வாழவே பிடிக்கிலங்க(psychology story)

 



வாழவே பிடிக்கிலங்க...  - ஒரு நாள் அன்பு என்பவர் ரொம்பவும் சோர்ந்து போய் காணப்பட்டார். அவருக்கு வாழ்க்கையே பிடிக்காமல் போய்விட்டது. அவர் வாழ்க்கையை வாழ்வதற்கே வெறுத்து விட்டார். அதனால், விரக்தியோடு சாலை ஓரமாக சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் ஒரு காடு தென்பட்டது.


அந்த காட்டிற்கு சென்றபோது, அந்த காட்டில் ஒரு பெரியவரைச் சந்தித்தார். அந்த பெரியவரிடம் அன்பு தன் முடிவைத் தெரிவித்தார். தான் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்பதற்கான ஒரே ஒரு காரணத்தை சொன்னால்கூட தனது முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இருப்பதாக அன்பு கூறினார்.


அதைக்கேட்ட அந்த பெரியவர் புன்முறுவல் பூத்தார். காட்டிற்குள் அற்புதமாக அமைந்திருக்கும் அவரது குடிலுக்கு அழைத்துச் சென்றார். அவரது குடிசை மூங்கில் தோப்புக்குள் அமைந்திருந்தது. சுற்றியும் பூச்செடிகளாக இருந்தன. தெரிகிறதா குடிசைக்கு வெளியே இருந்த கட்டிலில் உட்கார வைத்த பெரியவர் சுற்றியிருந்தவற்றை எல்லாம் காட்டி அன்பிடம் கேட்டார்.


இவை என்னவென்று தெரிகிறதா ?

“ஏன் தெரியாது.. பூச்செடிகளும், மூங்கில்களும்” என்றார் அன்பு. 

“இவற்றை நான்தான் விதைப் போட்டு வளர்த்தேன்” என்றார் பெரியவர். 

“ஓ..! அழகாக வளர்ந்துள்ளதே” என அன்பு ஆச்சரியப்பட்டார். 


“இந்த பூச்செடிகளையும், இந்த மூங்கில் தோப்பில் உள்ள மூங்கிலையும் நான் ஒன்றாகத்தான் நட்டேன்” என்றார் அந்த பெரியவர். அவர் சொல்வதை அன்பு வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

“இந்த பூந்தோட்டத்தையும், இந்த மூங்கில் தோப்பையும் ஒரே நேரத்தில் நிலத்தைக் கொத்தி விதைத் தெளித்தேன். நன்றாக சூரிய ஒளி கிடைக்கும்படி செய்தேன். 


காலந்தவறாமல் உரமிட்டேன். களையெடுத்தேன். நீர்ப்பாய்ச்சினேன்! 

இந்த பூச்செடிகள் வேகமாக முளைவிட்டு வளர்ந்துவிட்டன. அழகிய வண்ணங்களில் பூப்பூத்து மணம் பரப்பின. மூங்கில் விதைகள் மட்டும் ஒரு வாரமாகியும் முளைவிடவில்லை. 


ஆனால், நான் தளர்ந்துவிடவில்லை. இரண்டு வாரங்களாகின. மூங்கில் விதைகள் முளைவிடக் காணோம். அப்போதும், நான் தளர்ந்துவிடவில்லை. மூன்று வாரங்களாயின. மூங்கில் விதைகளிலிருந்து ஓர் அசைவும் காணோம். அப்போதும், நான் தளர்ந்துவிடவில்லை.


ஐந்து, ஆறு, ஏழு என்று வாரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. மூங்கில் விதைகள் முளைப்பதாயில்லை. கடைசியில் எட்டாவது வாரம் அதாவது 60 நாட்களுக்குப் பிறகு பூமியைப் பிளந்துகொண்டு மஞ்சள் நிறத்தில் சின்ன சின்ன தளிர்கள் வெளிவந்திருந்தன.


அந்த நேரத்தில் இந்த பூச்செடிகளோடு ஒப்பிடும்போது, அது மிகவும் சின்ன உருவம்தான். ஆனால், வெறும் ஆறு மாதங்களில் 100 அடிக்கும் மேலாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்துவிட்டன. ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் உயரம் என்று வேக வேகமாக வளர்ந்து, இப்போது தோப்பாய் நிற்கின்றன. 


அந்த விதைகள் கிட்டத்தட்ட 60 நாட்கள் முளைப்பதற்கான சூழலுக்குப் போராடியிருக்கின்றன. நம் கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்குள் வேர்ப்பாய்ச்சி அதன் மீட்சிக்குக் காரணமாய் நின்றன.


இறைவன் யார் மீதும் சுமக்க முடியாத பாரத்தை சுமத்திவிடுவதில்லை என்பதை எப்போதும் மறக்கக்கூடாது. உனது முடிவிலிருந்து உன்னை மாற்றிக் கொள்ள ஒரு காரணத்தைக் காட்டச் சொன்னாய். அதற்கான ஆயிரமாயிரம் காரணங்கள் உனக்குள்ளாகவே இருப்பதை நீ பொறுமையுடன் சிந்தித்தால் தெரிந்து கொள்ளலாம்.


உன்னுடைய இத்தனை நாள் போராட்டங்களும், துன்பங்களும், கவலைகளும் ஒரு மீட்சிக்கான போராட்டமாகவே காண வேண்டும். மூங்கில் விதைகளைப் போல உனது வேர் பாய்ச்சலுக்கான அவகாசமிது.


அடுத்தது, யாருடனும் உன்னை ஒப்பிடாதே! ஒவ்வொருவரும் தனித்தனி திறமையானவர்கள். மூங்கிலோடு இதோ இந்த பூச்செடிகளை ஒப்பிட முடியுமா? அதுபோலதான் அடுத்தவரோடு நம்மை ஒப்பிடுவதும்.

உனக்கும் காலம் இருக்கிறது. நீயும் உயரமாய் வளரத்தான் போகிறாய். 


இந்த மூங்கில் உயரத்திற்கு நீ வளர்வதற்கு, உனது முயற்சிகளை அதிகரித்து மூங்கிலைப் போல வீரியமாய் வளர்ந்து விண்ணைத் தொடு !”.


“துன்பத்திலும் இன்பத்திலும், நீ நினைவில் கொள்ள வேண்டிய ஒரு உண்மையான விஷயம்... இந்த நிமிடம் நிரந்தரமில்லை”


கருத்துகள்