ஞாயிறு, டிசம்பர் 08, 2013

பிரார்த்தனை அதன் சிறப்பும்,மாபெரும் செல்வமும்.




அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

உண்மையில் "துஆ " என்பது முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் செல்வம், அறிய அருட் கொடை; விசேஷபாக்கியமாகும். துஆவைக்  கொண்டு அல்லாஹ்விடமிருந்து  நாம் இம்மை  மறுமையின் சகல தேவைகளையும் நிச்சயம் அடைந்து கொள்ளலாம் .
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது உம்மத்தினரை , உலகப் பொருட்களுக்கோ உலகச் செல்வங்களுக்கோ  அடிமைப்பட்டு , அவைகளை எதிர் பார்த்து வாழ்பவர்களாக ஆக்கி செல்லவில்லை . மாறாக நம்மையெல்லாம் துஆக்காரர்கலாக ஆக்கி சென்றுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த அமல்கள் யாவற்றிலும் துஆ இல்லாத அமல் ஒன்றுமே இல்லை . சாப்பிடும்போதும் , தூங்கும் போதும் , வீட்டில் நுழையும் போதும் வெளியேறும் போதும் மஸ்ஜிதில் நுழையும் போதும் , வெளியேறும் போதும் , தொழுகையிலும் , தொழுகைக்குப் பிறகும் , நோன்பிலும் , ஹஜ்ஜிலும் , மலஜலம் கழிக்கச் செல்லும் போதும் இவ்வாறாக எல்லா அமல்களிலும் துஆச் செய்யும் வழிமுறையை கற்றுத் தந்துள்ளார்கள் . ஆகையினால்தான்  " துஆவைக் காட்டிலும் அல்லாஹ்விடம் ஏற்றமானது வேறு ஒன்றுமில்லை " என்று கூறப்பட்டுள்ளது . மேலும் , 'துஆ  முஃமினின் ஆயிதம் , தீனின் தூண் , விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒளி " என்ற ஹதீஸை ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் .


ஒரு ஹதீஸில் "அல்லாஹ், நிச்சயமாக கருணையும் கிருபையுடையவன் . எனவே அடியான் தன்னளவில் கரங்களை உயர்த்திக் கேட்பின் அதிலே நல்லது எதையும் அளிக்காமல் வெறும் கரங்களாகத் தட்டிக் கழிக்க அல்லாஹ் பெரிதும் வேட்கமடைகிறான் " என வந்துள்ளது இந்த ஹதீஸை ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஃமினான ஒருவர் துஆச் செய்கிறார் . அவர் உறவை முறிக்க்கவுமில்லை ; எவ்வித பாவமான காரியத்தைக் குறித்தும் கேட்கவுமில்லை ; அவ்வாறாயின் அவருக்கு மூன்று விஷயங்களில் ஏதேனும் ஒன்றை அல்லாஹ் அளித்தே தீருவான் .

முதலாவது , அல்லாஹ்விடம் அவர் கேட்டதே  கிடைக்கும் அல்லது அதற்க்கு பதிலாக அவருக்கு நிகழவிருந்த ஆபத்து துஆவின் பொருட்டால் அகற்றப்படும் .அல்லது அந்த துஆவிற்குறிய நன்மைப் பயனைத் திரட்டி மறுமையில் அந்த நன்மைகள் அவருக்கு அளிக்கப்படும் .

இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் தனது அடியானை விளித்து , அடியானே! என்னிடம் இறைஞ்ச்மாறு  நான் உன்னைப் பணித்திருந்தேன்! அதை அங்கீகரிப்பதாகவும்  வாக்களித்திருந்தேன் , எனவே நீ என்னிடம் துஆக் கேட்டாயா ? என விசாரிப்பான் . அதற்க்கு ஆம் ! கேட்டிருந்தேன் என அடியான் கூறுவான் .அப்போது இறைவன் நீ இறைஞ்சிய பிரார்த்தனை அனைத்தையும் நான் அங்கீகரிக்காமலில்லை . இன்ன இன்ன துன்பத்தை நீக்கும்ப்படி வேண்டிருந்தாய் .ஆனால் ,அதன் பலனை உன்னால் அறிய முடியாது . நான் அதற்குப் பதிலாக உனது பங்கில் இன்ன இன்ன நன்மைகளைப் பதிவு செய்துள்ளேன்  என அறிவிப்பான் .

இவ்வாறு அவனுக்கு உலகத்திலேயே பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட துஆக்களும் , மறுமையில் நன்மைகளாக பதிவு செய்யப்பட்ட துஆக்களும்  அந்த அடியானுக்கு அறிவிக்கப்படும் .அப்போது அந்த அடியான் அந்த நன்மைகளின் மேலான அந்தஸ்துக்களைக் கண்டு , என்னுடைய எந்த துஆவின் பலனும் உலகில் கிடைக்கப் பெறாமளிருந்து , மறுமையில் என் பங்கில் நன்மைகள் பதிக்கபட்டிருந்தால் நன்றாய்  இருந்திருக்குமே ! என விரும்புவான் என அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அருள் மொழி பகர்ந்துள்ளார்கள்.


மேலும் "துஆவை விடச் சிறந்த (அமல்) வணக்கம் வேறில்லை என்றும் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள் .

ஹதீஸ்களில் துஆவின் சிறப்புகளைப் பற்றி பெரிதும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது . அல்லாஹ்விடம் இறைஞ்சி துஆக் கேட்பது ஒரு முஃமினின் சிறப்பான பண்பாகும். தன்னிடம் கேட்பவரை அல்லாஹ் நேசிக்கிறான் . கேட்க்காதவனைக் கண்டு வெறுப்படைகின்றான். ஆகையினால் தான் அல்லாஹுதஆலா தனது திருமறையிலே " எனது அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் , நிச்சயம் நான் சமீபத்திலிருக்கின்றேன் . அழைப்பவரின் அழைப்பிற்கு பதில் கூறுகிறேன் " என்றும் , வேறு ஒரு இடத்தில் , என்னை நீங்கள் அழையுங்கள் ! உங்களுக்கு பதில் கொடுக்கிறேன் " என்றும் பிறிதோர் இடத்தில் " உங்கள் இரட்சகனை மிகுந்த பரிவோடும் மறைவாகவும் அழையுங்கள் " என்றும் திருவுளமாகியுள்ளான். ஆகவே , துஆவின் பால் அக்கறை செலுத்தாமல் இருப்பது மாபெரும் நஷ்ட்டமாகும் .

ஒரு முறை பெருமானார் (ஸல்) அவர்கள் மிம்பர் மேடை மீது ஏறி , அல்லாஹ்வைப் புகழ்ந்து ,அவனைத் துதி செய்து பின்னர் கூறலானார்கள் :
ஜனங்களே ! ஒரு காலம் வரும் முன்னர் நீங்கள் நன்மையான காரியங்களை ஏவிக்கொண்டே இருங்கள் . தீமையான காரியங்களை விட்டுத் தடுத்துக் கொண்டே இருங்கள் . (இப்புனித சேவையைக் கைவிட்டுவிடுவதனால் , அக்காலம் சம்பவித்து விடுமாயின் ) நீங்கள் துஆச் செய்தால் , உங்கள் துஆவை நான் ஏற்க மாட்டேன் ; நீங்கள் என்னிடம் கேட்டால் நான் உங்களுக்குத் தரமாட்டேன் . இன்னும் நீங்கள் உங்கள் பகைவர்களுக்கு எதிராக என்னிடம் உதவி கோரினால் நான் உங்களுக்கு உதவி செய்யமாட்டேன்  என்று அல்லாஹ் கூறுகிறான் " இவ்வுபதேசத்தைப் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்து விட்டு மிம்பர் படிகளிருந்து  இறங்கி விட்டார்கள்.
ஆதாரம்:இபுனு மாஜா )

ஒரு முக்கியமான விடயம்: ஹராமான உணவு , உடை சம்பாதிப்பு இவைகளை விட்டும் தவிர்ந்து கொள்ளவும்.

" எத்தனையோ திக்கற்றவர்கள்  வானத்தின் பக்கம் கையேந்தி , யாரப்பு ! யாரப்பு! (என் இரட்சகனே ! ) என்று துஆச் செய்கின்றனர்  . ஆனால் , உணவு ஹராம் அவர்களின் குடிப்பு ஹராம் , ஆடை ஹராம் , இந்நிலையில் துஆ அங்கீகரிக்கப்படுவது  எங்கனம்? என அருமை நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் .

"துஆவின் சிறப்பைப் பற்றி நிறைய ஹதீஸ்கள் உள்ளன . துஆ கேட்பதினால் ஏற்படும் இம்மை ,மறுமை பலன்கள் அதிகம் .
நாம் அதிகம் அதிகம் துஆச் செய்வோம்! நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்காக ! நம் சமுதாய மக்கள்காக ! நம் உறவினர்கள் அவர்களுக்காக ! இன்று அதிக சில மக்கள்கள் நோய் வாய்ப்பட்டு இருக்கிறார்கள் அவர்களுக்கும் அதிகம் அதிகம் துஆச் செய்வோம் என்று முடிக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ் !!!!!!!
அல்லாஹ் மிகவும் அறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!