திங்கள், மார்ச் 02, 2020

துஆவின் சிறப்பும், மதிப்பும் 🌙👍

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

துஆ முஃமின்களுக்கு ஒரு பெரிய ஆயுதம்! துஆ கேட்கும் அடியார்களை அல்லாஹ் விரும்புகிறான். துஆ கேட்காத அடியார்களை அல்லாஹ் கோபப்படுகிறான் என்று ஒரு ஹதீஸின் கருத்து:

''உங்கள் இறைவன் கூறுகிறான்: நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்)என்னிடமே கேளுங்கள். நான் உங்கள் பிரார்த்தனையை அங்கீகரித்து கொள்வேன் . எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றாரோ அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள்.'' (அல்குரான் 40-60)

(நபியே!) உம்மிடம் என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீர் கூறுவீராக:) ''நிச்சயமாக நான் உங்களுக்கு சமீபமானவன் (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன், ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும் என்னையே நம்பிக்கை கொள்ளவும்.(அதனால்) அவர்கள் நேர்வழி அடைவார்கள். (அல்குரான் ;2-186)

நபி (ஸல்) கூறினார்கள்: ''துஆ தான் வணக்கமாகும்.'' உங்களது இறைவன் கூறுகின்றான்: ''என்னை அழையுங்கள் நான் உங்களுக்கு பதில் தருகிறேன்.''
(ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதி)

இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களது இறைவன் மிக வெட்கமுள்ளவன், சங்கை மிக்கவன் தனது அடியான் இரு கரங்களையும் தன் பக்கம் உயர்த்தி பிராத்தனை செய்யும்போது அவனது கைகளை காலியாக திருப்புவதைக் கண்டு அவன் வெட்கமடைகிறான்.
(ஸஹீஹுல் ஜாமிஃ வுஸ் ஸகீர் )

மேலும் கூறினார்கள்: பாவம் அல்லது உறவை முறிப்பது இவை இன்றி ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்தால் அல்லாஹ் மூன்றில் ஒன்றை நிச்சயமாக அவருக்கு வழங்குவான். ஒன்று அவனது அழைப்பு உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படும்.அல்லது மறுமையில் அவருக்கு நன்மை வழங்கப்படும்.அல்லது அவர் கேட்ட நன்மைக்கு சமமாகவுள்ள தீங்கை அல்லாஹ் அகற்றி விடுவான்.

இதைக் கேட்ட தோழர்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அப்படியானால் நாங்கள் அதிகமதிகம் துஆ கேட்டுக் கொள்கிறோம் எனக் கூறினார்கள். அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் அதைவிட அதிகமதிகம் வழங்கக்கூடியவன்.
சஹீஹுத் திர்மிதி) 

துஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்கப்படுவதற்கான காரணங்கள் 

* அல் இக்லாஸ் (மனைத்தூய்மை) அல்லாஹ்வின் திருப்தியையும் பொருத்தத்தையும் மட்டும் நாடவேண்டும்  .

* துஆவின் ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வைப் புகழவேண்டும் .நபியின் மீது  ஸலவாத்தும் கூறவேண்டும்.

* உறுதியான வாசங்களைக் கொண்டு துஆ கேட்க வேண்டும். அது அங்கீகரிக்கப்படும் என்று நம்பிக்கை வைக்கவேண்டும்.

* தொடர்ந்து கெஞ்சிக் கேட்கவேண்டும். அவசரம் கூடாது.

* துஆவில் மன ஓர்மை இருக்கவேண்டும்.

* சுகம், துக்கம், வசதி, நெருக்கடி  என எல்லா நிலைமைகளிலும் துஆ கேட்கவேண்டும்.

* அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கவேண்டும்.

* உறவினர், செல்வம் பிள்ளைகளுக்கு எதிராகவும் தனக்கு எதிராகவும் துஆ கேட்கக் கூடாது.

* துஆ கேட்கும்போது மிகவும் தாழ்ந்த குரலுமின்றி , உரத்த சப்தமுமின்றி நடுத்தரத்தில் கேட்கவேண்டும்.

* தன் பாவங்களையும் குற்றங்களையும் ஒப்புக் கொண்டு அதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். அல்லாஹ்வின் அருட்கொடைகளை ஏற்றுக் கொண்டு அவற்றிற்கு நன்றி செலுத்தவேண்டும்.

* துஆ கேட்கும்போது வாசகக் கோர்வைக்காக சிரமம் எடுத்துக் கொள்ள கூடாது.

* துஆவில் பணிவு, பயம் , நடுக்கம் , ஆர்வம் ஆகியவை இருக்கவேண்டும்.

* உரிமைகளை உரியவர்களிடம் ஒப்புடைத்து விடவேண்டும் .

* ஒவ்வொன்றையும் மும்மூன்று முறை கேட்கவேண்டும் .

* கிப்லாவை முன்னோக்க வேண்டும். கைகளை உயர்த்தி கேட்கவேண்டும்.

* முடிந்தால் துஆ கேட்பதற்கு முன் உளு செய்து கொள்ளவேண்டும்.

* துஆ கேட்பதில் எல்லை மீறக்கூடாது .

* பிறருக்கு துஆ செய்யும்போது முதலில் தனக்கு செய்து கொள்ளவேண்டும். (ஆனால் இது  கட்டாயம் அல்ல )

* அல்லாஹ்விடம் வஸீலா தேடவேண்டும். அதாவது, அவனது அழகிய பெயர்கள் மற்றும் பண்புகளைக்  கொண்டு அவனைப் புகழ்ந்து கேட்பது அல்லது தான்  செய்த ஒரு நற்செயலைக் கூறிக் கேட்பது. அல்லது தனக்கருகில் உயிர் வாழும் நல்லவர் ஒருவர் தமக்காக கேட்ட துஆவைக் கூறிக் கேட்பது. உதாரணமாக ''அல்லாஹ்வே! இன்னவர் எனக்காக உன்னிடம் துஆ கேட்ட துஆவை என் விஷயத்தில் ஏற்றுக்கொள் என்று கேட்பது.

* உணவு , குடிப்பு , ஆடை ஹலாலாக இருக்கவேண்டும்.

* துஆவில் பாவமான காரியத்தையோ உறவை முறிக்கும் விஷயத்தையோ கேட்கக் கூடாது.  துஆ கேட்பவர் நன்மையை ஏவுபவராகவும் தீமையை தடுப்பவராகவும் இருக்கவேண்டும். எல்லாப் பாவங்களையும் விட்டும் விலகி இருக்கவேண்டும்.

நன்றி : DARUL HUDA
சத்திய பாதை இஸ்லாம் .
இன்ஷாஅல்லாஹ் துஆவை தொடர்ந்து '' துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள், நிலைமைகள் மற்றும்  இடங்கள் பற்றி பார்ப்போம் ...

தமிழ் இஸ்லாமிய போஸ்டர் பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
TAMIL ISLAM POSTER

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!