கண்ணெதிரே இல்லாத சகோதரருக்காக பிரார்த்திப்பதின் சிறப்பு
قال اللَّه تعالى: ﴿وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ﴾
அல்லாஹ் கூறுகிறான்:
அவர்களுக்குப் பின் வந்தார்களே அத்தகையவர்கள் “எங்கள் இறைவா! எங்களையும், இறைநம்பிக்கை கொள்வதில் எங்களை முந்தி விட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! என்று கூறுகின்றனர்..
(அல்குர்ஆன்: 59:10)➚
وقال تعالى: ﴿اسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ﴾
அல்லாஹ் கூறுகிறான்:
(நபியே!) உமது பாவத்திற்காகவும், இறை நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், இறை நம்பிக்கை கொண்ட பெண்களுக்காகவும் நீர் பாவமன்னிப்புக் கோருவீராக!
(அல்குர்ஆன்: 47:19)➚
وقال تعالى إخباراً عن إبراهيم صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم: ﴿رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ﴾
இப்ராஹீம் நபியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், இறை நம்பிக்கையாளர்களையும் கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளில் மன்னிப்பாயாக! (என்று இப்ராஹீம் பிரார்த்தனை செய்தார்.)
(அல்குர்ஆன்: 14:41)➚
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமான அடியார் கண்ணெதிரே இல்லாத தம்முடைய சகோதரருக்காகப் பிரார்த்தனை செய்யம் போது வானவரும் “உனக்கும் அவ்வாறே கிடைக்கட்டும்” என்று கூறாமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர்: அபூ தர்தா (ரலி),(முஸ்லிம்: 5279) ➚
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமான மனிதர் கண்ணெதிரே இல்லாத தம்முடைய சகோதரருக்காகப் பிரார்த்தனை செய்வது (இறைவனால்) ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதாகும். அந்த முஸ்லிமின் தலைக்கருகில் (அவருக்கென்று) ஒரு மலக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் தன்னுடைய சகோதரருக்காக நல்லதைப் பிரார்த்திக்கும் போதெல்லாம் நியமிக்கப்பட்ட அந்த வானவர் “ (இறைவா!) இவருடைய பிராரத்தனையை ஏற்றுக் கொள்வாயாக! உனக்கும் அவ்வாறே கிடைக்கட்டும்” என்று கூறுகிறார்.
அறிவிப்பவர்: அபுத் தர்தா (ரலி),(முஸ்லிம்: 5281) ➚
உதவி செய்தவர்களுக்காக பிரார்த்தித்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கு (மற்றவர்களால்) ஒரு நல்லுதவி செய்யப்படும் போது அவர் உதவி செய்தவருக்கு “ஜஸாக்கல்லாஹு ஹைரன்” (அல்லாஹ் உனக்கு நற்கூலி வழங்குவானாக) என்று கூறினால் அவர் (அவருக்கு) உச்சகட்ட நன்றியைச் செலுத்திவிட்டார்.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி),
(திர்மிதீ: 2035) ➚
நமக்கு எதிராகவும், மற்றவர்களுக்கு எதிராகவும் பிரார்த்தனை செய்யக் கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் உங்களுக்கு எதிராக பிரார்த்தனை செய்யாதீர்கள்! உங்கள் குழந்தைகளுக்கு எதிராகவும் பிரார்த்தனை செய்யாதீர்கள்! உங்களுடைய செல்வங்களுக்கு எதிராகவும் பிரார்த்தனை செய்யாதீர்கள்! அல்லாஹ்விடம் கேட்டது கொடுக்கப்படும் நேரமாக அது தற்செயலாக அமைந்துவிட்டால், உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான் (அது உங்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும்)”.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),(முஸ்லிம்: 5736) ➚
ஸஜ்தாவில் செய்யக் கூடிய பிரார்த்தனை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு அடியான் அல்லாஹ்விற்கு மிகவும் நெருக்கமானவனாக ஆகும் நிலை அவன் ஸஜ்தா செய்யும் நிலை ஆகும். எனவே (ஸஜ்தாவில்) அதிகம் பிரார்த்தியுங்கள்”.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 832) ➚
Less
பிரார்த்தனை செய்யும் போது அவசரப் படக்கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் என்னுடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன். ஆனால் அவன் எனக்குப் பதிலளிக்கவில்லை” என்று கூறி உங்களில் ஒருவர் அவசரப்படாத காலமெல்லாம் (அவரது பிரார்த்தனைக்கு) பதிலளிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி,
(புகாரி: 6340) ➚,(முஸ்லிம்: 5284) ➚
மற்றோர் அறிவிப்பில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.
“ஓர் அடியார் பாவமானதையோ அல்லது உறவைத் துண்டிப்பதையோ வேண்டிப் பிரார்த்திக்காதவரையிலும் அவசரப்படாதவரையிலும் அவரது பிரார்த்தனை ஏற்கப்பட்டுக்கொண்டே யிருக்கிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! ‘அவசரப்படுதல்’ என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு, “ஒருவர் நான் பிரார்த்தித்தேன். (மீண்டும்) பிரார்த்தித்தேன். ஆனால், அவன் என் பிரார்த்தனையை ஏற்பதாகத் தெரியவில்லை என்று கூறி, சலிப்படைந்து பிரார்த்திப்பதைக் கைவிட்டுவிடுவதாகும்““ என்று பதிலளித்தார்கள்.
(முஸ்லிம்: 5285) ➚
கடமையான தொழுகையில் கேட்கப்படும் பிரார்த்தனை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எந்தத் துஆ (இறைவனால்) செவியேற்க்கப்படும்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்க்கப்பட்டது. “நள்ளிரவின் இறுதிப்பகுதியிலும், கடமையான தொழுகைகளுக்குப் பின்னாலும் (கேட்கப்படும் பிரார்த்தனையாகும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி),(திர்மிதீ: 3499) ➚
குறிப்பு: இதன் அறிவிப்பாளர் வரிசையில் ‘‘இப்னு ஜுரைஜ்” என்பார் இடம் பெறுகிறார். இவர் “தத்லீஸ்” செய்யக்கூடியவர் என்றாலும் முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் என்ற நூலில் (3948, பாகம் 2 பக்கம் 424) இவர் தன்னுடைய ஆசிரியரிடம் நேரடியாக கேட்டதற்கான வாசகத்தைப் பயன்படுத்தி அறிவித்துள்ளார். எனவே இது ஆதாரப்பூர்வமானதாகும்.
பாவமான காரியத்தை வேண்ட கூடாது
“பாவத்தையோ, அல்லது உறவைத் துண்டிப்பதையோ பிரார்த்திக்காத வரையில் அல்லாஹ்விடம் ஒரு வேண்டுதலை பிரார்த்தித்து அதனை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல், அல்லது (அதற்குப் பகரமாக) அது போன்ற அளவிற்குள்ள ஒரு கெடுதியை அவரை விட்டும் அல்லாஹ் நீக்காமல் எந்த ஒரு முஸ்லிமும் பூமியின் மீது இருப்பதில்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு மனிதர் “அப்படியென்றால் நாங்கள் அதிகமாக (துஆ) கேட்கலாமா?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “அல்லாஹ் மிகவும் அதிகமாக (வாரி வழங்குபவன்)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி),
(அஹ்மத்: 11133) ➚
அபூ ஸயீத் (ரலி) அவர்கள் வாயிலாக ஹாகிமுடைய அறிவிப்பில் “அல்லது அவருக்காக அல்லாஹ் அவர் பிரார்த்தித்தற்கு நிகரான நற்கூலியை (மறுமைச்) சேமிப்பாக ஆக்குகின்றான்” என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
குறிப்பு: திர்மிதீயின் அறிவிப்பு பலமானதாகும்.,திர்மிதீயின் அறிவிப்பில் “அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பின் ஸவ்பான்” என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் விசயத்தில் குறை, நிறைகள் கூறப்பட்டிருந்தாலும் இவரிடமிருந்து உறுதியானவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் பலவமானவை என்பதே சரியானதாகும். மேலும் ஹாகிமுடைய அறிவிப்பில் “முஹம்மது பின் யசீத் அபூ ஹிஸாம்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார்.
துன்பம் நேரும் போது பிரார்த்திப்பது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது, “லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம் என்று கூறுவார்கள்.
(பொருள்: கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அர்ஷின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மகத்துவமிக்க அர்ஷின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
(புகாரி: 6346) ➚,(முஸ்லிம்: 5276) ➚
பிரார்த்தனைக்குள்ள விதி படி நாம் அனைவரும் பொறுமையுடம்னும், நம்பிக்கையுடனும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக!

0 கருத்துகள்