சனி, ஆகஸ்ட் 15, 2015

எண்ணப்படியே முடிவும் இருக்குமா ?[படிப்பினை இருக்கிறது ]

அல்லாஹ்வின் திருபெயரால் .......
சத்தியம் வந்தது! அசத்தியம் அழிந்தது! நாம் முஸ்லிமாக இருப்பதற்கு ''எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே '' நாம் இங்கு குறிப்பிட்டுள்ள ஓர் சம்பவம் அது கதையா அல்லது உண்மையா என்பதை அல்லாஹ் மிக்க அறிந்தவன். அதில் நமக்கு சில படிப்பினைகள் இருக்கிறது. வெளிநாட்டில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு சிலருக்கு பாடமாகவும், படிப்பினையாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.


நமது நாட்டில் ஓர் ஊரில் ஒரு செல்வந்தர் இருந்து வந்தார் . மேலைநாட்டு நாகரீக மோகம் பிடித்த அவர் நஸ்ராக்களுடைய வாழ்க்கையை மிகவும் நேசித்து, அதன் படி தம்முடைய வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டார். அவருக்கு வாலிப வயதுடைய ஒரு மகனும் இருந்தார். தம்முடைய மகனையும் நஸாராக்களுடைய வாழ்க்கையைப் போன்று வாழும்படி உபதேசம் செய்தார். ஆனால் அந்த வாலிபரோ, அத்தகைய வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார் . காரணம் எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த வாலிபருக்கு சிறுவயதிலேயே ஹிதாயத் என்னும் நேரிய வழியை அளித்து இருந்தான். அந்த செல்வந்தர் எவ்வளவு முயன்றும் தம்முடைய மகனை அவருடைய வழிக்குக் கொண்டு வரமுடியவில்லை.

எனவே, லண்டனிலுள்ள தம்முடைய நண்பரின் வியாபார நிறுவனத்திற்கு  அந்த வாலிபரை அனுப்பி வைத்தார். காரணம் தம்முடைய மகன் லண்டனுக்குச் சென்றால் அங்குள்ள சூழ்நிலையில் பழகிப் பழகி யூத, கிறிஸ்தவர்களின் பழக்க வழக்கங்கள் வந்து விடும் என்ற ஆவல்தான். அவ்வாலிபர் லண்டனிலும் இஸ்லாமிய முறைப்படியே தான் வாழ்க்கை நடத்தி வந்தார் . ஐங்காலத் தொழுகையில் பேணுதலும் , குர்ஆன் ஷரீப் ஓதுவதிலும் , இறைவனை தியானிப்பதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார் .

இது போன்ற செயல்களை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு வெள்ளைக்காரப் பெண், ஒரு நாளன்று  அந்த வாலிபர் அவருடைய அறையில் தனிமையில் இருந்த பொழுது நுழைந்து விட்டாள் .அப்பொழுதே வெளியே சென்று விடும்படியாக அந்த பெண்ணிடம் அவ்வாலிபர் சொன்னார். காரணம் இஸ்லாமிய சட்டம் என்ன சொல்கிறது .. ஒரு பெண்ணும் ஆணும் தனிமையாக இருப்பதை அனுமதிக்கவில்லை. அந்நிய ஆணுடன் ஒரு பெண் தனிமையாக இருப்பதால் பல தீமைகள் உண்டாகலாம். இருவருக்கிடையில் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பதாக ஹதீஸின் கருத்து. எனவேதான் அந்த பெண்ணை வெளியே சென்று விடும்படி அந்த  வாலிபர் கேட்டுகொண்டார்.

அந்த பருவமெய்திய பெண் வேறு யாருமில்லை லண்டனிலுள்ள அவருடைய தந்தையின் நண்பருடைய மகள் தான் அவள் . அவ்வாலிபரை நோக்கி,  ''பயப்பட வேண்டாம்'' தவறாகவும் புரிந்துக் கொள்ள வேண்டாம். எனக்கு உங்களிடமிருந்து சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள  வேண்டுமென்ற ஆவலினால்தான் உங்கள் அறியினுள் வந்தேன்'' என்று அப்பெண் மிகப் பணிவுடன் கூறினாள் .  '' என்ன விஷயங்களை விளங்க வேண்டும் ?'' என்று வாலிபர் அந்த பெண்ணிடம் கேட்டார்.  '' நீங்கள் தினந்தோறும் செய்யக் கூடிய செயல்கள் எனக்கு மிகவும்  பிடித்திருக்கின்றன. எனவே, இஸ்லாமிய செயல் திட்டங்களை எனக்கு விபரமாகச் சொல்லித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்'' என்று அப்பெண் வேண்டினாள் .

இஸ்லாமிய வணக்கமுறைகள், மறுமை வாழ்க்கையைப் பற்றிய விஷயங்கள் மற்றும் ஈமான்- யகீனுடைய விஷயங்கள் எல்லாம் அந்த பெண்ணிடம் அவ்வாலிபர்  கூறியதும் புனிதமான தீனுல் இஸ்லாத்தை அப்பெண் ஏற்றுக் கொண்டு கலிமா ஷகாதா  கூறி இஸ்லாமிய பெண்களின் ஒரு பெண்ணாக ஆகிவிட்டாள் [அல்ஹம்துலில்லாஹ்]

இதற்கிடையில் அவ்வாலிபருடைய  தந்தை இந்தியாவில் நோயுற்று இருப்பதாக லண்டனுக்கு தொலைபேசியின் மூலமாக செய்தி கிடைத்தது.  எனவே  , தம் தந்தையை நேரில் பார்க்க வேண்டுமென்று எண்ணத்துடன் லண்டனிலிருந்து விமான மூலம் இந்தியாவுக்கு வந்தார். வந்த உடனேயே தந்தையும் மரணமடைந்து விட்டார். இஸ்லாமிய மார்க்கச் சட்டப்படி தந்தை செய்யவேண்டிய  கிரியைகளை செய்யப் படப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில் லண்டனில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அப்பெண்ணும் மரணித்து விட்டதாக இந்தியாவுக்கு வந்திருந்த வாலிபருக்கு தகவல் கிடைத்தது. அப்பெண் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிமாக மாறின செய்தி யாருக்கும் தெரியாது. எனவே, அவளை கிருஸ்தவ முறைப்படிதான் அடக்கம் செய்திருப்பார்கள் என்று எண்ணி உடனே லண்டனுக்கு புறப்பட்டார். அந்த பெண்ணுடைய மண்ணறையை தோண்டிப் பார்த்ததும் அதிர்ச்ச்யடைந்தார்.

காரணம் அந்த மண்ணறைக்குள் அப்பெண்ணுடைய உடலிற்கு பதிலாக தம்முடைய தந்தையின் உடலைக் கண்டதுதான். மனவேதனையுடன் உடனடியாக இந்தியாவிற்கு வந்து தம்முடைய தந்தையின் கப்ரைத் தோண்டிப் பார்க்கின்ற பொழுது லண்டனில் அடக்கம் செய்யப்பட்ட அப்பெண்ணுடைய உடலைக் கண்டார்.

தம்முடைய தந்தை நஸாராக்களின் வாழ்க்கையைப் பின்பற்றி இஸ்லாமிய வாழ்க்கை முறையை வெறுத்து வந்தார். அவருடைய எண்ணப்படியே நஸாராக்களுடைய மண்ணறைக்குச் சென்று விட்டார். இஸ்லாமிய வாழ்க்கை முறையை அப்பெண் நேசித்து வந்த படியினால் முஸ்லிம்களின்  மண்ணறைகளுடன்  அப்பெண்ணுடைய உடல் சென்று விட்டது.

படிப்பினை.. மேற்கண்ட சம்பவத்திலிருந்து நமக்கு பல படிப்பினைகள் கிடைக்கின்றன. அதாவது ஒவ்வொரு மனிதனும் எதை அதிகம் நேசிக்கின்றானோ அவனுடைய முடிவு அதன்படியே நடைபெறுகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனவைரையும் இதுபோன்ற ஆபத்திலிருந்து காப்பாற்றி ஈமானுடன் வாழ்ந்து ஈமானுடன் மரிக்கச் செய்வானாக.
சிந்திப்போம் ! சிந்திப்போம் சிந்திப்போம் !
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.       

1 கருத்து:

  1. பெயரில்லா19 ஆகஸ்ட், 2017

    உங்கள் கருத்தை உள்ளிடுக...சூப்பர் கட்டுக்கதை...இப்டிலாம் எழுத அறிவே தேவை இல்லை...தெரியுமா

    பதிலளிநீக்கு

Welcome to your comment!