குடும்ப சந்திப்புகளில் ஆண் பெண் கலப்பு
குடும்பச் சந்திப்புகளின்போது ஆண்களை விட்டுப் பெண்களைப் பிரிக்க வேண்டும்.
பொதுவாகவே மனிதன், மக்களைச் சந்தித்துப் பேசி இன்புறும் பழக்கம் உள்ளவனாக இருக்கிறான். எல்லோருக்கும் நண்பர்கள் இருப்பார்கள். நண்பர்களுக்குள் சந்திப்பு அவசியமான ஒன்றே.
சொந்த பந்தங்களுக்கு இடையில் சந்திப்புகள் நிகழும் போது ஆணும் பெண்ணும் மார்க்க வரம்புகளை மீறி, முறையற்று கலந்துரையாடுவது கட்டாயம் தடுக்கப்பட வேண்டியதாகும்.
ஆணும் பெண்ணும் முறையின்றி கலந்துரையாடுவதை மார்க்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அதற்கு மிகப் பெரியதோர் ஆதாரமாக ஸூரா அல் அஹ்ஸாபின் 53-ஆம் வசனத்தை அறிகிறோம். அதில் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்:
"..நபியுடைய மனைவிகளிடம் யாதொரு பொருளை நீங்கள் கேட்(கும்படி நேரிட்)டால், (நீங்கள்) திரை மறைவிலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். இது உங்கள் உள்ளங்களையும், அவர்களுடைய உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும்."
(அல்குர்ஆன் 33:53)
குடும்பச் சந்திப்புகளில் ஆணும் பெண்ணும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி கலந்துரையாடுவது பெரிய தவறுகளையும் தீய பின்விளைவுகளையும் உருவாக்கி விடுகிறது. அந்த தீய பின்விளைவுகள் பின்வருமாறு:
முதலாவது, இப்படியான சூழ்நிலைகளில் பெண்கள் தங்களது ஹிஜாபை (பர்தாவை) விட்டு விடுகிறார்கள்; அல்லது அரைகுறையாக ஹிஜாபைப் பேணுகிறார்கள்.
ஒரு பெண் தனது அலங்காரங்களைத் தன் கணவனைத் தவிர வேறு எந்த அன்னிய ஆணிடமும் வெளிப்படுத்தக் கூடாதென்று அல்லாஹ் தடுத்திருக்க, அந்தப் பெண்ணோ அவற்றை அன்னியர்களுக்கு வெளிப்படுத்தி விடுகிறாள்.
அல்லாஹ் கட்டளையிடுகிறான்:
"(பெண்கள்) தங்கள் உடலில் (பெரும்பாலும்) வெளியில் இருக்கக் கூடியவற்றைத் தவிர தங்கள் (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொள்ளட்டும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளட்டும்.”
(அல்குர்ஆன் 24:31)
பலர் தங்கள் வீட்டில் கணவனுக்காக அலங்கரித்துக் கொள்வதைவிட பொது இடங்களுக்குச் செல்லும்போது அன்னியர்கள் பார்ப்பதற்காக அலங்கரித்துக் கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.
இரண்டாவது, சபையில் பெண்களை ஆண்கள் பார்ப்பது மார்க்கப்பற்றையும் நல்லொழுக்கத்தையும் அழித்து, இச்சையின் தவறான தூண்டுதலுக்கு வழிவகுக்கிறது.
மூன்றாவது, இதனால் பல குழப்பங்களும் சண்டை
சச்சரவுகளும் ஏற்படுகின்றன. ஒருவர் மற்றவரின் மனைவியைப் பார்ப்பது. அவளுடன் சிரித்துப் பேசுவது, அவளைச் சுட்டிக் காட்டிப் பேசுவதும் ஏற்படும். அல்லது இதற்கு மாற்றமாகவும் ஏற்படலாம். அதாவது, பெண், அன்னிய ஆணைப் பார்ப்பது, அவருடன் சிரித்துப் பேசுவது, அவரைச் சுட்டிக்காட்டிப் பேசுவதும் நிகழும். இதன் பிறகு கணவன் - மனைவி வீடு திரும்பியவுடன் சண்டை சச்சரவுகள், மனக்கசப்புகள் நிகழும். பிறகு. அவற்றைத் தொடர்ந்து விவாகரத்துகள் ஏற்படுகின்றன.
நான்காவது, பலரும் கூடியிருக்கும் ஒரு சபையில் கணவன் தன் மனைவியைப் பற்றி, மனைவி தன் கணவனைப் பற்றி குறைகூறுகின்ற அல்லது குறையாக கருதுகின்ற வாய்ப்புகளும் ஏற்பட்டு விடுகின்றன.
ஒருவரின் அழகான மனைவியைப் பார்த்துவிட்டு, "அவருடைய மனைவி எவ்வளவு அழகாக இருக்கிறாள்! என் மனைவியிடம் அந்த அழகு இல்லையே?" என்று எண்ணுவதற்கும், "அவள் எவ்வளவு அழகாகப் பேசுகிறாள்? எவ்வளவு நாகரிகமாக நடந்து கொள்கிறாள்? என் மனைவிக்கு ஒன்றும் தெரியவில்லையே?" என்றெல்லாம் ஆண்கள் ஆதங்கப்படுவதற்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுவிடுகின்றன.
அல்லது, "அந்தப் பெண் எவ்வளவு கொடுத்து வைத்தவள்? அவளின் கணவன் எவ்வளவு திறமைசாலியாக இருக்கிறான்? என் கணவனுக்கோ ஒன்றும் தெரியவில்லை; சந்திப்புகளில் எப்படி பேசுவது என்றுகூடத் தெரியவில்லை!" என்று மனைவி வருத்தப்படுவதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. இவற்றால் குடும்ப நிம்மதி குலைகிறது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான நேச உறவு பாதித்து விடுகிறது.
ஐந்தாவது, அந்தச் சபைகளுக்கு வரக்கூடியவர்கள்
பகட்டு அலங்காரங்களை செய்கிறார்கள்; போலித்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். உதாரணமாக, கணவன் தன் மனைவியிடம் "அதைச் செய்; இதைச் செய்! இங்கே வா; அங்கே போ!" என்றெல்லாம் அதிகாரம் செய்கிறான். (இது அப்பட்டமாக ஒரு போலி அதிகாரமாகும்.) ஆனால், இதே ஆண் வீட்டிற்குள் சென்ற பிறகோ, தன் மனைவியிடம் கட்டிப் போடப்பட்ட பூனையாக அடங்கி விடுகிறான்.
பெண்களில் பலர் இருக்கிறார்கள். அவர்களோ, இந்தச் சபைகளில் கலந்து கொள்வதற்காகப் பிறரிடமிருந்து தங்க நகைகளை இரவல் பெற்று, அவற்றை அணிந்து வருகிறார்கள். தாங்கள் அணிந்துள்ள தங்க நகைகள் அனைத்தும் தங்களுடையதே என்றும் பெருமையடித்துக் கொள்கிறார்கள். இதனை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கண்டித்துள்ளதை இவர்கள் உணர வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
"தன்னிடம் இல்லாத ஒன்றைக் கொண்டு வெளிப் பகட்டு செய்து கொள்பவன், பொய்யான இரண்டு ஆடைகளை அணிந்தவன் போலாவான். (அதாவது, நிர்வாணமானவன் போலாவான்.) (ஸஹீஹுல் புகாரி)
ஆறாவது, இதுபோன்ற சந்திப்புகளில் இரவின் பெரும்
பகுதிகளைப் பலர் கழிக்கிறார்கள். அதனால், நேரங்கள் வீணாவது மட்டுமின்றி, தவறான பேச்சுகளைப் பேசி பல விபரீதங்களும் நடந்து விடுகின்றன. இச்சபைகளுக்குத் தங்கள் பிள்ளைகளையும் அழைத்துச் சென்றால், அது தங்களின் பொழுது போக்கிற்குத் தடையாக இருக்குமென்று அந்தச் சிறார்களை வீட்டிலேயே தனிமையில் விட்டுச் செல்கிறார்கள். இதனால் மேலும் பல தீமைகள் உருவாகின்றன.
ஏழாவது, இந்த இரவுச் சந்திப்புகளால் பல பெரும் பாவங்களும் அரங்கேறி விடுகின்றன. உதாரணமாக, மது அருந்துவது, சூதாடுவது போன்றவற்றைக் குறிப்பிடலாம். தங்களை மேல்தட்டு மக்களாக நினைத்துக் கொள்வோரிடம் இத்தீய பழக்கங்கள் சகஜமாக இருக்கின்றன.
மேலும், இந்தச் சபைகளில் கலந்து கொள்வோரிடம் இறை நிராகரிப்பாளர்களின் செயல்கள் சர்வ சாதாரணமாகி விடுகின்றன. மாற்று மதக் கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனர்; அவர்களின் செயல்களுக்கு ஒப்பாக நடக்கின்றனர்; அவர்களைப் போலவே ஆடை அணிகின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: "யார் பிற சமயத்தாருக்கு ஒப்பாகிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!”
(முஸ்னது அஹ்மது)
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!