அல்லாஹுதஆலாவுடைய கட்டளைகளுக்கு உட்பட்டு நடப்பவருக்கும், அல்லாஹுதஆலாவுடைய கட்டளைகளை மீறுபவருக்கும் உதாரணம், கப்பலில் பயணம் செய்யும் மக்களைப் போன்று! சீட்டுக்குலுக்கிப் போட்டு பயணிகளின் இடங்கள் நிர்ணயிக்கப்பட்டு, சிலர் கப்பலின் மேல் தளத்திலும், சிலர் கப்பலின் கீழ் தளத்திலும் உறுதி செய்யப்பட்டது. கீழ் தளத்திலுள்ளோருக்குத் தண்ணீர் தேவைப்பட்டால், மேல் தளத்துக்கு வந்து, அங்குள்ளோரைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. நாம் நமது (கீழ்ப்) பகுதியில் துவாரம் போட்டுக் கொண்டால் (மேலே போவதற்குப் பதிலாக அந்தத் துவாரம் வழியாக தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்), மேலும் மேள்தளத்தில் உள்ளோருக்குச் சிரமம் கொடுக்காமல் இருக்கலாம், (இப்படிச் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!) என்று கீழ் தளத்தினர் தங்களுக்குள் ஆலோசனை செய்தனர். மேள்தளத்திலுள்ளவர்கள், கீழ் தளத்திலுள்ளவர்களை அவர்களுடைய விருப்பத்திற்கேற்ப விட்டுவிட்டால், (அவர்கள் துவாரம் போட்டுக் கொண்டால்) கப்பல் மூழ்கி எல்லோருமே அழிந்து போவார்கள். அவர்களை (கப்பலில் துவாரம் போடவிடாமல் தடுத்துவிட்டால்) அவர்களும், மற்ற பயணிகளும் காப்பாற்றப்படுவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் நுஃமானிப்னு பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- இந்த ஹதீஸில், இந்த உலகத்திற்கு உதாரணமாகக் கப்பலைக் கூறப்பட்டுள்ளது, அதில் பயணம் செய்யும் கூட்டத்தினரில் ஒரு சாராரின் தவறால் மற்றவர்களுக்கு தாக்கம் ஏற்படாமல் இருக்க முடியாது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஒரு கப்பலில் பயணம் செய்யும் ஒரு சமுதாயத்தினரைப் போல, அக்கப்பலில் நல்லோர், தீயோர் அனைவரும் உள்ளனர். நன்மையைவிட தீமை மிகைத்துவிட்டால், தீமையில் மூழ்கி இருக்கும் தீயவர்கள் மட்டும் அந்தத் தீங்கின் தாக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். நல்லோர், தீயோர் முழு சமுதாயமும், முழு உலகமும் அத்தீமையின் தாக்கத்துக்கு ஆளாக நேரிடும். எனவே, மனித சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக அல்லாஹுதஆலாவிற்கு மாறுசெய்பவர்களை தீங்கை விட்டும் தடுப்பது அவசியம், இல்லையெனில், முழுசமுதாயமும் அல்லாஹுதஆலாவின் வேதனைக்கு ஆளாக நேரிடும்.
தொழுகையை விடுவதும் குற்றம் , நோன்பு பிடிக்காமல் இருப்பதும் குற்றம் [உடல் ஆரோக்கியமாக இருந்தும்], செல்வம் இருந்தும் ஜகாத்து கொடுக்காமல் இருப்பதும் குற்றம், வசதி இருந்தும் ஹஜ் செய்யாமல் இருப்பதும் குற்றம். வட்டி வாங்குவதும் குற்றம், புறம் பேசுவதும் குற்றம் , கோல் சொல்வதும் குற்றம் , இப்படி பாவத்தின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம்..சக்தி இருந்தும் தடுக்காவிட்டால் என்ன ஆகும் என்பதை அடுத்த நபிமொழி என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
சிலருடைய குற்றங்களின் காரணமாக, குற்றம் செய்யாதவர்களை அல்லாஹுதஆலா வேதனை செய்வதில்லை. ஆயினும், அவனுக்கு வழிப்பட்டு நடப்போர், குற்றம் புரிவோரைத் தடுப்பதற்குச் சக்தியிருந்தும் தடுக்கவில்லையென்றால், நல்லோர், தீயோர், அனைவரையும் வேதனை செய்வான்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உர்ஸுப்னு அமீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, ]
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!