RECENT POSTS

அகந்தை:

 


அகந்தை:


உலகப் பிரசித்தி பெற்ற துறவி ஒருவர் ஒரு நாட்டுக்கு விஜயம் செய்தார். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ஒரு குடிசைபோட்டுத் தங்கி, நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார்.


மக்கள் தங்கள் குறைகளை அவரிடம் சொல்லி, அவரின் உபதேசத்தை  கேட்டு  செல்லத் தொடங்கினர். அவரின்  உபதேசம்   என்ற செய்தி நாடு முழுவதும் பரவிவிட்டது.


இந்த விஷயம் அந்த நாட்டு மன்னனின் காதுக்கு எட்டியது.


உடனே, சில முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு, துறவியின் இருப்பிடத்துக்குச் சென்றார்.


அப்போது அந்தத் துறவி தன் குடிசையைச் சுற்றி சில மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தார். அதனால் மன்னன் வந்திருப்பதை அவர் கவனிக்கவில்லை.


உடனே மன்னன், "துறவி மகானே! நான் மன்னன் வந்திருக்கிறேன்!'' என்றார்.


துறவி திரும்பாமல், "போ!'' என்று சொல்லிவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தார்.

மன்னனுக்குக் கோபம் வந்தது.


"துறவியே! உம்மைத் தேடி நானே வந்திருக்கிறேன். சிறிது கூட மரியாதையே இல்லாமல் போ என்கிறீரே!'' என்று கத்தினான்.


துறவி மீண்டும் திரும்பாமல், "மறுபடியும் சொல்கிறேன், நீ போகலாம்!'' என்றார்.


மன்னனுக்குக் கோபம் பொங்கியது. அதைக் கண்ட அமைச்சர் அமைதியாக இருக்கும்படி, சைகை காட்டினார்.


மன்னன் சிரமப்பட்டு, தன்கோபத்தை அடக்கினான்.


"துறவி மகானே! இப்போது நான் போகிறேன். மறுபடியும் எப்போது நான் வரட்டும்?'' என்று கேட்டான் மன்னன்.


"நான் செத்த பிறகு வா!'' என்றார் துறவி.


அதைக் கேட்டு மன்னன் உள்பட அமைச்சர் பிரதானிகள் அனைவரும் திடுக்கிட்டனர்.


"நீங்கள் செத்த பிறகு வரவா? அப்போது வந்து உங்களை எப்படிப் பார்ப்பது? உங்களிடம் எப்படிப் பேசுவது?'' என்று கேட்டான் மன்னன்.


துறவி இப்போது அவனை ஏறிட்டுப் பார்த்தார்.


"நான் செத்த பிறகு என்றால், என் மறைவுக்குப் பிறகு என்று அர்த்தமல்ல... நான் குறிப்பிட்ட "நான்' என்பது உன்னுள் இருப்பது. உன் அகந்தையை விட்டு, ஒரு சாதாரண மனிதனாக வந்து என்னைப் பார் என்பதுதான் நான் சொன்னதன் பொருள்!'' என்றார் துறவி.


தன் அகந்தையை எண்ணி தலை கவிழ்ந்தான் மன்னன் .


மனிதன் இன்ன பொருளாக இருந்தான் என்று சொல்வதற்கு ஒன்றுமே இல்லாமல் இருந்தான் .  நான் செய்தேன் ! நான் தான் இதுக்கு காரணம் !  நான் தான் அவனுக்கு உதவி செய்தேன் ! நான் இல்லை என்றால் என்று இப்படி கூறுவது ஒரு அகந்தை பண்பு !   மனிதனிடம் இருக்கக்கூடாதா பண்பு 'இந்த அகந்தை '


நான் இல்லாமல் எதுவும் நடக்காது என்று சொல்பவர்களும் உண்டு ! அந்த நான் யார் ? இதற்க்கு முன் நீர் யார் ? நீர் எதுவாக இருந்தாய் ?  உன்னால் கூறமுடியுமா ?   பணிவு இல்லாமல் இறைவனை நெருங்கமுடியாது !  பேச்சில் கனிவு இல்லாமல் , மனதில் பணிவு வராது !  பேச்சில் கனிவும் , நடப்பில் பணிவும் இல்லாமல் இறைவனின் அன்பும் , அருளும் பெறமுடியாது !  

கருத்துகள்