விரக்தி விஷத்தை விட கொடியது


முஹம்மத் பகீஹுத்தீன்


நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை.


எல்லாக் கதவுகளும் மூடப்படும் போது ஒரு படபடப்பு ஏற்படும். இதயம் கனக்கும். உள்ளம் நடுங்கும். விரிந்த பூமி சுருங்கி விட்டதாக தோன்றும். இருள்படர்ந்த வாழ்வில் இனி ஒளியேது என்று எண்ணத் தோன்றும். இதற்கு மேல் என்னால ஒன்றும் செய்ய முடியாது என்று ஆகிவிடும் .


கவலைப்படாதே தோழா! இதுதான் இறை உதவி வரும் நேரத்திற்கு அறிகுறி. முன்னால் கடல், பின்னால் படை, இனி என்ன செய்வது என்று ஒன்றும் புரியாத அந்த இக்கட்டான நேரத்தில் தான் மூஸாவிற்கு (அலை) கடல் பிளந்து வழி தந்தது.


பத்துக் கதவுகளும் மூடப்பட்ட நிலையில் தான் யூசுப் (அலை) மீது பழி சுமத்தப்பட்டது. ஆனால் கந்தல் ஆடை அவருடைய கற்பை காப்பாற்றும் ஆதாரமாக வந்தது.


இறை உதவி எந்த வடிவில் எப்படி வரும், எப்போது வரும் என்று யாராலும் கற்பனை பண்ணவே முடியாது.


உனது முயற்சிகள் தோல்விகண்டு நெஞ்சம் கனக்கும் போது, வலிகள் முள்ளாய் உன்தன் நெஞ்சில் குத்தும் போது நீ மனம் தளர்ந்து விரக்தி அடையலாம். இயலாமை உன்னை வாட்டி வதைக்கலாம். உனது அயராத உழைப்பும் அர்ப்பணமும் வீண்போகுதே என்று எண்ணத் தோன்றலாம்.


இந்த கசப்பான உணர்வு தான் இறைவன் பால் தஞ்சமடைவதற்கான நேரம் வந்து விட்டது என்ற செய்தியை தருகிறது.


இது பலவீனமான மனிதன் தன் இயலாமையை படைத்த ரப்பிடம் முறைப்பாடு செய்யும் தருணமாகும். நான் என்ற அகந்தையை வெளியேற்றி இனி நீதான் எல்லாம் என உன் உள்ளத்தை அறிந்த அல்லாஹ்விடம் உன்னை கொடுத்து விடு.


இதுகாலவரை அயராது பாடுபட்ட உன் உழைப்பு, பெரும் எதிர்பார்போடு முன்னெடுத்த முயற்சிகள் யாவற்றையும் மறந்து நீ எதுவும் செய்யாதது போல் அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டிவிட்டு அவனிடம் சரணடைந்து விடு. அதுதான் நபிகளார் காட்டிய உண்மையான தவக்குல்.


நிச்சயமாக எஜமானாகிய அல்லாஹ் இன்பத்திலும் துன்பத்திலும் அடியானுக்கு உதவுவான். அந்த நம்பிக்கையில் உறுதியாக இரு.


நடந்து முடிந்தவை யாவும் நன்மைக்கே என்று நம்பு. நீ கனவிலும் நினையாத புறத்தில் இருந்து அல்லாஹ் உனக்கு ஒரு வழி காட்டுவான். எனவே ஒருபோதும் வாழ்க்கையில் நம்பிக்கை இழக்காதே.


நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடாவிட்டாலும் நீ புரியாத வழியில் உனக்கு அல்லாஹ் உதவுவான். இறைவனுடைய வாக்குகள் நிச்சயமாக நிறைவேறும் என்று அசையாத நம்பிக்கை கொள்.


விரக்தி விஷத்தை விட கொடியது. அது உன் நம்பிக்கையை கொன்று விடும். துயரங்கள் வரும் போகும். கவலைகளை மறந்து விடு. காரியம் செய்ய துணிந்து விடு.


உலக வாழ்வில் எதுவும் பூரணமாக முடியாது. இம்மை ஒரு பாதி, மறுமை மறு பாதி. ஆட்டத்தின் முடிவை மறுமையில் எதிர்பார். அது முழுமையானது.


இன்பம் துன்பம் இரண்டும் மாறி மாறி வரும். நிச்சயமாக இரவுக்கு பகலும் வரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!

| Designed by Colorlib