அண்ணலாரின் பொன்மொழிகள்


 உமர்(ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம் செய்ததைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், அவர்களை அழைத்து ''எச்சாரிக்கையாக இருங்கள்! உங்கள் தந்தைமார்கள் மீது நீங்கள் சத்தியம் செய்வதை அல்லாஹ் தடை செய்கின்றான்! எவரேனும் சத்தியம் செய்ய நேர்ந்தால் அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும்; அல்லது மௌனமாக இருக்கட்டும்!'' என்று நபி(ஸல்) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் நேர்ச்சை செய்வதைத் தடுத்து விட்டு, அதன் மூலம் கஞ்சனிடமிருந்து (ஏழை எளியவர்களுக்காக) சிறிது பொருளை வெளியே கொண்டு வரலாம் என்பதைத் தவிர, அது வேறெந்த நன்மையையும் தராது என்று கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். (புகாரி, முஸ்லிம்)


 எவரேனும் பொய் சத்தியம் செய்து ஒரு முஸ்லிமுடைய உரிமையைப் பறித்து விட்டால், அவருக்கு அல்லாஹ் நரகத்தை விதித்து விட்டான். மேலும், சுவர்க்கத்தை விலக்கி விட்டான். மேலும், சுவர்க்கத்தை விலக்கி விட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்ட ஒருவர்) ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஒரு சாதாரணப் பொருளுக்காகவுமா?'' என்று கேட்டார். ''அராக் மரத்தின் ஒரு கிளையாக இருந்தாலும்'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலாளித்தார்கள் என அபூ உமாமா அல்ஹாரினிய்யீ(ரலி) அறிவிக்கிறார்.( முஸ்லிம்)


 மோசக்காரன், மோசக்காரியின் சாட்சியம் செல்லாது. பொறாமைக்காரன் தன் (முஸ்லிம்) சகோதரனுக்கு எதிராகச் சொல்லும் சாட்சியமும் செல்லாது. ஒரு வீட்டாருக்கு ஆதரவாக அவர்களின் பணியாள் (அல்லது ஊழியர்) சொல்லும் சாட்சியமும் செல்லாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். (அஹ்மத், அபூதாவூத்)

 நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர். 1. நீதியை அறிந்து அதன் படி செயல்படுபவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார். 2. நீதியை அறிந்தும் அதன் படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் புகுவார். 3. உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே மக்களுக்குத் தீர்ப்பு வழங்கியவர் நரகத்தில் புகுவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என புரைதா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ, திர்மிதீ இப்னுமாஜா. இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 (மார்க்க மற்றும் நீதிமன்றத்) தீர்ப்புக்காக இலஞ்சம் வாங்குபவரையும், இலஞ்சம் கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்.)
திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்திலும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்திலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

 நீங்கள் தலைமைப் பதவிக்கு ஆசைப்படவீர்களானால், மறுமையில் அதுவே உங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கும். அது உலக வாழ்வில் இனிமையானது மறுமையில் கசப்பானது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (புகாரி)

கருத்துகள்