மார்க்கம் தேவை! மாற்றம் தேவை!
அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அழகான முறையில் வாழ்க்கையை வாழ்ந்து காட்டிவிட்டார்கள்! இதுதான் இஸ்லாம் ! இப்படி தான் வாழவேண்டும்! இதைத்தான் பின்பற்றவேண்டும்! இப்படித்தான் நல்ல செயல்களை செய்யவேண்டும்! இதுதான் இஸ்லாம் காட்டிய வழிமுறை! நமக்கு ஒரு விடயம் சிறப்பாகவும் , சிறந்ததாகவும், அழகாகவும், இருந்தபோதிலும் , அந்த விடயம் நமக்கு அல்லாஹ்வின் தூதர் காட்டித்தரவில்லை , செய்யச்சொல்லி கட்டளையிடவும் இல்லை என்றால் , அதை நாம் புறக்கணிக்கவேண்டும்! பின்பற்றக்கூடாது! இதுதான் ஒரு முஸ்லிமின் அழகான நடைமுறை ! நல்ல பண்பு! அல்லாஹ்வும் , அல்லாஹ்வின் தூதரும் நமக்கு அங்கீகரிக்காத விடயத்தில் நாம் ரொம்ப ஆவலாக பின்பற்றக்கூடாது! அதில் வியாக்கியானம் செய்யக்கூடாது! முழுமையாக அதிலிருந்து விலகி இருக்கவேண்டும்! இது ஒரு தெளிவான விடயம்! அல்ஹம்துலில்லாஹ் !
இன்று நம்மில் சிலர் மார்க்கத்தில் சொல்லப்பாடாத , இல்லாத ஒன்றை , ரொம்ப டீப்பாக பின்பற்றக்கூடிய முறைகளை பார்க்கிறோம்! ஜும்மா நாள் வந்துவிட்டால் வித விதமாக gif காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் போடுவது , ஜும்மா முபாரக்கு சொல்வது , ஸலவாத்து கூறுங்கள் என்று சொல்வது அன்றைய தினம் மட்டும் இப்படி சமூக வலைத்தளங்களில் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் வருவதை நாம் பார்க்கலாம்... இது சிலர் வாடிக்கையாக செய்து வருகிறார்கள்! இப்படி சிலர்! அல்ஹம்துலில்லாஹ் !
ஒருவர் இறந்துவிட்டால் . இறந்த செய்தியை வாட்ஸ் ஆப் மூலம் போட்டால் . உடனே அதற்க்கு விதம் விதமாக gif போடுவது , இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன் என்று பல விதமாக டைப்பு பண்ணி போடுவது
இது வழக்கமான ஒன்று . வாயால் கூறினால் போதும்! அதுதான் சுன்னத்து ! அன்றைய தினமும் இந்த துக்கமான பதில் தான் காணமுடியும்! இதைப்பற்றி ஒரு பயானில் தெளிவாக சில உலமாக்கள் கூறியிருந்தார்கள் . இருந்தபோதிலும் அதற்க்கு யாரும் செவிதாழ்த்தி கேட்டதாக தெரியவில்லை! இது வாட்ஸ் ஆப் மற்றும் முகநூலில் பார்க்கலாம்...
அல்ஹம்துலில்லாஹ் !
வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக போடுவார்கள்! சிலர் மார்க்க செய்திகள் (ஹதீஸ் ) இன்னும் சிலர் கருத்துள்ள மேற்கோள்கள் ! இன்னும் சிலர் அவர்கள் எங்கே போனார்கள் , என்ன சாப்பிட்டார்கள் , என்ன , எங்கே ஷாப்பிங் செய்தார்கள் என்பதை போடுவார்கள்! சிலர் குழந்தைகள் புகைப்படங்களை போட்டு ரசிப்பார்கள் ! இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவர்களின் மனதில் பிடித்த விஷயங்களை வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் போடுவார்கள்! இதுவும் ஒரு வழக்கமான வாடிக்கையான வழிமுறையாக பின்பற்றி வருகிறார்கள்! எதை மறந்தாலும் பெரும்பாலும் மக்கள்கள் இந்த வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் போட மறக்கமாட்டார்கள்! இதில் நிறைய பேர்கள் அடிமையாகிவிட்டார்கள் என்று கூட சொல்லாம்... அல்ஹம்துலில்லாஹ் !
இன்று எங்கு பார்த்தாலும் நிறைய உபதேசங்கள் நிறைந்து காணப்படுகின்றன! தமிழில் மேற்கோள்கள் கருத்து சொல்வதாக இருந்தாலும் , ரொம்ப ஆழமாக சிந்தித்து கருத்து சொல்கிறார்கள் ! ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளங்களாக இருந்தாலும் சரி, அல்லது வாட்ஸ் ஆப் இருந்தாலும் சரி நிறைய விழிப்புணர்வு செய்திகள் அல்லது மருத்துவ செய்திகள் அல்லது ஏதாவது கருத்துள்ள செய்திகள் வேறு எந்த செய்திகளாக இருந்தாலும் வந்துகொண்டே இருக்கிறது! அதுவும் திரும்ப திரும்ப அதே செய்திகளும் திரும்பவும் புதிய செய்தி வடிவத்தில் மீண்டும் மீண்டும் வருவதும் வாடிக்கையாக ஆகிவிட்டது! உபதேசம் சொல்வதற்கு நிறைய பேர்கள் வந்துவிட்டார்கள்! ஆனால் அந்த உபதேசத்தை கேட்டு வாழ்க்கையில் நடைமுறை படுத்த யாரும் தயாராக இல்லை ! காரணம் சொல்வது எங்கள் வாடிக்கை ! செய்வது அரிது! ஒரு விஷயத்தை ஒருவரிடம் சொல்வது எளிது ! அந்த விஷயத்தை நடைமுறைப்படுத்துவது கடினம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள்! ஒரு ஊரில் எல்லோரும் ஒரே கடைகளை திறந்து , வாங்குவதற்கு யாரும் இல்லை ! விற்பனை செய்வதற்கு எல்லோரும் தயாராக இருப்பதுபோல் , வாங்குவதற்கு யாருக்கும் விருப்பம் இல்லை ! ஆர்வமும் இல்லை என்பது போல் இருக்கிறது இன்றைய நம் நிலை!
மார்க்கமும் இல்லை! எந்த மாற்றமும் இல்லை என்றால் எதற்கு இந்த உபதேசங்கள்? சொற்பொழிவுகள்! யாருக்கு இந்த உபதேசம் பலன் தருகிறது! யார் இந்த உபதேசம் படி நடக்கிறார்கள் ? யாருக்கு தான் இந்த செய்திகள் சொல்கிறார்கள் ? ஆளில்லாத டீ கடையில் யாருக்கு டீ போடுகிறார் டீ மாஸ்டர் என்று கேள்வி கேட்க தோன்றுகிறது!
நாம் இன்று நிறைய விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டோம் ! அதிலிருந்து நாம் மீள்வது ரொம்ப சிரமமாக இருக்கிறது! எப்படியோ மலை மீது ஏறிவிட்டோம் அதிலிருந்து இறங்குவது தெரியாமல் நம்மில் நிறைய பேர்கள் அங்கே , அப்படியே வாழ்ந்துகொண்டுயிருக்கிறார்கள் ! வருங்கால சாந்நித்தியர்கள் நிலை எப்படி இருக்கும் என்று நம்மால் கற்பனை செய்துக்கூட பார்க்கமுடியவில்லை! ரொம்ப மோசமாக இருக்கலாம் , நாம் இப்படியே எந்த மாற்றமும் , மார்க்கமும் இல்லாமல் இருந்தால் . இன்ஷாஅல்லாஹ் நமக்கு மாற்றம் ஏற்பட்டால் , விழித்துக்கொண்டால் , பிள்ளைகளுக்கு முன்னாள் முன்மாதிரியாக வாழ்ந்தால், மற்றவர்களுக்கு முன்னாள் வாழ்ந்துகாட்டினால் இன்ஷாஅல்லாஹ் சீக்கிரம் மார்க்கமும் வரும்! மாற்றமும் வரும்! நம்முடைய வாழ்க்கையில் சீரேற்றமும் , சீரான வழிமுறையும் வரும்! பிறகு வருங்கால சாந்நித்தியர்கள் இஸ்லாம் என்னும் ஜோதி அவர்களின் வாழ்க்கையில் ஒளிர்வீசும் !
சத்தியத்தில் இருக்கும் நாம் , அசத்தியத்தில் இருப்பவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்! அவர்களுக்கு கூறுவதைவிட இன்ஷாஅல்லாஹ் நம் அவர்களுக்கு வாழ்ந்து காட்டவேண்டும்! இன்ஷாஅல்லாஹ் அவர்களும் இந்த சத்திய மார்க்கத்தை பின்பற்ற விரும்புவார்கள்!
நம் மார்க்கத்தில் சொல்லாத , கட்டளையிடப்படாத , காட்டித்தராத காரியத்திலிருந்து நாம் விலகி இருக்கவேண்டும்! எது சுன்னத்தான விஷயமோ அதை மட்டும் பின்பற்றவேண்டும்! அல்லாஹ் நம் அனைத்து நல்ல அமல்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் , அல்லாஹ் கட்டைளையிட்ட வழிமுறையில் நடந்து , நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த , வாழ்ந்தமுறையில் நாமும் அந்த வழிமுறையில் பயணிக்க்கவேண்டும் ! இதற்க்கு மாற்றமாக எந்த ஒரு நல்ல அழகான அருமையான செயலாக இருந்தாலும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான்!
நம்மை படைத்தவனின் (அல்லாஹ்வின்) அங்கீகாரம் தேவை! அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை தேவை ! இந்த இரண்டும் இல்லாமல் எந்த நல்ல அமலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை ஒவ்வொருவரும் நம் மனதில் ஆழமாக பதிவு செய்யவேண்டும்!
இன்ஷாஅல்லாஹ் நாம் ஒவ்வொருவரும் நிய்யத்து வைப்போம்! இன்ஷாஅல்லாஹ் இனி வரும் காலங்களில் , சுன்னத்துக்கு மாற்றமான எந்த காரியமாக இருந்தாலும் அதைவிட்டு விலகி இருப்பேன் என்று உறுதிமொழி எடுப்போம்!
ரயில் தன்னுடைய வழித்தடத்திலிருந்து கொஞ்சமும் நகர்ந்து வந்தால் , தடம் புரண்டு விபத்து ஏற்பட வாய்ப்பு வந்துவிடும்!
அதேபோல் நாம் இந்த சத்திய பாதையில் இருந்து லேசாக நகர்ந்தாலும் , நாம் வழிதவறிவிடுவோம் ! இதே பாதையில் நாமும் பயணிக்கவேண்டும்! நம்முடைய வருங்கால சாந்நித்தியர்களும் பயணிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த பதிவை நிறைவு செய்கிறேன் ! ஆமீன் அல்லாஹ் போதுமானவன்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்!
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!