லண்டனில் வசிக்கும் ஒரு முஸ்லிம் தான் குடியிருக்கும் இடத்திலிருந்து வேலை செய்யும் இடத்திற்கு தினமும் பேருந்தில் பயணம் செய்வார், குடியிருக்கும் இடத்திற்கு புதிதாக வேலை மாற்றலாகி வந்திருந்தார் அவர்.
பேருந்தில் சில நாட்களில் அதிகமான பயணிகள் இருப்பார்கள்; சில நாட்களில் ஒருசிலர் இருப்பார்கள். ஆனாலும் தொடர்ந்து அவர் ஒரே பேருந்தில் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்தார்.
சில வாரங்கள் கடந்தன
இந்நிலையில் ஒருநாள் வேலைக்குச் செல்வதற்காக பேருந்தில் ஏறியவர் கட்டணத்தை கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தார்; ஓட்டுனர் அவர் தந்த தொகையிலிருந்து தேவையான தொகையை எடுத்துக்கொண்டு மீதி தொகையை கொடுக்கும் போது 20 பென்சை (இங்கிலாந்து நாணயம்) அதிகமாகத் திருப்பிக் கொடுத்தார்.
வாங்கிக்கொண்ட அந்த முஸ்லிமுடைய உள்ளத்தில் சிறிய சலனம் ஏற்பட்டது; அதிகமாக தந்த தொகையை திருப்பித் தருவதா, வேண்டாமா? என்று. ஏனெனில் கட்டணத்தைவிட அதிகத் தொகை அவருக்கு உரியதல்லவே, அதனால் அவர் யோசிக்க ஆரம்பித்தார். திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்.
பிறகு அவர் மீண்டும் யோசித்தார்: இது சிறிய விஷயம், தொகையும் மிக சிறியது, யாரும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள், பேருந்து நிறுவனத்திற்கு இதனால் எந்த இழப்பும் ஏற்படாது; அவர்கள் அதை பொருட்படுத்த மாட்டார்கள், இதை நாமே வைத்துக்கொள்வோம்; நாம் விரும்பாமலே இறைவனால் நமக்கு தரப்பட்ட அருட்கொடை என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டார்.
அவர் இறங்கவேண்டிய இடம் வந்தது, அவர் இறங்குவதற்காக முற்பட்ட பொழுது சிறிது யோசித்தார்;
உடனே தன்னிடத்தில் இருந்த அதிகப்படியான 20 பென்ஸ்களை ஓட்டுனரிடம் கொடுத்தார்; மேலும் சொன்னார்: எனக்கு நீர் தர வேண்டியதை விட அதிகமான தொகையை தந்து விட்டீர்; எனவே இதை வாங்கிக் கொள்ளுங்கள்! என்றார்.
தொகையை வாங்கிக் கொண்ட ஓட்டுநர் புன்னகை புரிந்தவாரே அவரிடத்தில் கேட்டார்: நீர்,இந்தப் பகுதியில் புதிதாக வந்த முஸ்லிம் தானே? நான் சிறிது காலமாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக உங்களுடைய பள்ளிவாசலுக்குச் செல்வதற்கு யோசித்துக் கொண்டிருந்தேன்;
இந்நிலையில் உம்மிடம் தந்த இந்தத் தொகையை நான் அறியாமல் தரவில்லை. ஒரு முஸ்லிமுடைய பண்பு எப்படிப்பட்டது? இந்த பணத்தை பெற்றுக் கொண்ட நீர் எப்படி நடந்து கொள்வீர்? என்பதை நான் அறிய வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே தந்ததுதான், என்று சொன்னார்.
ஓட்டுனரின் இந்த வார்த்தைகளை கேட்ட பின் பேருந்திலிருந்து இறங்கியவரின் கால்கள் பலவீனமடைந்து, தள்ளாட ஆரம்பித்தன; கீழே விழாமல் இருப்பதற்காக அருகிலிருந்த பேருந்து நிலைய தூணைப் பிடித்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
அவருடைய கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது; எனக்கு ஏற்பட்ட கைசேதமே! சில நொடிகளில் 20 பென்ஸுக்காக எனது இஸ்லாத்தை நான் விற்க இருந்தேனே, இறைவா என்னை காப்பாற்றி விட்டாய் என்று புலம்பி அழுதார்.
(இந்தச் சம்பவம் அரபு பத்திரிகையில் வந்தது, எனக்கு டெலிகிராமில் நண்பர் அனுப்பி வைத்தார்.)
இது ஒரு சிறிய சம்பவம்; நம்முடைய வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றன. இந்த சம்பவத்தின் நாயகர்களாக நாம் இருந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு எளிய உதாரணம் இந்த சம்பவம்.
பல சமயங்களில் இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்கள் அறிவதற்கு நாமே சாளரங்களாக (ஜன்னல்களாக) இருக்கிறோம்;
நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக, முன்னுதாரணமாக இருப்பது கடமை என்பதை இந்தச் சம்பவம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நம்பிக்கையாளர்களாக, உண்மையாளர்களாக நாம் பார்க்கப்படுகிறோம் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
எல்லாவற்றிற்கும் மேலாக ஒப்பற்ற இஸ்லாத்தை தந்த இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான், என்ற அச்ச (தக்வா) உணர்வும் நம்மிடம் இருக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
اِنَّ الَّذِيْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰۤٮِٕفٌ مِّنَ الشَّيْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَ
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள். (7:201)
நபி ஸல்... அவர்கள் கூறினார்கள்: “நான் கொண்டு வந்ததற்கேற்ப தனது மன விருப்பங்களை மாற்றிக் கொள்ளாதவரை உங்களில் ஒருவரும் விசுவாசியாகமாட்டார்.( புகாரி,முஸ்லிம்)
நபி ஸல்... அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களே! நீங்கள் அனைவரும் உங்களின் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப்பற்றி விசாரிக்கப்படுவீர்கள். ( புகாரி)
அல்குர்ஆன்சிந்தனைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Welcome to your comment!