நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்:

 


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்:

“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்கொடைகளின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. உடல் நலம், 2. ஓய்வு என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்கள்: புகாரி : 6412, திர்மிதீ: 2226)

இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் நோயற்ற வாழ்வும், கவலையற்ற நிலையும் மிகப் பெரும் அருட் செல்வங்களாகும்.

நோயற்ற வாழ்வையே ஆரோக்கியம் என்றும் கவலையற்ற நிலையையே ஓய்வு என்றும் மேற்கண்ட ஹதீஃதிலிருந்து விளங்குகிறோம். உடல்நலம், ஓய்வு என இறைவன் வழங்கிய இந்த இரு அருட்கொடைகளையும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விடுவதால் மனிதர்களில் பெரும்பாலோர் இழப்புக்குள்ளாகி விடுகின்றோம்.

திருக்குர்ஆன் 102வது அத்தியாயம் முதலிரு வசனங்களின் கருத்துப்படி அதிகமானப் பொருளீட்டும் ஆசையில் உடல் நலத்தைப் பேணுவதை ஊதாசீனப்படுத்தி விடுகின் றோம். பொருட்செல்வங்கள் மட்டுமே வாழ்வில் பிரதானத் தேவை எனக் கருதி ஓயாத உழைப்பு அதனால் விளையும் தொடர் மன உளச்சல் என உடலுக்கும், மனதுக்கும் ஓய்வளிக்கத் தவறி விடுகின்றோம்.

இதற்கான தீர்வு :

“(செல்வத்திலும் அழகிலும்) உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் உங்களுக்கு புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி), நூல்கள்: முஸ்லிம்: 5671,திர்மிதீ: 2437)

பொருளாதார மேம்பாட்டில் தம்மை விட செல்வந்தராக இருப்போரைப் பார்த்து, அவரைப் போன்று அல்லது அவரை விடக் கூடுதலாக நாமும் பொருட் செல்வங்களை சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணாமல், தம்மை விட கீழிருப்பவர்களைப் பார்த்து, “அல்ஹம்துலில்லாஹ்” பொருளாதார மேம்பாட்டில் அல்லாஹ் இவர்களை விட நம்மை மேன்மையாக்கி, நமக்கு வழங்கிய அருட்கொடைகளை விசாலமாக்கியிருக்கிறான் என்று தன்னிறைவு பெறவேண்டும் என்பதே மேற்கண்ட ஹதீஃதின் விளக்கமாகும்.

செலவு :

“எவர் அணுவளவேனும் நன்மை செய்தாலும் அவர் அதனைக் கண்டு கொள்வார். எவர் அணுவளவேனும் தீமை செய்தாலும் அவன் அதனைக் கண்டுகொள்வான்”
(அல்குர்ஆன்: 99:7,8)

“மறுமை நாளில் ஓர் அடியானின் (பின்வரும் விஷயங்கள் குறித்து) விசாரணை செய்யப்படுவதற்கு முன் அவனுடைய பாதங்கள் (நின்ற இடத்திலிருந்து) நகர முடியாது”.

ஒன்று : அவன் வாழ்நாள்: அதை எவ்வாறு கழித்தான்?

இரண்டு : அவன் கற்ற கல்வி: அதைக் கொண்டு எவ்விதம் செயல்பட்டான்?

மூன்று : அவன் பொருளாதாரம்: அதை எங்கிருந்து திரட்டினான்?

நான்கு : அ(ந்தப் பொருளாதாரத்)தை எவ்வழியில் செலவிட்டான்?

ஐந்து : அவன் உடல்: அதை எதில் ஈடுபடுத்தினான்? என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூபர்ஸா (ரழி), நூல்: திர்மிதீ: 2341)

ஆயுள், இளமை, உடல்நலம், செல்வம், கல்வி என இவை இறைவன் மனிதனுக்கு வழங்கிய மிகப்பெரும் அருட்கொடைகளாகும். உயிர், உடல், பொருள், அறிவு, ஆற்றல், வளர்ச்சி, முன்னேற்றம் என எதை எடுத்துக் கொண்டாலும் அனைத்தும் மனிதனுக்கு இறைவன் கொடுத்த அருட்கொடைகள்.

அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்றவன் அவற்றைக் கொடுத்தவனின் அன்புக்கும், ஆணைக்கும் ஏற்ற வழிகளில் பயன்படுத்திட வேண்டும், செலவிட வேண்டும். சரியான வழிகளில் மனிதன் இயங்குகின் றானா என்பதை ஒவ்வொரு கணமும் இறைவன் கண்காணிக்கின்றான். மனிதனின் ஒவ்வோர் அசைவும் பதிவு செய்யப்படுகின்றது. பதிவேடு பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது.

“அல்லாஹ் கணக்கு கேட்பதில் – விசாரணை செய்வதில் தீவிரமானவன், துரிதமானவன் என்ற கருத்தில் அநேக வசனங்கள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.

செலவும், சிக்கனமும் :

மறுமையில் விசாரணை நடக்கும் தீர்ப்பு நாளில் மனிதன் தன்னுடைய ஒவ்வோர் செயலுக்கும் அவன் கற்ற ஒவ்வோர் எழுத்துக்கும் சம்பாதித்த ஒவ்வொரு காசுக்கும் செலவு செய்த ஒவ்வொரு வினாடிக்கும் அவற்றை எவ்வழியில் ஈட்டினான் எவ்வழியில் பயன்படுத்தினான் என்பதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

பொய்யுரைக்க முடியாது, அவனது பதிவேடு அவனைக் காட்டிக் கொடுத்துவிடும். அவ னது உறுப்புகள் அவனுக்கு எதிராகச் சாட்சியம் சொல்லும், தப்பிக்கவோ சமாதானம் கூறவோ முடியாது.

“நீங்கள் நல்லவற்றில் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே! அல்லாஹ்வின் (சங்கையான) முகத்தை நாடியன்றி நீங்கள் செலவிடவேண்டாம். (2:272)

“நீங்கள் நேசிப்பவற்றிலிருந்து, (நல்லறங்களுக்கு) செலவு செய்யாத வரையில் நீங்கள் நன்மையை அடைந்து கொள்ளமாட்டீர்கள். நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதை அல்லாஹ் நன்கறிந்தவனாவான்” (3:92)

“நயவஞ்சகர்கள் ஆண்களும், பெண்களும் அவர்களில் சிலர் மற்றும் சிலரைச் சார்ந்தோரே! அவர்கள் தீமையை ஏவி நன்மையை விட்டும் தடுக்கின்றனர். (நல்லறங்களில் செலவு செய்யாமல்) தமது கைகளைப் பொத்திக் கொள்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வை மறந்தனர். அதனால், அவனும் அவர்களை மறந்து விட்டான்”  (9:67)

“மக்கள் புகழ்ச்சிக்காகத் தங்கள் செல்வங்களைச் செலவிடக்கூடாது” (4:38 வசனத்தின் கருத்து)

திருக்குர்ஆன் வசனங்களின் கருத்துப்படி, அல்லாஹ் அடியார்களுக்கு வழங்கிய செல்வங்களை அல்லாஹ்வுக்காக செலவும் செய்ய வேண்டும். சிக்கனத்தையும் பேண வேண்டும்.

கையை இருக்கவும் வேண்டாம், விரிக்கவும் வேண்டாம் :

“(நீர் செலவு செய்யாது) உமது கையை உமது கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர். மேலும், (அனைத்தையும் செலவு செய்து) அதனை முழுமையாக விரித்து விடவும் வேண்டாம். அவ்வாறாயின், நீர் இழிவுபடுத்தப்பட்டவராகவும், கைசேதப்பட்டவராகவும் ஆகிவிடுவீர்” (அல்குர்ஆன்: 17:29)

கஞ்சத்தனம் செய்தால் மக்களால் தூற்றப்படுவர், சக்திக்கு மீறி அனைத்தையும் செலவு செய்தால், மேற்கொண்டு செலவழிக்க ஏதுமின்றி கைசேதப்பட்டவராய் முடங்கி நிற்க வேண்டும்.

கருமித்தனமாக கையை மூடி வைத்துக் கொள்ளவும் வேண்டாம். ஊதாரித்தனமாக கையை விரித்து அனைத்தையும் செலவு செய்திடவும் வேண்டாம். “செலவும் செய்ய வேண்டும், சிக்கனம் பேணி சேமித்தும் வைக்கவேண்டும்” என்பதே மேற்கண்ட வசனத்தின் கருத்தாகும்.

நபிமொழி :

“நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர்(ரழி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் என்னிடம் இல்லை. அதை நான் தர்மம் செய்யலாமா? என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், தர்மம் செய். கஞ்சத்தனமாக பையில் (சேகரித்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் உன்னிடமும் கஞ்சத்தனம் காட்டப்படும் என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: செலவழி கணக்கிட்டு(செலவழித்து)க் கொண்டிருக்காதே! (அப்படிக் கணக்கிட்டு நீ செலவழித்தால்) அல்லாஹ்வும் உனக்கு (தரும்போது) கணக்கிட்டு(தந்து) விடுவான். கஞ்சத்தனமாகப் பையில் (சேர்த்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் உன்னிடம் கஞ்சத்தனமாக நடந்து கொள்வான். (அறிவிப் பாளர்: அஸ்மா(ரழி) நூல்கள் : புகாரி : 2590,2591, முஸ்லிம்: 1867, திர்மிதி: 1883)

செலவு செய்வதிலும் சிக்கனப்படுத்துவதிலும், நடுநிலை வகித்திட வேண்டும்.

சிக்கனம் :

ஊரடங்கு உள்ளிருப்பு காலத்தில் வருமானமின்றி சிரமப்படுவோருக்கு, அவர்களின் சிக்கனம் சேமிப்பு இந்த இக்கட்டான நேரத்தில் பேருதவியாக இருக்கும். பொருள் சிக்கனம், (விலை குறைந்த) ஆடை சிக்கனம், உணவுச் சிக்கனம் (அளவாகப் பேசும்) வார்த்தை சிக்கனம் என சிக்கனம் மிக அவசியமானது, அருமையானது.

ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரழி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்” என்று கூறியதைக் கேட்டேன். (முஸ்லிம் : 4182)

“அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலிப்பகுதி” (நபிமொழி கருத்து) என நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்”


Thanks : annajath.com

கருத்துகள்