வெள்ளி, ஆகஸ்ட் 05, 2016

உதவி [அண்ணல் நபி[ஸல்]அவர்கள் ]

உதவி [அண்ணல் நபி[ஸல்]அவர்கள் ]
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
ஏழைகளுக்கு உதவுவதில் அண்ணல் நபி [ஸல்] அவர்களைப்  போன்றவர்களை நாம் காணவே முடியாது! அவர்களின் நபித்துவ வாழ்க்கை துவங்குவதற்கு முன்பே, இதில் அவர்கள் முன்னோடியாகவே திகழ்ந்தார்கள். பண வசதி மிக்க பெண்மணியான கதீஜா [ரலி] அவர்களைத் திருமணம் முடித்தும் கூடச் சில நாட்களில் அவர்கள் ஏழையாகவே காட்சியளித்தார்கள் . எவ்வளவு செல்வம் இருந்தாலும் அது இல்லாதவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளைக் கொண்டதால்தான் அவர்களின் அனைத்துச் செல்வங்களும் செலவழிந்தன.

இப்படி அவர்களின் வாழ்க்கையையே ஏழைகளுக்காக அற்பணித்தார்கள் . அவர்களின் வாழ்க்கையை நாம் மேலோட்டமாக பார்த்தால் கூட இதை விளங்கலாம்.


அண்ணல் நபி [ஸல்] அவர்களிடம் ஏதாவது கேட்டு, இல்லை என்று ஒரு போதும் சொன்னதில்லை என்று அவர்களின் அன்பு தோழர் கூறுகிறார்.
நூல்.புகாரி]

வறியவர்கள் அவர்களிடம் போய்க்  கேட்டுவிட்டால் எதையும் தராமல் இருக்க மாட்டார்கள். எதையாவது கொடுப்பதற்க்கே அவர்கள் முயற்சிப்பார்கள். தமக்கு இல்லாவிட்ட்டாலும் அடுத்தவர்களுக்கு கொடுக்கவே விரும்புவார்கள்.

நாம் நிறைய சம்பவங்கள் கூறலாம்..
ஒரு வீட்டில் இல்லை என்று வந்தாலும் அடுத்தவீட்டிற்கு அனுப்பி எப்படியாவது அவரின் தேவையை நிறைவேற்ற எண்ணியிருப்பது அவர்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் கொண்டுள்ள ஆர்வத்தைத் தவிர வேறு எதனையும் காட்டவில்லை.
எனக்கு உஹத் மலையளவு தங்கம் இருந்தால், அது மூன்று இரவுகளுக்கு  மேல் என்னிடம் இருப்பதை நான் விரும்ப மாட்டேன் என்று கூறுகிறார்கள்.
நூல்..புகாரி]

எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் திருப்தியடையாதவன் மனிதன். இன்னும் சேர்க்க வேண்டும்,, இன்னும் சேர்க்க வேண்டும் என்று பேராசை கொள்பவன். இப்படி மனிதர்கள் இருக்க, மூன்று நாட்கள் தம் வீட்டில் தங்கத்தை வைத்துக் கொள்ள விரும்பாதவர்கள்,  நல்வழியில் செலவிடப்பட வேண்டும் என்று விரும்பும் சுயநலமற்றவர்கள் அந்த மாமனிதர் முஹம்மது [ஸல்] அவர்கள்!

மேலும்  அவர்கள் ஜாதி பேதம் பார்க்காமல் அனைவருக்கும் உதவி செய்திருக்கிறார்கள். இவர்களின் பெருந்தன்மையைப் பார்த்தே பலர் இஸ்லாத்தைத் தழுவியிருக்கிறார்கள்.

ஒரு மனிதர் அண்ணல் நபி [ஸல்] அவர்களிடம் யாசித்தார் . அவருக்குத் தர்மப் பொருளிலிருந்து நிறைய ஆடுகளைக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். இதை பெற்றுக் கொண்டு சென்ற அம்மனிதர் தம் கூட்டத்தினரிடம் ,  ''என் கூட்டத்தினர்களே! நீங்கள் இஸ்லாத்தைத் தழுவுங்கள்! முஹம்மது அவர்கள் அள்ளி  வழங்குகிறார் 'என்று கூறினார்.
நூல்.முஸ்லீம்]

முஹம்மது [ஸல்] அவர்கள் அடுத்தவர்களுக்கு உதவும் அழகியகுணம் அன்று மாற்றுக்  கொள்கையுடையவர்களைக் கூட கவர்ந்தது.

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் மரணிக்கும் வரை தீட்டாத கோதுமை ரொட்டியைத் தொடர்ந்து இரு நாட்கள் வயிறார உண்டதில்லை என்று அவர்கள் துணைவியார் ஆயிஷா [ரலி] கூறுகிறார்கள்.
நூல்..புகாரி, முஸ்லீம், திர்மிதி]

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நாளைக்கென்று எதையும் சேமித்து வைக்க மாட்டார்கள்.
நூல்.. திர்மிதி]

அடுத்தவர்களுக்குத் தம் செல்வத்தையெல்லாம் வழங்கிவிட்டு இவ்வளவு துன்பப்பட்ட ஒரு சமுதாயத் தலைவரை நீங்கள் எந்த வரலாற்றிலும் காண முடியாது.
தாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்திருப்பதுடன் மற்றவர்களையும் உதவி செய்யும் படி அவர்கள் தூண்டி, நல்ல ஒரு சமுதாயத்தை ஏற்படுத்தினார்கள்.
நாம் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் உம்மத்தவர்கள் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். இன்னும் நம்மிடத்தில் வரவில்லை என்பதின் ஒரு பெரிய ஆதங்கம்.
இது ரொம்ப  சுருக்கமான செய்திகள். விரிவாக எழுதவேண்டும் என்றால் நம்மால்  அது இயலாது உங்களால் படிக்கவும் முடியாது!
அல்லாஹ் மிக்க அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!