வியாழன், ஜூன் 04, 2020

சிந்தித்துச் செயலாற்றுங்கள்.



 
அருமையான குட்டிக் கதை அவசியம் படியுங்கள்.

🤔🤔சிந்தித்துச் செயலாற்றுங்கள். 

ஐந்து வயது சிறுமி தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையைப் பார்த்தாள். அது வேண்டுமென தன் தாயிடம் அடம் பிடித்தாள்.

“இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை" என்றாள் தாய்.

நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பா கிட்டச் சொல்லி 'ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்' மாலை வாங்கி தரச் சொல்றேன்... இது வேண்டாம்மா" என்றாள் தாய்.

ஆனால் அச்சிறுமி, அழுது பிடிவாதம் செய்து அந்தப் ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்...

அந்த சிறுமிக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப் போனது. 

அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள் உடன் வைத்திருந்தாள். 

பள்ளிக்குச் செல்லும் போதும், நண்பர்களுடன் விளையாடும் போதும், ஏன் படுக்கும் போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள்.

பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தால் அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ தாய் சொல்லியும் கூடக் கேட்கவில்லை.  எப்போதும் அதைப் பிரிய மனமில்லை அவளுக்கு. 

அச்சிறுமியின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் குழந்தை படுக்கும் முன் கதை சொல்வார். ஒரு நாள் கதை சொல்லி முடித்ததும் கேட்டார், “மகளே.. என்னை உனக்குப் பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்பப் பிடிக்கும்.”

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்குத் தரீயா?”

“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. என்னோட பிங்கி பொம்மையை வேணா எடுத்துக்கோங்க.. ஆனா முத்துமாலை மட்டும் தர மட்டேன்ம்பா...” என்றாள்.

"பரவால்லை குட்டிம்மா..."  என்று புன்னகையுடன் பதில் சொன்னார் தந்தை.

இன்னொரு நாள் மீண்டும் கேட்டார், “மகளே..என்னை உனக்குப் பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்பப் பிடிக்கும்” 

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?” மீண்டும் கேட்டார்.

“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. வேணும்னா என்னோட குதிரை பொம்மையை எடுத்துக்கோங்க... முத்துமாலைய மட்டும் கேக்காதீங்கப்பா ப்ளீஸ்... அதமட்டும் நான் தர மட்டேன்.” என இம்முறையும் அழுத்தமாக மறுத்தாள் அச்சிறுமி.

இப்போதும் அதே புன்னகையுடன் “பரவால்லை குட்டி..” என்றார் தந்தை.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள், தந்தை இரவு கதை சொல்ல வந்த போது....சிறுமி ஒரு தயக்கத்துடன், “இந்தாங்கப்பா...” எனச் சொல்லிக் கொண்டே ஒரு சிறிய பெட்டியைத் திறந்து அதிலிருந்த அவளின் விருப்பமான முத்துமாலையை எடுத்து தந்தையின் கைகளில் தந்தாள். அது பழசாகியும்... சில முத்துக்கள் உடைந்தும் போயிருந்தன.

அதை ஒரு கையில் வாங்கிக் கொண்ட தந்தை, மறுகையால் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நீல வெல்வெட் பெட்டியை எடுத்தார். அதில் உண்மையான முத்துக்களால் ஆனா ஒரு அழகிய முத்துமாலை இருந்தது.

அவர் அதை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். குழந்தை தன் மலிவான மாலையைத் தருவதற்காகக் காத்திருந்தார் அவர்... அதைத் தந்தவுடன் அந்த உண்மையான மாலையைக் கொடுத்தார்.

"இதை உனக்குத் தருவதற்காகத் தான்டா குட்டி... நான் தினமும்  அந்த ப்ளாஸ்டிக் மாலையைக் கேட்டேன்..." என்றார் தந்தை.

இந்தத் தகப்பன் யாருமல்ல... நம் எல்லோரையும் படைத்த  இறைவன்...
அந்தக் குழந்தை தான் நாம்.

ஆம். இதுபோலத்தான் நாமும் நம் வாழ்க்கையில் சில மலிவான விஷயங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கைவிடுவதற்கு தயாராக இல்லை.

அத்தகைய போலியான விசயங்களை கைவிட்டால் இறைவன் உண்மையான, நிரந்தரமான நிம்மதியை நமக்குப் பரிசளிப்பான்.

நமது மோசமான பழக்கங்கள், செயல்கள், தீய நட்புகள்,உறவுகள்... போன்ற எது வேண்டுமானாலும்  நம்முடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கலாம்.. அவைகளால் நமக்கு பாதிப்பு எனத் தெரிந்தும் கூட கைவிட கடினமானவைகளாக இருக்கலாம்...

ஆனால் அவைகளை எல்லாம் விட சிறந்தவைகள் நமக்காகக் காத்திருக்கின்றன.அத்தகைய சிறப்பான ஒன்றைப் பெற வேண்டுமானால் போலியான மலிவான விசயங்களை நாம் கைவிட  வேண்டும்.

அன்பே வடிவான இறைவன் சிறந்த ஒன்றைத் தராமல் நம்மிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்வதில்லை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!