சனி, மே 17, 2014

விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர்

அல்லாஹ்வின் திருபெயரால் ...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !


முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து , அவனை சதாவும் நினைவு கூர்ந்து காரணங்களைக் கையாள்வதுடன் , அல்லாஹ்விடம் உதவியும் தேட வேண்டும். அவன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரத்தின்பால் அனைத்து நிலையிலும் தேவையாகிறோம் என்பதை  உணர்ந்து கொள்ள வேண்டும்.


உண்மை முஸ்லிமின் இதயம் விழித்திருக்கும். அவரது அறிவுக்கண் திறந்திருக்கும். உலகில் அல்லாஹ்வின் படைப்பினங்களிலுள்ள நுட்பங்களின்பால் அவர் தனது சிந்தனையைச் செலுத்துவார். இதனால் மறைந்திருக்கும் மகத்தான அல்லாஹ்வின் உதவிதான் இப்பிரபஞ்ச இயக்கத்தையும், மனிதர்களின் அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக்குகிறது என்று உறுதி கொள்வார் . இதனால் தான் அல்லாஹ்வை எல்லா நிலையிலும் நினைவுகூற  வேண்டியவராக இருக்கிறார். அவர் அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலை வாழ்வின் அனைத்து சந்தர்பங்களிலும் உணர்கிறார். இது அவரது ஈமானைப்பலப்படுத்துகிறது . அவன் மீதே நம்பிக்கைகொள்ள காரணமாக அமைகிறது.


வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

இத்தகையோர் [தங்கள்] நிலையிலும், இருப்பிலும் படுகையிலும் அல்லாஹ்வையே நினைத்து , வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதைச் சிந்தித்து எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணுக்காகப் படைத்துவிடவில்லை. நீ மிகத் தூயவன். [நரக] நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக...                                      [அல்குர் ஆன்  3..190,191]


இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிவார்

உண்மை முஸ்லிம் தனது அனைத்து சந்தர்பங்களிலும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு , அவனைப் பணிந்து அஞ்சி நடக்கிறார். தனது விருப்பத்திற்கு மாறாக இருப்பினும் அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து, எந்நிலையிலும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறமாட்டார் . மேலும்  அவரது விருப்பத்திற்கு மாற்றமாக இருப்பினும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையே  ஏற்பார். அல்லாஹ் அவனது தூதரின் வழிகாட்டுதலிலுள்ள சிறிய, பெரிய ஒவ்வொரு விஷயத்தையும் எந்தவித பாகுபாடுமின்றி பின்பற்றுவார்  .

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் ..  ''நான் கொண்டு வந்ததற்கேற்ப தனது மனோஇச்சையை  மாற்றிக் கொள்ளாதவரை உங்களில் ஒருவரும் விசுவாசியாக மாட்டார். ''                ]புகாரீ , முஸ்லிம்]

ஆனால் உம் இறைவன் மீதும் சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனதில்  எத்தகைய அதிர்ருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிப்படாத  வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக மாட்டார்கள்.
அல்குர் ஆன் ..4,65]

ஈமான் என்பது அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கட்டளைகளை முழுமையாக ஏற்று பூரணமாக அடிபணிவதாகும்  . இந்த இரண்டுமின்றி ஈமானும் இல்லை, இஸ்லாமும் இல்லை. உண்மை முஸ்லிமின் வாழ்வில் அல்லாஹ்வின் நேர்வழியைப்  புறக்கணிப்பதும் , அவனது தூதருக்கு மாறு செய்வதும் இருக்க முடியாது.  இது தனி முஸ்லிமிடமும் , அவருக்குக் கட்டுப்பட்ட அவரது குடும்பத்தினர் வாழ்விலும் காணப்படும் சிறப்புத் தன்மையாகும்.

தன் அதிகாத்தின் கீழ் உள்ளவர்களிடம் தனது பொறுப்பை அறிவார்

ஒரு முஸ்லிமின் அதிகாத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் அல்லாஹ் இன்னும்  அவனது தூதரின் கட்டளைகளில் அலட்சியம் மற்றும் குறைபாடுகள் ஏற்பட்டால் , அதற்கு அந்த முஸ்லிம் பொறுப்பாளியாகி இறைவனால் விசாரிக்கப்படுவார்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. '' நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களே  !  நீங்கள் அனைவரும் உங்களின் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்''.                              [புகாரீ]

தனது பொறுப்பை உணர்ந்திருக்கும் முஸ்லிம் தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளில் வரம்பு மீறுவதைச் சகித்துக்கொள்ள மாட்டார்.  அவரால் இது விஷயத்தில் பொறுமை காக்கவே முடியாது . அது எத்தகு  விளைவுகளை ஏற்படுத்தினாலும் சரியே  . அந்த தவறை அகற்றுவதில் தீவிரமாக இருப்பார். கடமையில் அலட்சியம் செய்யமாட்டார் . தனது ஈமானின் பலவீனம் கொண்ட, ஆண்மையற்ற கோழை  மட்டுமே தனது அதிகாத்தில் உள்ளவர்களின் வரம்புமீறலை சகித்துக்கொள்ள முடியும்.

அல்லாஹ் மிக அறிந்தவன் .
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!