LATEST POSTS FOR READING 📚

அழகு ஆபத்துக்கு உதவாது

 


அழகு ஆபத்துக்கு உதவாது


ஓர் ஆண் மான் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது அதற்கு தாகம் ஏற்பட்டது. தண்ணீரை தேடி ஒரு குளத்தின் அருகே வந்தது. தாகம் தண்ணிரை வயிறு முட்ட நீரை பருகியது.


அப்போது தன்னுடைய உருவத்தை தண்ணீரில் கண்டது. தலைக்கு மேல் கிளைகள் போல் விரிந்து இருந்த தன் கொம்புகளின் பிம்பத்தை நீரில் பார்த்தது. ‘அவை எவ்வளவு அழகாக இருக்கின்றன! உலகிலேயே மிக அழகான மிருகமாக நான் இருப்பதற்கு இந்த கொம்புகளே காரணம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டது.


சொல்லியவாறு கீழே குனிந்த மான் ஒல்லியான தன்னுடைய கால்களை பார்த்தது; மிகவும் ஏமாற்றமடைந்தது. ‘இல்லை, இந்த கால்கள் என்னை அழகில்லாதவனாக்குகின்றன. உலகிலேயே அழகான மிருகமாக நான் இருக்க முடியாது,’ என்று சொல்லி வருந்தியது.


மரங்களுக்குப் பின்னால் நின்றவாறு பசியோடு இருந்த புலி ஒன்று சத்தம் இல்லாமல் மானை பார்த்துக் கொண்டிருந்தது. மானை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து வந்தது. உயரமாக வளர்ந்திருந்த புற்கள் சரசரத்தன. தன் எண்ணங்களில் மூழ்கியிருந்த மான் புலி நெருங்குவதை கவனிக்கவில்லை. 


புலி, மானை பிடிக்க பாய்ந்தது. திடுக்கிட்ட மான் மிக வேகமாக ஓட துவங்கியது. புலியிடமிருந்து தப்பித்து நான்கு கால் பாய்ச்சலில் அதிவேகமாக ஓடியது. புலி மிகவும் பின்னால் துரத்திக் கொண்டு வந்தது.


இனிமேல் துரத்தினாலும் மானை பிடிக்க முடியாது என்று புலி முடிவு செய்த நேரத்தில் மானின் கொம்புகள் ஒரு மரக்கிளையில் சிக்கிக்கொண்டன. மரக்கிளையில் இருந்து விடுபட மான் மிகவும் முயற்சி செய்தது. ஆனால், மானால் கொம்புகளை விடுவிக்க முடியவில்லை.


“என் கால்கள் அழகாக இல்லை என்று நான் அவமானமடைந்தேன். நான் தப்பித்துக் கொள்ள அவை தான் எனக்கு உதவி புரிந்தன. என் கொம்புகளை நினைத்து நான் பெருமிதம் அடைந்தேன். ஆனால், என்னுடைய இறப்புக்கு அவையே காரணமாக உள்ளன” என்று மான் வருத்தத்துடன் தனக்குள் சொல்லிக் கொண்டது.




இதற்குள் மானை நெருங்கிய புலி அதன் மீது பாய்ந்து, அதை கொன்று தின்றது.


நிச்சயமாக அழகு என்பது உடல் தோற்ற்றத்திலேயோ அல்லது நிறத்திலேயே இல்லை. உண்மையான நிலையான மரணம் வரை உள்ள அழகு 'நற்குணம் ' இதை எல்லோரும் விரும்புவார்கள் ! துர்குணம் எல்லோரும் வெறுப்பார்கள் !  நற்குணம் தான் சிறந்தது. 

கருத்துகள்