வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
கடுங்குளிர் நிறைந்த ஓர் இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான்.
அரண்மனை வாசலில் மெல்லிய ஆடையுடன் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான்.
"குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா?" என்று கேட்டான்.
"ஆம்! உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை என்னிடம் இல்லையே!" என்றான் காவலாளி.
அதற்கு மன்னன். "கவலைப்படாதே, நான் அரண்மனை சென்று குளிரை தாங்கும் கம்பளி ஆடையை உனக்கு அனுப்புகிறேன்" என்று கூறி அரண்மனைக்குள் சென்றான்.
மன்னரின் வார்த்தையை கேட்டு அந்த காவலாளி அகமகிழ்ந்தான்.
அரண்மனைக்குச் சென்ற மன்னன். தான் வாக்களித்ததை மறந்து விட்டான்.
காலையில் அந்த காவலாளி இறந்து கிடந்தான். அவனருகே ஒரு கடிதம் இருந்தது.
அந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:
"மன்னா! இவ்வளவு நாட்களாக கடும் குளிரை மவுனமாக தாங்கிக் கொண்டிருந்தேன். ஆனால், குளிரைத் தாங்கும் ஆடை கிடைக்கும் என்ற என் எதிர்பார்ப்பு இதுவரை இருந்த என்னுடைய மன உறுதியை குலைத்து என்னைக் கொன்று விட்டது”.
ஆம்! சகோதரர்களே!
மற்றவர்களிடம் நீங்கள் கொடுக்கும் வாக்குறுதி அவர்களிடம் நீங்கள் எண்ணிப் பார்க்காத அளவு நம்பிக்கையை ஏற்படுத்தலாம். எனவே, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.
உங்களின் நிறைவேற்றாத வாக்குறுதி நீங்கள் வாக்களித்தவருக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் அறியமாட்டீர்கள்!
முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (வாக்குறுதிகளை முழுமையாக) நிறைவேற்றுங்கள்.
(திருக்குர்ஆன் 5:1)
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
இறை உதவி
மூஸா (அலை) அவர்கள் பனீ இஸ்ரவேலர்களை (மக்களை) கொடுங்கோலன் ஃபிர்அவ்னிடமிருந்து மீட்டுச் சென்றபொழுது, முன்னால் நைல் நதியோடும் பின்னால் ஃபிர் அவ்னின் படையோடும் பாதை முடிவு பெற்றது.
இவ்வாறு மூஸா நபியைப் பார்த்து மக்கள் அனைவரும். எங்களை துயரத்தில் சிக்க வைத்து விட்டீரே என்று நிந்திக்கலானார்கள்.
மூஸா நபி (அலை) அவர்கள் பனீ இஸ்ரவேலர்களைப் பார்த்து, "என்னோடு எனது இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்" என்று சொன்னார்கள்.
கடல் பிளந்தது. மூஸா (அலை) அவர்களும் பனீ இஸ்ரவேலர்களும் தப்பித்தார்கள் என்பது நாம் அறிந்த வரலாறு.
படிப்பினைகள்:
இறைவனுடைய உதவி மனிதன் தனது இயலாமையை உணரும் பொழுதுதான் கிடைக்கிறது.
நமது உறுதியான இறை நம்பிக்கையின் பயனை இவ்வுலகத்திலேயே காணலாம்.
நமது அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் நிதானப் போக்கை கையாண்டு வாய்மையோடு இருந்தால் வெற்றி நமக்குரியதே.
நமது வாழ்வின் இலக்கு, மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்று இருந்தால், இவ்வுலகும் நமக்கு சுவனமே.
அதற்கு மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள்:
كَلَّا إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِيْنِ
"ஒருபோதும் இல்லை. என்னோடு என் இறைவன் இருக்கின்றான். அவன் திண்ணமாக எனக்கு வழிகாட்டுவான்!"
(திருக்குர்ஆன் 26:62)
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!