதே நிலையில் நானும் அவர்களும் இருக்க , வைகறை வந்துவிட்டது . [இறைவா] நான் இச்செயலை  உனது அன்பை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால் எங்களுக்கு இந்தப் பாறையைப் சற்றே நகர்த்திடுவாயாக! அதன் வழியாக நாங்கள் ஆகாயத்தைப் பார்த்துக்கொள்வோம்.

அவ்வாறே அவர்களுக்கு அல்லாஹ் சற்றே நகர்த்திகொடுத்தான் .அதன் வழியாக அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தார்கள்.

இரண்டாமவர்  [பின்வருமாறு] வேண்டினார் ..

இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய புதல்வி ஒருத்தி இருந்தாள்  . பெண்களை ஆண்கள் நேசிப்பதிலேயே மிகவும் ஆழாமாக அவளை நான் நேசித்தேன்  . [ஒருநாள்] அவளிடம் அவளைக் கேட்டேன். நான் அவளிடம் நூறு பொற்காசுகள் கொண்டுவந்தால் தவிர  [எனக்கு இணங்க முடியாதென] அவள் மறுத்துவிட்டாள் .

நான் முயற்சி செய்து . [அந்த] நூறு பொற்காசுகளை சேகரித்தேன். நான் அதனுடன் சென்று அவளைச்  சந்தித்து, அவளுடைய இரு கால்களுக்கிடையே அமர்ந்தபோது அவள்,  ''அல்லாஹ்வின் அடியானே ! அல்லாஹ்வை அஞ்சு! முத்திரையை அதற்குரிய [சட்டபூர்வ] உரிமை [யான திருமணம்] இன்றித் திறக்காதே'' என்று சொன்னாள் . உடனே நான் அவளை விட்டுவிட்டு எழுதுந்துவிட்டேன். [இறைவா] இதை உன் அன்பை பெற விரும்பியே நான் செய்ததாக நீ கருதினால்  , இந்தப் பாறையை எங்களுக்காக  [இன்னும் சற்று] நகர்த்திடுவாயாக!

அவ்வாறே  [அல்லாஹ் ] ,அவர்களுக்கு [அப்பாறையை இன்னும்] சற்றே நகர்த்திக்கொடுத்தான்  .

மற்றொருவர் [பின்வருமாறு] வேண்டினார்..

இறைவா! நான் ஒரு ஃபரக் அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்து கூலியாள் ஒருவரை  [பணிக்கு] அமர்த்தினேன் . அவர் தமது வேலை முடித்தவுடன் , ''என்னுடைய உரிமையை  [கூலியை] க் கொடு '' என்று கேட்டார்  . நான் [நிர்ணயத்தபடி] அவரது உரிமையை [கூலியை] அவர்முன் வைத்தேன் . அதை அவர்  பெற்றுக்கொள்ளாமல் [என்னிடமே ] விட்டுவிட் [டுச் சென்றுவிட்] டார் . பின்னர் நான் அதை [நிலத்தில் விதைத்து] தொடர்ந்து விவசாயம் செய்து வந்தேன் . அதி [ல் கிடைத்த வருவாயி] லிருந்து பல மாடுகளையும் அவற்றுக்கான இடையர்களையும் நான் சேகரித்துவிட்டேன். பின்னர்  [ஒருநாள் ] அவர் என்னிடம் வந்து . ''அல்லாஹ்வை அஞ்சுவீராக! எனக்கு அநீதி இழைக்காதீர் ! எனது உரிமையை என்னிடம் கொடுத்துவிடுவீராக! என்று கூறினார்.

அதற்கு நான் , '' அந்த மாடுகளிடத்திலும் அவற்றின் இடையர்களிடத்திலும் நீ செல்!  [அவை உனக்கே உரியவை]'' என்று சொன்னேன். அதற்கு அம்மனிதர் , ''அல்லாஹ்வை அஞ்சுவீராக! என்னைப் பரிகாசம் செய்யாதீர்! 'என்று சொன்னார்  . நான் , ''உன்னை  நான் பரிகாசம் செய்யவில்லை. இந்த மாடுகளையும் இடையர்களையும்  நீயே எடுத்துக்கொள்'' என்று சொன்னேன்    . அவர் அவற்றைப் பிடித்தபடி நடந்தார்.

[இறைவா] நான் இந்த [நற்]செயலை  உன் அன்பைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதினால் மீதியுள்ள அடைப்பையும் நீ அகற்றிவிடுவாயாக! அவ்வாறே அல்லாஹ்  [அப்பாறையை] அவர்களை  விட்டு [முழுமையாக] அகற்றிவிட்டான்.
ஆதாரம் ..புகாரீ]

இதிலிருந்து நாம் பெற்ற பாடம் .. அவர்கள் அல்லாஹ் மீது வைத்துரிந்த இறை அச்சம்  , அவர்களின் நேர்மை , ஒழுக்கம், ஒருவர் அவர்களின் பெற்றோர்களின் மீது  வைத்திருந்த அன்பு நேசம் பற்று இன்னும்.....  அவர்கள் செய்ததது அல்லாஹ் ஒருவனுக்காக மட்டும்  . அவனின் அன்பைப் பெறுவதற்காக மட்டும் என்பதை நாம் இங்கே  புரிந்துக் கொள்ள முடிகிறது. நாம் செய்த காரியங்களில்  ஏதாவது ஒன்று அல்லாஹ்வின் அன்புக்காக இருப்பினும் அதை முன்வைத்து நாம் அல்லாஹ்விடம்  பிரார்த்தனை செய்யலாம் என்பதை நாம் இங்கே விளங்கிக் கொள்ள முடிகிறது. இன்றையக் காலத்தில் சில பிள்ளைகள் அவர்களின் பெற்றோர்களை உதாசினப்படுத்துவது  , அவர்களுக்கு இது ஒரு படிப்பினையாக இருக்கும். அந்நிய பெண்களை அடைய வேண்டும் என்று நினைக்கும் சில  வக்கிர புத்து உள்ள ஆண்களுக்கு இது பாடமாக இருக்கும். கூலிக்கு ஆள்  அமைத்து , அவர்கள் வேலைக்கு தகுந்தப்படி கூலி கொடுக்காமல்  குறைவாக கொடுக்கும் சில முதலாளிகள் அவர்களுக்கும் இதில்  பாடமும், படிப்பினையும் உண்டு. அல்லாஹ் நம் அனைவரையும் இறை அச்சம் உள்ளவர்களாக ஆக்கி  , எது செய்தாலும் அல்லாஹ்வின் அன்புக்காக மட்டும் என்ற தூய எண்ணத்தையும்  கொடுப்பானாக!.... ஆமீன் ..    

கருத்துகள்