ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

மனைவியுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் ..........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

இல்லறம் இனிக்க இன்பத்தில் மிதக்க குடும்பம் சிறக்க ஒருவொர்கொருவர் விட்டு கொடுத்து நடக்க அல்லாஹ்வின் அருள் கிடைக்க அவன் காட்டிய வழியில் நடக்க அல்லாஹ் உங்களை நேசிக்க அவனின் தூதர் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வழியை பின்பற்ற .

[இல்லற வாழ்க்கையில் ] அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் '' என்று இங்கு அல்லாஹ் கூறுகிறான் .
அதாவது நீங்கள் அவர்களிடம் கனிவாகப் பேசுங்கள் . உங்கள் தோற்றத்தையும் செயல்பாடுகளையும் இயன்றவரை அழகிய முறையில் அமைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனைவியர் உங்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று நீங்கள் விரும்புவீர்களோ அவ்வாறே நீங்களும் அவர்களிடம் நடந்துகொள்ளுங்கள் .


மற்றோர் இடத்தில் அல்லாஹ் கூறுகின்றான் .. அந்தப் பெண்களுக்குக் கடமைகள் இருப்பதைப் போன்றே நியாயமான உரிமைகளும் அவர்களுக்கு  உண்டு.

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. மனைவியிடம் சிறந்தவராக விளங்குபவரே உங்களில் சிறந்தவர் . உங்களிலேயே நான் என் துணைவியரிடம் சிறந்தவனாக விளங்குகிறேன்.

என்ன ஒரு அழகான ஆழமுள்ள அதிகமான பொருள்கள் கொண்ட நபி [ஸல்] அவர்களின் வார்த்தைகள் . இதை மேலோட்டமாக பார்த்தால் அதன் பொருள் விளங்காது ஆழமாக சிந்தித்து பார்த்தால் அதன் பொருள் புரியும். ஒரு மனைவியிடம் சிறந்தவனாக விளங்குவது என்பது சாதாரண விடயம் அல்ல . நல்ல பெயர் கிடைப்பது என்பது அது எளிது அல்ல இருப்பினும் அப்படி ஒருவர் தன் மனைவியிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டார் என்றால் , அந்த பெயருக்கு பின்னால் நிறைய பொறுமைகள் , சகிப்பு தன்மை , தியாகம் இவைகள் மறைந்து இருக்கும். ஒரு மனைவியை திருப்ப்திபடுத்துவது என்பது அது லேசான காரியம் இல்லை. அவள் ஒரு சின்ன விஷயத்துக்கு  எல்லாம் குறை காண்பவள் தான் பெண் . அண்ணல் நபி [ஸல்] அவர்கள் தம் மனைவியர்களிடம் சிறந்தவராக விளங்குகிறார்கள் .  அதன் வழியில் தான் ஆண்களாகிய நாம் செல்ல வேண்டும் , சிறந்தவராக விளங்க வேண்டும்.

நபியவர்கள் ஒரு நல்ல குடும்பத் தலைவர்

நபி [ஸல்] அவர்கள் இயல்பாகவே நல்ல குடும்பத் தலைவராக விளங்கினார்கள். அவர்கள் தம் துணைவியரிடம் எப்போதும் சிரித்த முகத்தோடும் கொஞ்சலோடும் பழகுவார்கள் . அவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டு, குடும்பச் செலவுகளுக்கு இயன்றவரை தாராளமாக வழங்குவார்கள். துனைவியரைச் சிரிக்கவைத்து மகிழ்வார்கள். ஆயிஷா [ரலி] அவர்களுடன் ஓட்டப் பந்தயம் நடத்தி. அவர்மீது தாம் கொண்ட அன்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் .

ஆயிஷா [ரலி] அவர்கள் கூறியதாவது.. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஒரு முறை என்னுடன் நடத்திய ஓட்டப் பந்தயத்தில் அவர்களை நான்  முந்திசென்று முதலாவதாக வந்தேன். இது எனக்குச் சதை போடுவதற்கு முன்பு நடந்தது.

பின்னர் ஒரு முறை  எனக்குச் சதை போட்ட பிறகு அவர்களுடன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து  கொண்டேன். அதில் நபி [ஸல்] அவர்கள் என்னை முந்திவிட்டார்கள். அப்போது அவர்கள் , ''அதற்கு இது சமம்'' என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள்.

அல்லாஹ்வின்  தூதர் [ஸல்] அவர்கள் ஒவ்வொரு இரவிலும் எந்தத் துணைவியாரின் இல்லத்தில் தங்குவார்களோ அங்கே எல்லாத் துணைவியரையும்  அழைத்து அவர்களுடன் உரையாடுவார்கள். சில வேலை அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து  இரவு உணவை உண்பார்கள். பின்னர் ஒவ்வொரு துணையாரும் தமது இல்லத்துக்குச் சென்றுவிடுவார்கள். நபி [ஸல்] அவர்கள் மேலாடையைக் கழற்றி விட்டுக் கீழாடையை மட்டும் அணிந்துக் கொண்டு , அந்தக் குறிப்பிட்ட மனைவியுடன் ஒரே போர்வையில் உறங்குவார்கள்.

மேலும் , நபி [ஸல்] அவர்கள் இஷா தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு  உறங்குவதற்கு முன்பு தம் துணைவியரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள் . இது துணைவியின் மனதுக்கு இதமளிப்பதாக இருந்தது.

இதில் நிறைய படிப்பினைகளும் , பாடங்களும்  இருக்கிறது கணவன்மார்களுக்கு . இன்று பெரும்பாலும் அல்லது சில குடும்பங்களில் கணவன்மார்கள் தம் மனைவியர்களிடம் எப்படி நடந்துக் கொள்கிறார்கள்  என்பது  அறிந்தும் பார்த்தும் இருக்கிறோம். சிலர் மனைவியை வேலைக்காரி போன்று  பாவிக்கிறார்கள்  , இன்னும் சிலர் படுக்கையில் மட்டும் பாவிக்கிறார்கள். இன்னும் பலர் ரொம்ப மோசமாக மனைவியிடம் நடக்கிறார்கள்.  இன்னும் விரிவாக சொல்லிக் கொண்டே போகலாம்...........

மனைவியை வெறுக்காதீர்கள்
''அவர்களை நீங்கள் வெறுத்தாலும் [பொறுமையைக் கடைப் பிடியுங்கள். ஏனெனில்]  நீங்கள் ஒன்றை வெறுக்கலாம் . [ஆனால்] அதில் அல்லாஹ் அதிகமான நன்மைகளை வைத்திருக்கலாம்'' [
அல்குர் ஆன் ]

அதாவது நீங்கள்  அவர்களை வெறுத்தபோதும் அவர்களை வீட்டிலிருந்து விரட்டிவிடாமல் பொறுமையோடு அவர்களுடன் குடும்பம் நடத்துங்கள். அதனால்  இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு அதிகமான நன்மைகள் ஏற்படலாம்.

இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கல்கூரியதாவது.. மனைவியிடம் கணவன் அன்போடு நடந்துகொள்ள வேண்டும். அப்போது அவள் மூலம் அவனுக்குக் குழந்தை பிறக்கலாம். அந்தக் குழந்தையில் அவனுக்கு அதிகமான நன்மைகள் கிடைக்கலாம்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. இறைநம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறைநம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை [அடியோடு] வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடம் அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கொண்டு திருப்தி அடையட்டும்.

இன்னும்  நிறைய அதிகமான ஹதீஸ்கள் இருக்கின்றன . கணவன் எப்படி தம் மனைவியிடம்  நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் , இன்னும் பல இல்லற வாழ்க்கையையும் பற்றியும்  ஹதீஸ்களில் நாம் காண முடியும்.

இன்ஷாஅல்லாஹ்  வருகின்ற காலத்தில் நாம் அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் காட்டிய வழிமுறையில்  நாம் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்  . அல்லாஹ் நம் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக.....ஆமீன்.....
அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!