அல்லாஹ்வின் திருபெயரால் ..........
எல்லாப் புகழும் அனைத்துலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கே உரியன !
நிச்சயமாக என் தொழுகையும் , என் தியாகமும் , என் வாழ்வும் , என் மரணமும் அகிலத்தின் அதிபதியாம் அல்லாஹ்வுக்கே அர்ப்பணமாகும் .
அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உம்முஸ்சாயிபி (ரலி) என்ற ஒரு சஹாபிய பெண்மணி இருந்தார்கள். அவர்களுக்குக் கடுமையான ஜுரம் (காய்ச்சல் ) ஏற்பட்டு இருந்தது. இதைக் கேள்விப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியை நலம் விசாரிக்கச் சென்றார்கள் .
அப்பெண்மணியின் இல்லத்தில் சென்று பார்க்கும்போது அவர் நடுநடுங்கிக் கொண்டு இருந்தார் . ""உமக்கு என்ன செய்கிறது ? ஏன் இப்படி நடுங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் ? என்று நபியவர்கள் வினவினார்கள் . எனக்கு ஜுரம் வந்திருக்கிறது . அல்லாஹ் அதை நாசமக்கட்டும் " என்று திட்டினார் அப்பெண்மணி. இதனைக் கேட்ட நபியவர்கள் "ஜுரத்தைத் திட்டாதீர்கள் . ஏனென்றால் நெருப்பு இரும்பில் உள்ள துருவை நீக்கி விடுவதைப் போல ஜுரம் மனிதனுடைய பாவத்தைப் போக்கி விடும்" என்று கூறினார்கள் .
எச்சரிக்கையும் , ஆறுதலும் கலந்த இந்தச் சம்பவக் குறிப்பு "முஸ்லிம் " நபிமொழிக் கிரந்தத்தில் இடம் பெற்றுள்ளது.
நோய் ஒரு நன்மை
நோயும் நலமும் மனித வாழ்வில் இயற்க்கை . நோயிக்கு வயது வரம்போ, ஆண் , பெண் பால் வகையோ ,இருப்பவன் இல்லாதவன் என்ற பாகுபாடோ தெரியாது . யாரையும் கேட்டு வருவதோ போவதோ இல்லை. அதே போல் பிறந்தது முதல் இறப்பது வரை நோயாளியாகவே வாழ்ந்தவரும் இல்லை. பிறந்தது முதல் இறப்பது வரை நோயே இல்லாமல் வாழ்பவரும் இல்லை. ''உடலில் காய்ச்சல் , ஏற்பட்டால் காலில் முள் குத்தினாலும் அது இறைவனின் அருளாகும் . அதன் மூலம் நமது பாவங்கள் மன்னிக்கப்படும் '' என்று நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் அருமைப் பேரர் இமாம் வீரர் ஹூஸைன் [ரலி] அவர்கள் மொழிந்துள்ளார்கள்.
நோய் வந்து விட்டதற்காக இறைவனைத் திட்டித் தீர்ப்பவர்களும் உண்டு. வந்து இருக்கும் நோயையே ஏசிப் பேசுபவர்களும் உண்டு. இது ஒரு அறியாமை ஆகும். ஆதம் நபி [அலை]அவர்கள் முதல் நபிமார்கள், நாதாக்கள், வலிமார்கள், உலமாபெருமக்கள், பெரியோர்கள் , புனிதர்கள் அனைவருமே நோய்வாய்ப்பட்டு இருக்கும் நிலையில் வாழ்ந்து இருக்கிறார்கள்.
நோயும் தவ்பாவும்
சிலரின் மரணத்திற்கு நோயே காரணமாகும் அமைந்து விடுகிறது . எந்த நிலையில் நோய் வந்தாலும் அதை சபிப்பது கூடாது. அந்த நோய்க்குரிய மருத்துவத்தைச் செய்து கொண்டு இறைவனிடம் பிரார்த்தித்துப் பொறுமையுடன் இருப்பதே நமது பண்பாடு ஆகும். திடீரென்று ஏற்படும் அகால மரணத்தை விட்டும் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அகால மரணம் ஏற்படும்போது நமது பாவங்களை எண்ணி மனம் வருந்தும் நிலையோ அதற்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்கும் வாய்ப்போ இல்லாமல் போய் விடுகிறது. மரணத்திற்குச் சில நாட்களுக்கு முபாவது ஏதேனும் நோய் ஏற்பட்டால் மரண சிந்தனை மனதிலே வந்து இறை அச்சத்தோடு பாவ மன்னிப்புத் தேடிக் கொள்ளலாம். வாழ்வில் ஏற்பட்ட சறுக்கல்களை திருத்தி சரி செய்து கொள்ளலாம் . பிற மனிதர்களை இணக்கமாக்கி கொள்ளலாம் . மரணத்திற்கும் மறுமைக்கும் உள்ள தயாரிப்புகளைத் தேடிக் கொள்ளலாம். இம்மையின் கடமைகளில் இருந்து நிம்மதியாக விடை பெற்றுக் கொள்ளலாம். எத்தனை எத்தனையோ காரியங்களுக்கு நோய் உதவுகிறது அல்லவா? எனவே நோயும் ஒரு அருட்கொடையே !
மருந்தும் குணமும்
எந்த நோயையும் மருந்து இன்றி இறைவன் ஏற்படுத்துவது இல்லை. நோயைப் படிப்பதற்கு முன்பே அதற்குரிய மருந்தை இறைவன் படைத்து விடுகிறான். அதைத் தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பில் மனிதன் தாமதமாகி விடுகிறான் . மரணத்திற்கும் , முதுமைக்கும் மட்டுமே உலகில் மருந்து கிடையாது . அனைத்து நோய்க்கும் நல்ல அருமருந்து உண்டு . மருந்து சாப்பிடுவது சுன்னத்தாகும் ! நம்பிக்கை இறைவன் மீது வைக்க வேண்டும் . சிலர் வழக்கமாக கூறும் பழக்கம் உண்டு ''இன்ன இன்ன மருத்துவர்ரிடம் சென்றால் குணம் ஆகிவிடும் அவர் ராசியான மருத்துவர் என்று '' . ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு நேரம் உண்டு . நோய் குணமாகும் நேரம் வந்து விட்டால் , இறைவன் குணப்படுத்த நாடிவிட்டால் என்றால் , அந்த நோயின் குணம் ஆகிவிடும் . அந்த நேரத்தில் இப்படி கூறுவார்கள்'' இந்த மருத்துவரிடம் வந்ததனால் என்று '' இதுவும் இப்படு கூறுவதும் தவறாகும் .
கல்வியும் ,அறிவும் , விஞ்ஞானமும் , மருத்துவமும் நிறைந்த இந்த நாகரீக காலத்திலே கூட சில குடும்பங்களில் மூட நம்பிக்கை மலிந்து காணப்படுகிறது .அதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம் ....''அம்மை வாத்தல் '' இது ஒரு தோல் நோய் . யாருக்காவது இது வந்து விட்டால் .அல்லாஹ் நம் ஈமானை காப்பத்த வேண்டும்! மூட நம்பிக்கைகள் சொல்லிமாளாது . இதற்க்கு காரணம் பெண்கள்தான்! இஸ்லாமியப் பெண்ணாக வாழுங்கள்! மூடநம்பிக்கைகளுக்கு இஸ்லாத்தில் இடம் இல்லை. சிலர் இன்னும் அறியாமைக் காலத்தில் இருந்து கொண்டுதான் வருகிறார்கள். தூய்மையான உண்மையான மார்க்கத்தை உடைய நாம் . மூடத்தனமான மவ்ட்டீகமான வழிமுறைகளைச் செய்யலாமா? இதனால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? இதனால் ஏற்படும் இஸ்லாமிய பாதிப்புகள் அநேகம் உண்டு தெரியுமா ?
இஸ்லாமிய மருதுவங்களையும் இறை திருவசனத்தின் மீதுள்ள நம்பிக்கையிலும் உலக மக்கள் அனைவரும் திசை திரும்பி நிற்கும் இந்தக் காலத்தில் சில குடும்பப் பெண்கள் அஞ்ஞா ன காலப் பழக்க வழக்கத்திலேயே ஊறிப் போய் கிடக்கிறார்கள். அதனால் இறை நம்பிக்கை கூட இற்றுப்போய் விடுகிறது என்பதை அறியாமலேயே மாற்றமான காரியங்களைச் செய்து கொண்டு இருக்கிறார்கள் . கொஞ்சம் கண் திறந்து பாருங்கள் அன்பு சகோதரிகளே! நமது இறைவன் , நமது வேதம், நமது மார்க்கம் எல்லாமே உண்மை. இதைப் பின்பற்றி நடந்தால் எந்த ஏமாற்றமும் நம்மைக் கெடுத்து விடாது . இதைக் கை விட்டு விட்டால் இறைவன் கூட நம்மைக் காப்பாற்ற மாட்டான் என்பதை உணர்ந்து செயல்படுவோம்!
அல்லாஹ் மிக அறிந்தவன்.
நோயை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோம் ! அப்படி நோய் வந்தால் அல்லாஹ்வுக்காக பொறுமைக் காப்போம் ! அதிக நன்மையை பெறுவோம் .
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!