உபகாரத்துக்கு நன்றியும் பிரதியுபகாரமும் செய்வார்

 


உபகாரத்துக்கு நன்றியும் பிரதியுபகாரமும் செய்வார்


முஸ்லிமின் பண்புகளில் மேன்மையானது உபகாரத்தை ஏற்று அதை மறந்துவிடாமல் பிரதியுபகாரம் செய்வதும், நன்றி கூறுவதுமாகும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருக்கேனும் உபகாரம் செய்யப் பட்டால் அவர் உபகாரம் செய்தவரிடம் "ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக)" என்று கூறினால் அவர் மிக மேலான வகையில் புகழ்ந்துவிட்டார். (ஸுனனுத் திர்மிதி)


மேலும் கூறினார்கள்: "எவரேனும் அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் பாதுகாப்புக் கோரினால் அவருக்கு நீங்கள் பாதுகாப்பு அளியுங்கள். உங்களுக்கு எவரேனும் உபகாரம் செய்தால் அதற்குப் பிரதியுபகாரம் செய்யுங்கள்." (ஸுனன் அபூ தாவூத், ஸுனனுன் நஸாயீ)


உபகாரத்துக்கு நன்றி செலுத்துவது முஸ்லிமுக்கு கடனைப் போன்றதாகும். இதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்தினார்கள். இது சமூகத்தின் வழக்கங்களில் உள்ளது போன்ற வெற்றுச் சடங்கல்ல, அதில் பல்வேறு நலன்களும் சீர்திருத்தங்களும் அமைந்துள்ளன.


இது விஷயத்தில் இஸ்லாமின் போதனை என்னவென்றால், தான் அடைந்த உதவிகளுக்கு அல்லாஹ்வுக்கு மட்டும் நன்றி செலுத்துவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அது எவன் மூலம் தனக்குக் கிடைத்ததோ அவருக்கும் நன்றி செலுத்த வேண்டும். அப்போதுதான் முறையாக நன்றி செலுத்தியதாகக் கருதப்படும்.


ஒருவன் மனிதர்களுக்கு அவர்கள் செய்த உபகாரத்திற்காக நன்றி செலுத்தவில்லையெனில், உபகாரம் செய்தவன் மனிதாபிமானத்தைத் தூண்டி, அவரை மகிழ்ச்சிப்படுத்தும் வார்த்தைகள் அவனிடமிருந்து வெளிப்படவில்லையாயின் அவன் நன்றிகெட்ட வன்னெஞ்சம் கொண்ட மனிதனாவான். அவன் உபகாரத்தின் மதிப்பையும், அதன் மாண்புகளையும் அறியாத காரணத்தால் நன்றி செலுத்தத் தவறியவனாவான். எனவே அவன் நன்மைகளையும் சிறப்புகளையும் அருளும் அல்லாஹ்வுக்கு நன்றி கூறத் தகுதியற்றவனாகிறான். இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவராக மாட்டார்." (அல் அதபுல் முஃப்ரத்)


உபகாரம் செய்தவருக்கு நன்றி செலுத்துவது, அந்த நற்செயலைச் செய்தவருக்கு ஆர்வமூட்டுகிறது. இன்னும் உபகாரத்தைப் பெற்றவர் அந்த உபகாரத்தை பாதுகாத்து, மதித்து, அழகிய முறையில் அதை அங்கீக்க வேண்டுமென்ற நடைமுறையை ஏற்படுத்துகிறது. இப்பண்பினால் சமூக உறுப்பினடையே பாச உறவுகள் உறுதி அடைகின்றன. இதுதான் இஸ்லாம், சமூகத்தில் ஊன்ற விரும்பிய பண்பாகும்.


மக்களுடன் கலந்துறவாடுவார், சிரமங்களைச் சகித்துக் கொள்வார்


மார்க்கத்தைப் பேணிவரும் முஸ்லிம், மக்களுடன் கலந்துறவாடி அவர்களால் ஏற்படும் துன்பங்களை பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் பல்வேறு கடமைகளைச் சுமந்து, அழைப்புப் பணிபுரியும் இஸ்லாமிய வழிகாட்டியாவார். இந்த மகத்தான, முக்கியத்துவம் வாய்ந்த இலட்சியத்தைக் கொண்டிருப்பதால் அவர் இறைவழியில் தியாகம் செய்ய தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.


அழைப்புப் பணியை செய்யும்போது எதிர்வரும் சிரமங்களையும், துன்பங்களையும் சகித்துக்கொள்ள வேண்டும். மனிதர்களின் தீய சிந்தனைகளால் ஏற்படும் ஆபத்துகள், தீய நடத்தைகள், சத்தியத்தை ஒப்புக்கொள்வதில் ஏற்படும் தயக்கம் போன்ற இடையூறுகளை பொறுமையுடன் எதிர்கொண்டு தன்னையும் சமூகத்தையும் சீரமைப்பதில் ஆர்வம்கொள்ள வேண்டும்.


உண்மையில் அழைப்பாளரை இவ்வாறான கசப்பான அனுபவங்கள் சோர்வடையச் செய்யும்போது அவர் மக்களிடமிருந்து விலகி ஒதுங்கிப் போய்விடுமளவு மன நெருக்கடிக்கு ஆளாகிறார்.


இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் முஃமின் களின் மனஉறுதியை பலப்படுத்துவதாக, அவர்களது பாதங்களை ஸ்திரப்படுத்துவதாக அமைந்துள்ளது. அழைப்புப் பணியின் நீண்ட பாதையில் செல்லும்போது அதன் சிரமங்களை சகித்துக்கொள்பவர் சிரமங்களை எதிர்கொள்ளாமல் ஒடி ஒளிபவரைவிட மிகச் சிறந்தவர் என நபிமொழி பறைசாற்றுகிறது.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுடன் கலந்துறவாடி அவர்கள் தரும் துன்பங்களை சகித்துக்கொள்ளும் முஃமின், மக்களுடன் கலந்துறவாடாமல் ஒதுங்கி, அவர்கள் தரும் துன்பங்களை சகித்துக் கொள்ளாதவரைவிட சிறந்தவராவார். (அல் அதபுல் முஃப்ரத்) நபி (ஸல்) அவர்களும், அவர்களுக்கு முன்னிருந்த இறைத் தூதர்களும் அம்மக்களின் மூடத்தனங்களையும், அவதூறுகளையும், முரட்டுத்தனங்களையும், பொறுமையுடன் சகித்துக்கொண்டதில் நமக்கு முன்மாதிரிகளாகத் திகழ்கின்றனர். ஒவ்வொரு ஏகத்துவ அழைப்பாளரும் இதை அறிந்து கொண்டால் பகைமைகளும், கொடுமைகளும் அவர்களை சூழ்ந்துகொள்ளும்போது பொறுமைம்ழந்து விடாமலிருக்க மிகவும் உதவிகரமாக அமையும்.


மகத்தான பொறுமைக்கான சான்றுகளில் ஒன்று, ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடையே சில பொருட்களை பங்கிட்ட போது அன்சாரி ஒருவர் “இது அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடாத பங்கீடாகும்" என்று கூறினார்.


இந்த அநீதமான வார்த்தை நபி (ஸல்) அவர்களின் செவியை எட்டி, மிகுந்த கஷ்டத்தைக் கொடுத்தது. கோபத்தால் முகம் மாறியது. பிறகு கூறினார்கள் “இதைவிட அதிகமான நோவினை மூஸாவுக்கு கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள்." (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


இந்த சிறிய வார்த்தையுடன் நபி (ஸல்) அவர்களின் கோபம் தணிந்து, ஆவேசம் அகன்றது. வள்ளல் தன்மை கொண்ட விசாலமான அவர்களது மனமும் அமைதியடைந்து விட்டது.


இதுதான் இறைத்தூதர்கள், சத்திய அழைப்பாளர்கள் எல்லாக் காலங்களிலும் எல்லாநிலைகளிலும் வெளிப்படுத்திய பண்பாகும். மனிதர்களின் அவதூறுகள் மற்றும் வசைச்சொற்களால் ஏற்படும் துன்பங்களை பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள். இக்குணத்தினால்தான் அழைப்பாளர்கள் தங்களது அழைப்புப் பணியை உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் செய்துவர முடியும். நேரிய சிந்தனையுடைய முஸ்லிம், மனிதர்களை நேசித்து, அவர்களுடன் நல்லுறவை மேற்கொண்டு, அவர்களது தீமைகளைச் சகித்துக் கொள்வதுடன் அவர்கள் அறிவீனர்களாக இருந்தாலும், முகமலர்ச்சியுடன் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். முஃமின், மனிதர்களுடன் கலந்துறவாடுவதில் விவேகத்துடன் நடந்து கொண்டு, அவர்களது கெடுதிகளிலிருந்தும் கீழ்த்தரமான செயல்களி லிருந்தும் தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரியபோது நபி (ஸல்) "அவருக்கு அனுமதி அளியுங்கள், அவன் மிகக் கெட்டவன்" என்று கூறினார்கள். ஆனால் அம்மனிதர் வந்தவுடன் மென்மையாக உரையாடினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் “(அவரைப்பற்றி) ஏதேதோ சொன்னீர்கள். பின்பு அவரிடம் மென்மையாக உரையாடினீர்கள்!" என்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள் "ஆயிஷாவே! எவனுடைய கீழ்த்தரமான நடத்தையை அஞ்சி மக்கள் அவனைப் புறக்கணித்து விடுகிறார்களோ அவனே அல்லாஹ்விடம் மனிதர்களில் மிகக்கெட்டவன்" என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)


அபூ தர்தா (ரழி) அவர்கள் "சில சமூகத்தாரின் முகத்துக்கு முன் நாங்கள் பல்லைக் காட்டுகிறோம், ஆனால் எங்கள் இதயங்கள் அவர்களை சபித்துக் கொண்டிருக்கின்றன" என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)


மனிதர்களின் நடைமுறை எல்லா நேரத்திலும் அழைப்பாளன் விருப்பத்திற்கேற்ப அமைந்திருக்காது. முரண்பட்ட சிந்தனையுடைய மனிதர்கள் அதிகம் உள்ளனர். அதனால் அழைப்பாளர் இம்மாதிரி யானவர்களை சந்திக்கும்போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும், மனிதர்களை சத்தியத்தின்பால் அழைப்பதற்காக அவர்களுடன் கலந்துறவாடும்போது மென்மையான அணுகு முறையை மேற்கொள்ள வேண்டும்.


இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புவார்


பிரகாசமான இதயமுள்ள முஸ்லிம் சமூகத்தாடையே மகிழ்ச்சியை பரவச்செய்ய வேண்டும். இவ்வாறு அல்லாஹ் அனுமதித்த வழிகளில் மகிழ்ச்சியூட்டுவதை மார்க்கம் விரும்புகிறது, அச்செயலுக்கு ஊக்கமளிக்கிறது. ஏனெனில், அதனால் இஸ்லாமிய சபைகளும், முஸ்லிம்களின் இல்லங்களும் நேசத்தை எதிரொலிக்கும். இவ்வாறு முஸ்லிம்களின் இதயங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவரை அல்லாஹ் மறுமையில் மகிழ்விக்கிறான்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர் அல்லாஹ் விரும்பியபடி தனது முஸ்லிமான சகோதரரை சந்தித்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினால் மறுமை நாளில் அல்லாஹ் அவரை மகிழ்ச்சிப்படுத்துவான்." (முஃஜமுத் தப்ரானி)


இஸ்லாம் அனுமதித்த எத்தனையோ மகிழ்ச்சிகளை முஸ்லிம் தனது சகோதரர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியும். அழகிய வார்த்தைகள், மகிழ்வூட்டும் முகமலர்ச்சி, ஆறுதல் தரும் அன்பு, மனத்தூய்மையான சந்திப்பு, உண்மையான உதவி மற்றும் இவ்வாறான செயல்களால் இதயங்கள் திறக்கப்படுகின்றன. வெறுப்பு, கோபம், பொறாமை போன்ற தீய குணங்கள் நீங்குகின்றன.


முஸ்லிமின் வளர்ப்பும் மற்றும் அவருக்கு கற்பிக்கப்பட்ட ஒழுக்கமுறைகளும் அவருக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தை ஏற்படுத்தி. மனிதர்களின் நேசத்திற்குரியவராகவும் அவரை ஆக்கிவிடும்.

கருத்துகள்