சனி, அக்டோபர் 29, 2016

ஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் !

ஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் !
அல்லாஹ்வின் திருப்பெயரால்......

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
''எவன் அல்லாஹ்வின் திருமறையைப் பின்பற்றுகின்றானோ அவன் இம்மையிலும் வழிகெட மாட்டான்,, மறுமையிலும் நஷ்டம் அடைய மாட்டான்''. பின்னர், இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கள் ''எவன் எனது நேர்வழியைப் பின்பற்றுவானோ அவன் வழி  தவறவும்  நஷ்டமடையவும் மாட்டான்'' [20..123] எனும் திருமறை வசனத்தை ஓதினார்கள்.
[மிஷ்காத் ]

ஒரு தாய் தன்  பிள்ளையை நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்று விரும்புவாள். ஒரு தாய் தன் பிள்ளையை அதட்டவும் செய்வாள், அடிக்கவும் செய்வாள் , அணைக்கவும் செய்வாள்.  தாய்க்கு பிடிக்காத காரியத்தை பிள்ளை செய்யும்போது , அப்பொழுது லேசாக அதட்டுவாள் , பிள்ளை கேட்காமல் மீறிச்  செய்யும்போதும் , அந்த தாய் அடிக்கவும் செய்வாள்.  பிள்ளை பயந்து அழும்போது , அந்த பிள்ளையை தூக்கி நெஞ்ஜோடு  நெஞ்சாக அனைத்து  கொஞ்சி இரக்கம் காட்டுவாள்.  அந்த பிள்ளையின் அழுகையை நிறுத்த சிரிப்பூட்டுவாள். இது தாயின் இயல்பான குணம்!


சிலநேரங்களில் , பிள்ளை செய்யக்கூடாத காரியத்தை செய்யும்போது , தாய்க்கு கோபம் வரும்படியான சேட்டைகள் செய்யும்போது கொஞ்சம் பிள்ளை வரம்பு மீறி நடக்கும்போது, தாய் சகித்துக்கொண்டு பொறுமையாக இருக்கிறாள். தாய் கண்டுகொள்ளவில்லை என்று பிள்ளை நினைத்து கொண்டு மறுபடியும் பிள்ளை சேட்டைகள் செய்கிறது. தாய் பொறுத்து பார்த்து ''இப்படியே விட்டால் வாழுதானமும், சேட்டைகளும் அதிகமாகிவிடும் என்று எண்ணி அந்த பிள்ளையை கண்டிக்கிறாள் ''.

அல்லாஹ் ரொம்ப இரக்கமுள்ளவன் , கருணையுள்ளவன்.  பல ஆயிரம் தாயைவிட அல்லாஹ் இரக்கம் காட்டக்கூடியவன், கருணை காட்டக்கூடியவன்.
ஒரு அடியான் தவறு செய்யும்போது, அவனை லேசாக தண்டிக்கவும் செய்வான். அல்லாஹ்வின் பக்கம் திரும்பும்போது அந்த அடியானை  அரவணைக்கவும் செய்வான். அடியான் வரம்பு மீறும்போது , அல்லாஹ் கோபப்படுகின்றான். அந்த அடியானை சீர்திருத்துவதற்காக  அவனுக்கு சோதனையும் தருகின்றான். அந்த அடியான் அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்காக அல்லாஹ் சில கஷ்டங்களையும் கொடுக்கின்றான்.  அடியான் உணர்ந்து , திருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ் அவனின் பாவத்தை மன்னிக்கின்றான்.

அல்லாஹ் அடியானிடமிருந்து விரும்புவது .. அடியான் நன்றியுள்ளவனாக இருக்கவேண்டும்! கடமைகளை செய்யவேண்டும்! சில விஷயங்களை ஹராமாக்கி [விலக்கி ] இருக்கின்றான்,, அவற்றை செய்யாமல் இருக்கவேண்டும்! சில வரம்புகளை நிர்ணயித்திருக்கின்றான் . அவற்றை மீறிச் செய்யாமல் இருக்கவேண்டும்! சில விஷங்களை குறித்து மறதி  ஏதுமின்றி மௌனமாக இருக்கின்றான். அவற்றை துருவி ஆராய்வதில் ஈடுப்பட வேண்டாம்!

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..  'அல்லாஹ் சில கடமைகளை விதித்திருக்கின்றான். அவற்றை வீணடித்து விடாதீர்கள்! சில விஷயங்களை ஹராமாக்கி [விலக்கி ] இருக்கின்றான்,, அவற்றைச் செய்யாதீர்கள்! சில வரம்புகளை நிர்ணயித்திருக்கின்றான். அவற்றை மீறிச் செய்யாதீர்கள்! சில விஷயங்களை குறித்து மறதி  ஏதுமின்றி மௌனமாக இருக்கின்றான். அவற்றைத் துருவி ஆராய்வதில் ஈடு பட்டு விடாதீர்கள்!''
ஆதாரம்.. மிஷ்காத் ]

ஒரு அடியான் நன்றியுள்ளவனாக இருக்கவேண்டும் என்பதற்கு அல்லாஹ்வின் தூதரிடம் முன்மாதிரி இருக்கிறது. ஒரு ஹதீஸின் கருத்து .. ஒரு தடவை ஆயிஷா [ரலி] அவர்கள்!  அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களின் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான்  , அப்படியிருக்க நீங்கள் ஏன்  பாதம் வீங்கும் அளவுக்கு தொழுகிறீர்கள்? அதற்கு நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள்  , '' நான் அல்லாஹ்வுக்கு ஒரு நன்றியுள்ள அடியானாக இருக்கவேண்டாமா? என்று பதில் கூறினார்கள். இந்த ஹதீஸ் புகாரி , முஸ்லீம் நூல்களில் இருக்கிறது.

நாமும் அல்லாஹ்வுக்கு ஒரு நல்ல அடியானாகவும், நன்றியுள்ள அடியானாகவும் இருக்க வேண்டும்! அல்லாஹ் அதிகம் அதிகம்  இரக்கமுள்ளவன் கருணையுள்ளவன்!  அந்த இரக்கமுள்ளவனுக்கு  நாமும் மாறு செய்யலாமா? அவனுடைய கட்டளைகளை புறக்கணிக்கலாமா? வரம்பு மீறி நடக்கலாமா?  காலங்கள் துரிதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மரணம் வரும் முன் அல்லாஹ்விடம் பிழை பொறுக்க தேடுவோம்! நல்ல ஸாலிஹான [இஹ்லாசுடன்] அமல்கள் செய்வோம்! நல்ல அடியானாக மாறுவோம்! அல்லாஹ்வுக்கு நன்றியுள்ளவராக எப்பொழுதும் இருப்போம்! அல்லாஹ்வைச் சந்திக்கும்போது  '' பரிசுத்த இதயத்தோடு சந்திப்போம் !

போனது போகட்டும் , இனி வரும் காலங்களில் ஒரு சிறந்த முஸ்லிமாக வாழ உறுதிமொழி எடுப்போம்! நம்மை பார்த்து மாற்று மதத்தார்கள்  இஸ்லாத்தில் தழுவ வேண்டும்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!