திசை மாறிய உறவுகள் ... !

 



திசை மாறிய உறவுகள் ... !இது ஒரு கொஞ்சம் நீண்ட கட்டுரை , பொறுமையாக படியுங்கள்! 


அப்துல்லா  58 வயது தென்காசியிலுள்ள  உள்ள ஒரு பிரசித்தி பெற்ற 

பள்ளி வாசலில் மோதினார் . 

அவர் மனைவி ஆமினா    வயது 51


அவர்களின் ஒரே மகன்  ஜமால் ....

கம்ப்யூட்டர் இன்ஜினியர் அமெரிக்கா டெக்ஸாசில் வேலை பார்க்கிறான்... 

லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான்...


சிறு வயதிலேயே மிக சூட்டிகையானவன்... குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பது தெரிந்து தான் நன்றாக படித்தால் தான் குடும்பம் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து எப்போதும் பாடப் புத்தகமும் கையுமாக அலைவான்... 

வகுப்பில் எப்போதும், அவன்தான் முதல் மாணவன்.


பிளஸ் 2-வில் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண்ணும், மாவட்ட அளவில் மூன்றாவது இடத்திலும் வந்தான்.


இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து விட்டாலும், அந்த நான்கு ஆண்டுகள் படிப்பு முடிவதற்குள், மோதினார் அப்துல்லா மிகவும் திண்டாடித்தான் போய்விட்டார்.


பைத்துல் மாலில் பணம் கிடைத்திருந்தாலும், கல்லூரி கட்டணம் போக மீதி செலவுகளான புத்தகம், உணவு, விடுதி கட்டணம் என மற்றவற்றுக்கெல்லாம் ... 

பல இடங்களில் கடன் வாங்கியும், இருந்த ஒரே ஒரு ஓட்டு வீட்டையும் விற்றும் சமாளித்தார்.


எப்படியோ ஒரு வழியாக நல்ல மதிப்பெண்ணுடன் ஜமால் இன்ஜினியரிங் முடித்தான்.


அதற்குப் பின், சென்னையில் உள்ள, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், "அப்ரென்டிஸ்' ஆகச் சேர்ந்தான்.


இரண்டு வருட பயிற்சிக்குப்பின், பணி நிரந்தரம் செய்யப்பட்டு, நிறுவனத்தின் அமெரிக்க டெக்ஸாஸ் கிளைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டான்.


படிக்கும் காலத்தில், ஜமாலுக்கு பெரும்பாலும் ரசம் சாதம், பருப்பு சாதம் தான். பல நேரங்களில மோதினார்ரும், அவர் மனைவியும், தாங்கள் சாப்பிடாமல் கூட இருந்து விடுவர் ஆனால், மகனுக்கு எப்படியாவது, எதையாவது மூன்று வேளையும் சாப்பிடக் கொடுத்து விடுவர்.


கண்காணாத இடத்திற்கு போய், மகன் சாப்பாட்டிற்கு கஷ்டப்படக் கூடாது ...


மோதினாருக்கும், ஆமினாவுக்கும் ஒரே எண்ணம்தான் ... 

ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண்ணைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று...


மருமகள் ஜரினா ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். 

அவள் வாப்பா ஒரு ஓட்டலில் சமையல்காரர், பிளஸ் 2 முடித்து இருந்தாள் ...


வரதட்சணை, நகை, சீர் ஹராம் என்பதால் எதுவும் கேட்காமல், மஹர் கொடுத்து, இவர்களே திருமண செலவுகளை செய்து வலிமா விருந்து கொடுத்து திருமணத்தை முடித்தனர்.


திருமணமான ஒரே வாரத்தில், ஜமால்  தன் மனைவி ஜரினாவுடன் டெக்ஸாஸ் சென்று விட்டான்.


போன புதிதில், அவ்வப்போது போன் செய்து பேசிக் கொண்டிருந்த மகனும், மருமகளும் ...

அதன் பின், மாதம் ஒரு முறை ... இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்று பேசலாயினர்.


திருமணத்திற்குப் பின் டெக்ஸாஸ் சென்ற ஜமால் ஒரு முறை கூட பணம் அனுப்பவில்லை.


அதற்குப் பின், ஜமாலிடமிருந்து பணம் பற்றி எந்தப் பேச்சும் கூட வந்தது கிடையாது.


 மோதினார்ருக்கும், மனைவிக்கும், மகன் பணம் அனுப்பவில்லையே என்ற கவலையெல்லாம் இல்லை. அவன் நன்றாக இருந்தால், அதுவே போதும்.


இரண்டு ஆண்டுகளுக்குப் பின், மகன் இதோ இப்போதுதான் சொந்த ஊர் வருவதாக போன் செய்திருந்தான்.


அதற்குதான் ஆமினா தடபுடலாக தேங்கோட்டாமாவு, இடிப்பம் மாவு, மகன் ஆசையாக தின்பான் என்று.. கற்கண்டுபணியரம்,குழல்பணியரம் ஒரு வாரம் முன்பே  எல்லாம் செய்து காலை ஆட்டுக்கால் பாயா இடியாப்பம்  மதியம் 

மட்டன் பிரியாணி, சிக்கன்65, கேசரி, இன்னும் என்னென்ன செய்ய முடிமோ அத்தனையும் செய்து அமர்க்களப்படுத்தி கொண்டிருக்கிறாள்.


ஆமினாவிடம் மகன் போனில் பேசும் போதெல்லாம், "அம்மா இங்க சொர்க்கம் மாதிரி இருக்கும்மா.

பெரிய வீடு, தோட்டம் எல்லாம் இருக்கு. 

வீடு பெருக்க, பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க எல்லாவற்றிருக்கும் மிஷின் இருக்கு.


நீங்க ரெண்டு பேரும் இங்கேயே வந்து, எங்க கூடவே தங்கிடுங்கம்மா... 

அங்கே என்ன இருக்கு?' என்று அடிக்கடி கூப்பிடுவான்.


"வாப்பா பள்ளிவாசலை விட்டுட்டு வருவார்ன்னு தோணலைப்பா, நீ இங்கு வரும்போது, அது பற்றி பார்க்கலாம்...' என்று கூறி வந்தாள் தாய்.


மகன் சொல்லிச் சொல்லியே ஆமினாவுக்கு, அந்த ஆசை அடி மனதில் தங்கி விட்டது.


எப்போதும்  மோதினாரிடம் வாய் ஓயாமல் கூறத் தொடங்கி விட்டாள் ... இன்ஷாஅல்லாஹ்!

ஒரு மாதமாவது அமெரிக்கா போய் மகனுடன் இருந்து விட்டு வர வேண்டுமென்று.


இப்போது மகன் வரும் தகவல் கிடைத்ததிலிருந்து அவளுக்கு கை, கால் ஓடவில்லை. எப்போது மகன் வந்து, தங்களை அவர்களுடன் கூட்டிப் போவான் என்றே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.


ஜமால் வரும் அன்று, திருவனந்தபுரம் விமானநிலையம் சென்று, அவர்களை கூட்டி வர வேண்டும் என்றுதான் தாய் ஆமினாவுக்கு ஆசை.


ஆனால் ஜமால், " அம்மா நீங்க சிரமப்பட வேண்டாம். கஸ்டம்ஸ் கிளியரன்ஸ், மற்ற பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிய நேரமாகும். அதனாலே, நாங்களே வந்துடறோம்..." என்று கூறி விட்டதால், வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் குட்டி போட்ட பூனை மாதிரி நடந்து கொண்டிருந்தாள்.


காலையிலிருந்து சாப்பிடாமல் இருவரும் காத்திருக்க, ஒருவாறு ஜமாலும், ஜரினாவும்.மாலை மூன்று மணிக்கு வீடு வந்து சேர்ந்தனர்...


மோதினார், ""காலையில் இருந்து அம்மா சாப்பிடாம உங்களுக்காக தான் காத்திருக்காள். வாங்கப்பா, சாப்பிடலாம்.'' "இல்லை வாப்பா, நாங்க ஜரினா வீட்டுலியே சாப்பிட்டுட்டோம். அம்மா, 

உன் கையாலே, 

காபி குடும்மா. 

அது போதும்.''


அப்போதுதான், அவர்களுக்கு உறைத்தது, அவர்கள் இருவர் கையிலும் லக்கேஜ் எதுவும் இல்லாதது. மகனையும், மருமகளையும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பார்த்த ஆனந்தத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டனர். பெத்த மனமல்லவா!


ஜரினா தன் கையில் வைத்திருந்த துணி பையை மாமியாரிடம் கொடுத்தாள். அதில் சில சாக்லேட் வகைகளும், ஒரு புடவை ஜாக்கெட், வேட்டி துண்டும் இருந்தது.


ஆமினாவுக்கு பசியில் மயக்கமே வரும் போலிருந்தது.


பார்த்து பார்த்து சமைத்து வைத்திருந்த அத்தனை உணவு வகைகளும் சீண்டுவாரற்று, அங்கே கிடந்தது.


காபி சாப்பிட்ட சிறிது நேரத்தில், ""சரிவாப்பா நாங்க கிளம்பறோம். அங்கே ஜரினா வீட்டுல தங்கிக்கிறோம். நான் அடிக்கடி வந்து பார்த்துக்கறேன். ஒரு மாசம் லீவு இருக்கும்மா,'' கூறியவாறே கிளம்பி விட்டான் ஜமால்.


மறக்காமல், மாமியார் செய்து வைத்திருந்த பிரியாணி மற்றும் அனைத்தையும் ஒன்று விடாமல் உரிமையுடன், "பேக்" செய்து கொண்டு கூடவே கிளம்பி விட்டாள் ஜரினா. சாமர்த்தியகாரியாக மாறிவிட்டவள் அல்லவா !


இவர்கள் இருவரும், அதை ருசி கூட பார்த்திருக்கவில்லை.


இருவருக்கும் மிகவும் வருத்தமாக இருந்தாலும்,  மோதினார் வெளியில் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை.


, அவர்கள் கிளம்பியவுடன் மனம் தாளாமல் புலம்பி தள்ளி விட்டாள் ஆமினா. 

"ஒரே பையன்னு ஆசையா வளர்த்தோம். இப்ப அவன் யாரோ மாதிரி வந்து அரைமணி நேரத்துல ஓடறான். எனக்கு மனசு சங்கடமா இருக்குங்க.''  மோதினார் தான் அவளை பலவாறு தேற்றி பழைய சோறு சாப்பிட வைத்தார்.


இரண்டு நாட்கள் கழித்து, மறுபடியும் வந்த ஜமால், வாப்பாவிடம் மட்டும் பேசினான்.


"வாப்பா, ஜரினாவிற்க்கு, 

அவ அம்மாவை டெக்ஸாசுக்கு கூட்டிக்கிட்டு போய், ஒரு மாசம், கூட தங்க வைச்சுக்க ஆசைப்பா.


அவ அம்மாவும் பாவம், சின்ன வயசிலிருந்து குடும்பம், குழந்தைகள்னு உழைச்சு ஓடாயிட்டா.


அதனால, அவங்களை நாங்க இப்ப கூட்டிக்கிட்டு போகப் போறோம்.


நீங்க எல்லாத்தையும் சரியா புரிஞ்சிப்பீங்க. அதனாலதான், உங்ககிட்ட சொல்றேன்.


அம்மாவுக்கு எப்படியாவது சொல்லி புரிய வைக்கறது உங்க பொறுப்புப்பா.


"அப்புறம்... ஜரினாக்கு தனியா இருக்கிறதுதான் பிடிச்சிருக்குப்பா.


அம்மாவுக்கும், ஜரினாக்கும் ஒத்துப் போகாதுப்பா.


அதனால, நீங்க போன் கூட செய்யாதீங்க. நானே, அப்பப்ப சமயம் கிடைக்கும் போது, உங்களுக்கு போன் செய்றேன்.''


அத்தோடு அமெரிக்கா கிளம்பும் அன்றுதான் இருவரும் வந்து ஐந்து நிமிடம் இருந்து, விடை பெற்றுக் கிளம்பினர்.


அன்று இரவு, "என்னங்க நான் உங்களுக்கு வாழ்க்கைப்பட்டு வந்ததிலிருந்து, எதுக்கும் ஆசைப்பட்டதில்லை.


ஆனால், நம்ம பையன் வெளிநாட்டுக்கு போனதுக்கு அப்புறம், ஒரு மாசமாவது அங்கே போய் இருக்கணும்ன்னு ஆசைப்பட்டேன்.


அது நிராசையாயிடுச்சு சரி, வாங்க தூங்கலாம். நீங்க நாலு மணிக்கு எழுந்து குளிச்சு பள்ளி வாசலுக்கு போகணும்.''


ஆறு மாதங்கள் உருண்டோடிய பின், டெக்ஸாசில் ஒரு நாள்...


என்னங்க, நான் கர்ப்பமாக உள்ளேன் என்று டாக்டர் சொல்லி விட்டார் ... 

பேசாம உங்க அம்மாவை வரவழைச்சா என்னங்க ? பிரசவம் முடியற வரை, இங்கேயே இருந்து, எனக்கு வேண்டியதை சமைச்சு போடட்டுமே.'' என்று ஜரினா தன் கணவன் ஜமாலிடம் கூறுகிறாள்.


"நீ தானே நமக்கு பிரைவசி தேவை, அவங்க... இங்கே வந்தா சரிப்படாதுன்னு சொன்னே. இப்பக் கூப்பிட்டா எப்படி வருவாங்க?'' என்று ஜமால் கூறுகிறான். 


சரி, எனக்கு மனசு சரியில்லை ...

இங்கு புதுசா கட்டப்பட்ட பள்ளி வாசலுக்கு போன வாரம் திறப்பு விழா  நடந்தது இல்ல ... 

அங்கு சென்று வரலாம்


இவர்கள் போன போது அந்த பள்ளி வாசலில் சற்றுக் கூட்டமாக இருந்தது. அப்போதுதான் அஸர் பாங்கு சொல்லப்பட்டது, ஜமாஅத்துடன் அஸர் தொழுகை தொழுது விட்டு திரும்பி பார்த்து அதிர்ந்தான் ஜமால்.


அங்கே நிற்பது யார் ? வாப்பாவா ? 

கண்களை கசக்கி விட்டுக் கொண்டு மீண்டும் பார்த்தான்.


"வாப்பா..." அவனை அறியாமல் வாய் முணுமுணுத்தது.


"கொஞ்சம் இருப்பா. இதோ வரேன்.'' 

அங்கிருந்த இமாம் அவர்களிடம் ஏதோ சொல்லி விட்டு வந்த வாப்பா, "அதோ, அது தான் நம்ம குவார்ட்டர்ஸ் வாங்க, போகலாம்,'' அப்துல்லா மோதினார் முன்னே வந்து நடக்க, பேச்சற்று பின் தொடர்ந்தனர் 

ஜமாலும், ஜரினாவும். 

போனவுடன் வீட்டை பார்த்து அசந்து போய் விட்டான். 

2 பெட் ரூம் ஹால் பிளாட்.


வீட்டில் இவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஆமினா, "தென்காசியில் வாப்பா வேலை பார்த்த பள்ளி வாசல் முத்தவல்லி அவர்களின்  பொண்ணும், மாப்பிள்ளையும் இங்கேதான் இருக்காங்க.


அவர்கள் கட்டிய பள்ளி வாசலுக்கு,  விதிமுறைகள் தெரிந்த மோதினார் வேணும்ன்னு, வாப்பா கிட்ட கேட்டுகிட்டாங்க.


முத்தவல்லி, நீங்க டெக்ஸாசுக்கு கிளம்புங்க.

நான், இங்கே வேறு ஆளை பார்த்துக்கறேன்"னு சொல்லிட்டார்.


"வாப்பாவும் தென்காசிய பிரிய மனமில்லை அல்லாஹ் நாடி விட்டான் என ... மோதினார் பணி எங்கேயிருந்து செய்தா என்னன்னு புறப்பட சொல்லிட்டார்.


இங்கே வாப்பாவுக்கு மாத சம்பளம், ரெண்டு லட்சம் ரூபாய்,'' கட கடவென கூறி முடித்தாள் ஆமினா...


"அம்மா, இப்ப உங்க மருமகள் தாய்மை அடைஞ்சிருக்கா ... அவளுக்கு வாய்க்கு ருசியா சாப்பிடணும்ன்னு தோணுதாம்; அவ அம்மாவுக்கு லக்வா அடிச்சி கிடக்கு , நடக்க முடியாத சூழ்நிலை. நீங்க ரெண்டு பேரும் எங்க கூட பிரசவம் வரை இருந்தா நல்லாயிருக்கும்மா" ரபிக் கூறுகிறான்.


"அது சாத்தியப்படாதுப்பா, வாப்பா வேலை முடிச்ச மீதி நேரத்துல, இங்கே இருக்கிற குர்ஆன் பாடசாலையில் குர்ஆன் சொல்லிக் கொடுக்கிறார். அதுக்கு இங்கே இருக்கிறதுதான் சவுகரியம்.''


"அம்மா ... வாப்பா வரமுடியலைன்னா பரவாயில்லை. நீ மட்டுமாவது வாம்மா.''


இல்லைப்பா வாப்பாவுக்கும் வயசாகிறது. அவரை பார்த்துக்கறதுதான் என் முதல் கடமை.


அது மட்டுமில்லாம, பாடசாலைக்கு தினமும் டீ காபி செய்கிற வேலையும் எனக்கு கொடுத்திருக்காங்க ...


குர்ஆன் கத்துக்கறவங்களுக்கும்மதிய உணவு செய்யும் பொறுப்பும் எனக்கு இருக்கு.


இதுக்காக எனக்கு


ஒரு லட்சம் ரூபாய கிடைக்கிறது.


ஜமால், இவ்வளவு நாள் உனக்காகவே நாங்க ரெண்டு பேரும் வாழ்ந்தோம் ... 

பசியும் பட்டினியுமா இருந்து உன்னை ஆளாக்கி, நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தோம் ... 

இது உனக்கு நன்கு தெரியும். ஆனால், கல்யாணம் ஆனவுடன் உனக்கு நாங்க தேவையற்று போயிட்டோம் ...


கலங்கி நின்ன எங்களுக்கு தொப்புள் கொடி உறவு போனா என்ன, வேற புதிய உறவுகளை ஏற்படுத்தி தர்ரேன்னு, அல்லாஹ் புதிய பந்தங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான்.

இனிமேல், அந்த பந்தங்களை எங்களால விட முடியாது. மேலும் ஜமாத் கஸ்த்னு  சமையல் செய்ய நாங்கள் இருவரும் அடிக்கடி நியூஜெர்சி, கலிஃபோர்னியா செல்வோம். 

அங்கு உள்ளவர்கள் என்னை அழைப்பார்கள். 

இதில் எங்களுக்கு நல்ல வருமானம். 

எங்கள் சேமிப்பு போக மீதம் உள்ளதை தென்காசியில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு அனுப்புகிறோம். பணத்திற்கு இப்போது எங்களுக்கு பஞ்சம் இல்லை. தென்காசியில் நடுபேட்டை தெருவில் ஒரு வீடு வாங்கி உள்ளோம். 

ஒரு காலத்தில் உன் அன்புக்காக ஏங்கி கொண்டு இருந்தோம். 

மூன்று வேளை உனக்கு சாப்பாடு போட்டு விட்டு நாங்கள் பட்டினி கிடப்போம். ஆனால் இப்போது உன்னை பற்றி நினைக்க எங்களுக்கு நேரம் இல்லை.


உனக்கு உதவ முடியாது.


இப்ப மாலை நேரம் நெருங்கிடுச்சு ... 

நான் போய் டீ காபி போட்டு கொடுக்க வேண்டும் என்று கூறி அரக்க பறக்க கிளம்பினாள் ஆமினா. ...


போகும்போது ஜரினாவிடம், "எங்களுக்கு பல பணக்கார பெண்களின் சமந்தம் வந்தது. ஆனால் நீ எழை குடும்பத்தில் பிறந்தவள் , எங்களை எல்லாம் கை விட மாட்டாய் என்று நினைத்து ஏமாந்து போய் விட்டோம். என் மகனை இப்படி மாற்றி விட்டாய். அவனை உனக்கு அடிமையாக்கி விட்டாய். நாளைக்கு உனக்கும் ஒரு மகன் பிறப்பான், பிற்காலத்தில் உங்களையும் இப்படி நடத்துவான். 

இறைவன் உனக்கு தக்க தண்டனை கொடுப்பான்" ... மாமியாரின் அனல் பறக்கும் பேச்சு அவளை ஈட்டியால் குத்துவது போன்று இருந்தது.


மகனிடம் "போகும் போது வாப்பாவிடம் எதுவும் பேசாதே, அவர் எரிமலை போல் வெடித்து விடுவார். எதுவும் பேசாமல் கிளம்பு ... 

அப்புறம் நீ அடிக்கடி இங்கு வருவது அவருக்கு பிடிக்கவில்லை. 

என்னை பார்ப்பது என்றால் எனக்கு போன் பண்ணிவிட்டு வா சாப்பாடு போட்டு அனுப்புகிறேன்" ...


ஆமினா பொரிந்து தள்ளி விட்டு கிளம்பி விட்டாள். 


பெற்றவர்களின் அன்பை உணர முடியாமல், மனைவியின் சுயநல போக்கிற்கு அடிமையாகி, அவர்களை உதாசீனப்படுத்தி இப்போது, அதே அன்பிற்கு ஏங்கிய ஜமால், சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த வாப்பாவின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கக் கூசி, அங்கிருந்து தன் மனைவியுடன், தளர்ந்த நடையுடன் வெளியேறினான் ...

ஜமாலுக்கும், ஜரினாவுக்கும் தலை சுற்றுகிறது. 

ஜரினாவுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது. 

உம்மாவின் பேச்சு அவர்கள் இருவருக்கும் சாட்டையால் அடிப்பது போல் இருந்தது ...


வைராக்கியம் உள்ள வாப்பா அவர்களை பார்க்காமல், கண்டு கொள்ளாமல் குர்ஆன் ஓதிக்கொண்டு இருந்தார் ... !


கருத்துகள்